வெள்ளி, 25 செப்டம்பர், 2009

கனவு மெய்ப்பட வேண்டும்!

இடி விழுந்தாலும்
இடியாத
மனம் வேண்டும்.
எதிரியையும்
நேசிக்கும்
இதயம் வேண்டும்.
நல்லதே
நடக்குமென்ற
நம்பிக்கை வேண்டும்.
நினைத்ததை
நடத்தியே
தீர்வதென்ற
உறுதி வேண்டும்.
எல்லாமும்
எனக்கென்ற
எண்ணம் நீங்கி
'எல்லார்க்கும்
எல்லாமும்'
எனும் எண்ணம்
ஓங்க வேண்டும்.
'முடியாது'
என்ற சொல்
விடை பெற்று
ஓட வேண்டும்.
முயலாத பேர்களுக்கு
இடமில்லை
மண்ணகத்தில்
என்று விதி
இயற்றல் வேண்டும்.
கூராக வேண்டும்
சிந்தனை.
நேராக வேண்டும்
பார்வை.
யாராண்டால்
என்ன எனும்
அலட்சியம்
இனியேனும்
நமைவிட்டு
அகல வேண்டும்.
தமிழ் மீது
என்றென்றும்
சரியாத
காதல் வேண்டும்.
தேசத்தின் பால்
தணியாத
பாசம் வேண்டும்.
சாதி மதப்
பிரிவினைகள்
நிரந்தரமாய்
ஒழிய வேண்டும்.
மண்ணெல்லாம்
மழை
கொட்ட வேண்டும்.
ஆறெல்லாம்
கரை புரண்டு
ஓட வேண்டும்.
வயலெல்லாம்
செந்நெல்லாய்ச்
சிரிக்க வேண்டும்.
வயிறெல்லாம்
பசியாறிக்
குளிர வேண்டும்.

1 கருத்து: