சனி, 31 ஜனவரி, 2015

உடலுக்குள் ஒரு விவாதம்

ஒரே இரைச்சல். உடல் உறுப்புகளுக்கு இடையே கடுமையான விவாதம். தங்களில் யார் பெரியவர் என்பதே விவாதத்தின் தலைப்பு. "நாங்கள்  இல்லாவிட்டால் நடக்க முடியாது . ஓட முடியாது. நிற்கவும் முடியாது. உடலைத் தாங்குவதே நாங்கள் தான் " என்று கால்கள் முழங்கின. கைகள் சும்மா இருக்குமா? "நாங்கள் இல்லாவிட்டால் எந்தப் பொருளையும் எடுக்க முடியாது . வைக்க முடியாது. யாருக்கும் உதவ முடியாது. நட்புக்கு உதாரணமாக வள்ளுவரே எங்களைப் பாடியிருக்கிறார். நாங்கள் இல்லாவிட்டால் ரேகை பார்த்து சோதிடம் பார்த்து பல பேர் பிழைக்க முடியாது " என்று ஓங்கி அடித்துச் சொல்லின கைகள். இதைக் கேட்ட எலும்புகள் ,"நாங்கள் இல்லாவிட்டால் நீங்கள் எப்படி இயங்க முடியும்?இயக்கங்களுக்குக் காரணமானவர்களே நாங்கள்  அல்லவா? என்று எம்பிக் குதித்தன. தசைகளுக்குப் பொறுக்க முடியவில்லை. "எலும்புகளே, ஏன் இந்தத் தற்பெருமை? நாங்கள் சுருங்கி,விரிந்தல்லவா உங்களை இயக்குகிறோம்?" என்று எதிர்க் குரல் கொடுத்தன. " கொஞ்சம் நிறுத்துகிறீர்களா உங்கள் சுய புராணத்தை? நாங்கள் கடுமையாக உழைத்து உணவுப் பொருள்களை செரித்து எளிய பொருள்களாக மாற்றுவதை மறந்து விடாதீர்கள்." என்று ஆர்ப்பரித்தன செரிப்பு உறுப்புகள். உடனே நுரையீரல் ,"செரித்த உணவை எரித்து சக்தியை உற்பத்தி செய்வதற்கு ஆக்சிஜனை அனுப்புவது நானல்லவா?"என்று தன் முக்கியத்துவத்தை நிலைநாட்ட முயன்றது. இதைக் கேட்டதும் இதயத்தின் துடிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. "செரித்த உணவையும் ஆக்சிஜனையும் நானல்லவா ரத்த ஓட்டத்தின் மூலம் எல்லாத் திசுக்களுக்கும் அனுப்பி வைக்கிறேன்? "என்று தன் தரப்பு நியாயத்தை முன் வைத்தது இதயம். "நாங்கள் அமைதியாக இருப்பதால் எல்லோரும் ஒரேயடியாகக் குதிக்கிறீர்களே? நீங்கள் உருவாக்கும் கழிவுப் பொருள்களை நாங்கள் வெளியேற்றாவிட்டால் என்ன நடக்கும் என்பதை ஒரு வினாடி யோசித்துப் பாருங்கள். உடல் நாறிப் போய்விடும் ." என்று எச்சரிக்கை செய்தன கழிவு உறுப்புகள்."உங்கள் எல்லோர்க்கும் ஒரு போர்வையாக பாதுகாப்பு கொடுத்து வெயிலிலிருந்தும் குளிரிலிருந்தும் கிருமிகளிடம் இருந்தும் காப்பாற்றுகின்ற என்னை மறந்து விட்டீர்களே? என்று பரிதாபமாகக்  கேட்டது தோல் . இப்படியாக பல்,கண்,காது முதலான பல உறுப்புகளும் தங்கள் தரப்பு நியாயங்களை உரத்த குரலில் எடுத்துக் கூறின. இதுவரை அமைதி காத்த மூளை  மெல்லிய குரலில் ,ஆணித்தரமாகச் சொன்னது, "உங்களுக்கெல்லாம் கட்டளையிட்டு செயல்பட வைத்து உடலின் சமநிலையைப் பராமரிக்கிற மிகப் பெரிய பொறுப்பு என்னுடையது. என்னைத் ' தலைமைச் செயலகம் ' என்பார்கள். இதை எல்லாம் மறந்துவிட்டு வெட்டிக் கூச்சல் போடுகிறீர்களே? "
                                            எல்லா உறுப்புகளும் தலை கவிழ நின்றன. உடனே மூளை, "சரி,சரி,எல்லோரும் அவரவர் வேலைகளைச் செய்யத் தொடங்குங்கள் "என்று கட்டளை பிறப்பித்தது.

திங்கள், 26 ஜனவரி, 2015

அன்பென்ற மொழியாலே

வார்த்தைகளால் யாரையுமே பழிக்காதே
வசவுகளால் இதயங்களைக் கிழிக்காதே
நல்லுறவை வன்முறையால் இழக்காதே
நட்புறவை இழிமொழியால் துளைக்காதே

அன்பென்ற மொழியாலே அகிலத்தை இணைக்கலாம்
அறிவிலாப் போர்ப்பூசல் நிகழாமல் தடுக்கலாம்
எல்லோரும் ஓரினமாய் எப்போதும் கூடலாம்
ஏழைபணக் காரரென்ற பேதத்தை ஒழிக்கலாம்

பழிக்குப்பழி என்பதெல்லாம் நல்ல வழியில்லை
பகையுணர்வு கொண்டுவரும் மாளாத தொல்லை
மறக்காதே என்றைக்கும் வள்ளுவனின் சொல்லை
மனிதர்தமை நேசிக்க இல்லையொரு எல்லை

