சனி, 28 ஜனவரி, 2006

முன்னொரு காலத்தில்

(1)

தோட்டத்து வேலியருகே
நின்றபடி
தாத்தா
அப்பாவிடம் சொன்னார்,
"பார் அங்கே,
மரத்துக்கு மரம்
வேக வேகமாக தாவுதே
அது தானய்யா
செம் போத்து...
அடர்ந்த செவப்பும்
கொஞ்சம் கறுப்புமாய்
எவ்வளவு அழகு பாத்தியா?"
(2)
மிருகக் காட்சி சாலையில்
அப்பா
என்னிடம் சொன்னது,
"கூண்டுக்குள்ளே
சிவப்பாகவும்
சோகமாகவும்
உட்கார்ந்திருக்கே,
அது தானப்பா
செம் போத்து."
(3)
பொருட்காட்சி சாலையில்
ஒரு மாலைப் பொழுதில்
நான்
மகனிடம் சொன்னேன்,
"நன்றாகப்
பார்த்துக்கொள்,மகனே,
அதோ,அந்தக்
கண்ணாடிக் குடுவையில்
பாதுகாக்கப்பட்டிருக்கிறதே...
அது தான் தம்பி,
அந்தக் காலத்து
செ...ம்...போ...த்...து."

வியாழன், 26 ஜனவரி, 2006

முன்னறிவிப்பு

சுங்கத்திலிருந்து
கிழக்காய் நீளும்
சாலையின் முடிவில்
பிருமாண்டமான
பிள்ளையார் சிலை.
சாலையின் ஒரு புறத்தில்
திருமணக் கூடமாய்
மாறியிருந்தது
பேர் பெற்ற
படப் பிடிப்பு நிலையம்.
எதிர் புறத்திலோ
பெரிய பள்ளிக்கூடம்.
சாலை முழுதும்
நாள் முச்சூடும்
வாகனங்களின்
ஓயாத போக்கு வரத்து
இரைச்சலோடு.
காலை,மாலை
இரு வேளையும்
அச்சமற்று சாலை கடக்கும்
பள்ளிக் குழந்தைகள்....
சாலையின்
தொடக்கத்தில்
அமைந்திருந்த
கல்லறைத்தோட்டத்தின்
முன் வாசலில்
"இங்கு...
சவப்பெட்டிகள்
தயார்!"
என்றொரு
அறிவிப்புப் பலகை.....
பயணிப்போரின்
மனங்களை
அச்சுறுத்தியபடி.

புதன், 25 ஜனவரி, 2006

அன்றொரு மழைநாளில்....

முந்தின நாள் ராத்திரி
இடி மின்னலுடன்
கனத்த மழை.
அதிகாலையும் நீடித்த
சின்னத் தூறலில்
சணல் சாக்கு
தலைக்குக் குடையாக
காடு காடாய் ஓடி
வரப்புகளில் புடைத்திருந்த
காளான்களை
லகுவாகப் பிடுங்கி
மடியில் சேர்த்து
வீட்டுக்கு வந்தால்
அமர்க்களமான வரவேற்பு.
கறிக் குழம்பு
தோற்கும்படிக்கு
அம்மாவின்
காளான் குழம்பு
ஓ...இன்று
அந்தக் காளான்களையும்
காணோம்....
கன ஜோராய்
குழம்பு வைக்க
அம்மாவும் இல்லை!

சனி, 21 ஜனவரி, 2006

ஒன்று மற்றொன்றாக

விதையின்
விரிவு
மரம்.
மரத்தின்
சுருக்கம்
விதை.

ஞாயிறு, 1 ஜனவரி, 2006

நான் நானில்லை

பிறந்த பொழுது
ஒருவனாய் பிறந்தேன்
வாழ்ந்த பொழுது
பலராய் வாழ்ந்தேன்
இவன் இவன் தான் என்று
எவரும் கூற முடியாத படிக்கு.
இறந்த பொழுது
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொருவனாய் இறந்தேன்.