செவ்வாய், 16 ஜூலை, 2013

சிந்தனை பத்து - 18


  1. துயரங்கள் உன்னைச் சூழும் பொழுது துணிவாய் எதிர் கொள். அவை உன்னைப் பக்குவப்படுத்துவதற்கு வந்ததாய் எடுத்துக் கொள். 
  2. நாம் பிறரிடம்  உரையாடும் பொழுது,  அதை அவர்கள் விருப்புடன் கவனிக்கிறார்களா என்பதைத் தெரிந்து  நமது உரையைத் தொடர்தல் நல்லது. 
  3. நடக்க,  நடக்கத்தான் பாதை உருவாகும்.  முயற்சி செய்ய, செய்ய வாழ்க்கை கைகூடும்.    
  4.  நெடுநாள் கழித்து இளமைக்கால நண்பர்களை எதிர்பாராமல் சந்திக்கும் பொழுது ஏற்படுகின்ற மகிழ்ச்சிக்கு ஈடு இணை சொல்ல முடியாது.  
  5.  வாழ்க்கையை  பாலைவனமாக்குவதும் பசுஞ்சோலையாக்குவதும் நம் எண்ணங்களே.  நல்ல எண்ணங்கள் மெதுவாகவேனும் நம்மை உயர்வு நோக்கி உந்திச் செல்லும்.                                                                                                   
  6. உதவாக்கரை  என்று  ஒருவரை  ஒதுக்கி , ஓரங்கட்டி  விடாதீர்கள் . பிறவியில்  அப்படி  யாரும்  இல்லை . சூழ்நிலை  காரணமாக  ஒருவருக்குள்  இருக்கும்  திறமைகள்  வெளிப்படாமல்  இருக்கலாம் . சூழ்நிலை  கனியும்  பொழுது , அவருக்குள்  இருந்தும்  ஒரு  அற்புதமான  ஆற்றலாளன்  வெளிவரக்கூடும் .
  7. எளிமை என்பது ஒரு விலைமதிப்பற்ற ஆபரணம். அதை அணிந்ததனால் தான் காந்தி, காமராசர் போன்றோர்  உலகெங்கும் அறியப்படுகின்றனர்.
  8. அலமாரியில் உள்ள புத்தகங்களைத்  தொட்டு, எடுத்து, தூய்மைப்படுத்தி, நல்ல முறையில் ஒழுங்காக அடுக்கி வைக்கும் பொழுது மனதில் மகிழ்ச்சி மலரும். புத்தகங்களுக்கும் நமக்குமான உறவு விசாலமடையும்.   
  9. இயற்கையை  அழிப்பதால்  ஏற்படும் இழப்புக்கள்  பெரிய  அளவில்  நம்மைப் பாதிக்காமல்  இருக்கலாம். ஆனால்  வருங்காலத்  தலைமுறையினர் மழையையே  பார்க்காத  அவலத்தைச்  சந்திக்கப் போகிறார்கள்  என்பது மட்டும்  மகா சத்தியம்.
  10. அதிகார போதை  அபாயகரமானது . அதை உங்களுக்குள்ளே  அனுமதிக்காதீர்கள் . உங்களை  அது  படுகுழியில்  தள்ளிவிடும் . அன்பு  ஒன்றே  நிலையானது . அன்பு  காட்டுங்கள் . மனம்  லேசாகும் . வாழ்க்கை  சுகமாகும் .