ஏழைக்கு என்றென்றும் நேசம் காட்டு
எதிரிக்கும் நட்புடனே கரத்தை நீட்டு
எவ்வுயிரும் இன்பமுற அன்பை மீட்டு
என்றுமே அன்புவெல்லும் எனும் தமிழ்பாட்டு

சலித்தாலும் சபித்தாலும் துயரங்கள் தீராது
சன்மானம் கொடுப்பதனால் தரித்திரமும் போகாது
எதிர்நின்று போராடி வாழ்க்கையிலே வெல்லலாம்
எண்ணற்ற வெற்றிகளை உழைப்பாலே அள்ளலாம்

முன்னேறத் துடிப்பார்க்கு வேண்டும்நல் முயற்சி
முதுமையிலும் நலமாக தேவையுடற் பயிற்சி
உழைப்போர்க்கு என்றுமுண்டு வாழ்விலே உயர்ச்சி
உண்மையே உரைப்பார்க்கு ஏதிங்கு தாழ்ச்சி?
(வசந்த வாசல் கவிதைச் சிறகுகள்-2015)


  

இது ஆத்திச் சூடி அல்ல

அன்பே வெல்லும்            
ஆதவன் வணங்கு
இனியன மொழி
ஈரம் நெஞ்சில் கொள்
உறவு மதி
ஊருக்கு உழை
எட்டுக சிகரம்
ஏணியாய் இரு
ஐயம் நீக்கு
ஒன்றே உலகம்
ஓதுதல் ஒழியேல்
ஔவை வழி நில்

கணினி கைக்கொள்
காவியம் செய்
கிசு கிசு தவிர்
கீழ்மை விலக்கு
குற்றம் ஒதுக்கு
கூர்மதி பெறு
கைத்திறன் பெருக்கு
கொல்லல் ஒழி
கோபம் அடக்கு

சங்காய் முழங்கு
சாதி வெறு
சிரம் உயர்த்தி நட
சீறுதல் கவசம்
சுவர்களை உடை
சூது வெறு
சைவம் நன்று
சொற்றிறம் பழகு
சோம்பல் கெடுதி

தன்னை அறி
தானம் செய்
திங்கள் போற்று
தீயன மறு
தன்னலம் தவிர்
தங்கம் வெல்
தடை உடை
தனிமை கொடுமை
தலைமை கொள்

நல்லன எண்ணுக
நாட்டை நேசி
நித்திரை குறை
நீதி தவறேல்
நுங்காய் பயனளி
நூலகம் செல்
நோதல் தவிர்

தாயே தெய்வம்
தாமரை அழகு
திங்கள் போற்று
தூண் என நில்
தேன் நல்மருந்து
புனிதனாய் வாழ்
புதுமை காண்
பழமை நன்று

அன்பு செய்
அறிவை விரி
அருள் பெறு
அல்லல் ஒழி
இதமாய் பழகு
இழிசெயல் விலக்கு

வல்லமை வளர்
வன்முறை வெறு
வண்டமிழ் விரும்பு
வானினும் உயர்
விருந்து பேண்
விழுதென உதவு
வைதல் தவறு
வையம் நேசி

பூமியாய் பொறு
பெண்மை போற்று
பேதமை விலக்கு
பேடிமை நீக்கு
எளிமை போற்று
ஏற்றமுற வாழ்      



    

வெள்ளி, 16 ஜனவரி, 2015

அழகின் சிரிப்பு

வான் கிழிக்கும் ஒளிமின்னல் கீற்றினிலும்
    வைரமாய் ஒளிர்கின்ற விண்மீன் தமிலும்
தேன்தமிழில் பாடுகின்ற பெண்ணின் குரலிலும்
      தெறிக்கின்ற நீர்த்துளியில் தெரியும் உருவிலும்
மீன்பாய்ந்து நீர்கிழிக்கும் சாகசச் செயலிலும்
        மின்மினியின் வழிகாட்டும் வெளிச்சம் தனிலும்
கானுறையும் பெண்மானின் மிரட்சி தனிலும்
        காண்கின்றார் பாவேந்தர் அழகின் சிரிப்பு!

ஊரோர மாஞ்சோலைக் குயிலின் பாட்டில்
     உருண்டோடும் சகடத்தின் ஒலியின் அதிர்வில்
ஏர்பிடித்துச் செல்கின்ற உழவன் நடையில்
     எழுகின்ற கதிரோனின் இளங்காலைத் தோற்றத்தில்
சீர்மிக்க சித்திரையின் முழு வெண் நிலவில்
     செங்கரும்பு தருகின்ற தித்திக்கும் சாற்றில்
கார்கால ஆண்மயிலின் கண்கவரும் ஆட்டத்தில்
    காண்கின்றார் பாவேந்தர் அழகின் சிரிப்பு!

ஓடுகின்ற மான்கன்றின் ஒய்யார நடைதன்னில்
     ஒற்றுமையாய் பகிர்ந்துண்ணும் காகத்தின் வாழ்முறையில்
பாடுகின்ற அருவிகளின் தொலைதூரச் சத்தத்தில்
      பகலோனின் வெப்பத்தால் பனிஉருகி வழிகையிலே
தேடிவந்த இரைதன்னை பறவையினம் பகிர்கையிலே
       தென்னை இளநீரதனின் தித்திக்கும் சுவையினிலே
கூடிநின்று குலவையிடும் மங்கையரின் எழிற்குரலில்
       காண்கின்றார் பாவேந்தர் அழகின் சிரிப்பு!