வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

மரணத்தில் ஒரு உதயம்

தேவலோகத்து
பாரிஜாதத்தை,
முகர்ந்து ரசிக்காமல்
மூர்க்கத்தனமாய்
கசக்கி மிதிப்பதற்கு
குடிகாரக் குரங்குக்கு
கொடுத்தது யார்?

கருவறையில் சுமந்து
தொட்டிலில் தாலாட்டி
மடி மீது சாய்த்து
மார்போடு சேர்த்து
வற்றாத அன்பில்
வாரி அணைத்து
'அ' எழுதிய போதும்
ஆறாம் வகுப்பில்
நுழைந்த போதும்
கல்லூரி சென்று
கலைப் பட்டம்
பெற்ற போதும்
அகமகிழ்ந்து
அந்நாட்களைப்
பொன்னாட்கள் என
பூரித்த அன்னை
எப்படி இப்படி
அல்லிப் பூவை
புல்லன் ஒருவனுக்கு
பொசுக்கி எறிய
பரிசளித்தாள்?

முதுகுப் பல்லக்கில்
சுமந்து
பள்ளிக்கு
அழைத்துப் போய்
"ராசாத்தியை"
"ரத்தினத்தை"
படிக்க வைத்து
அவளின் வள்ர்ச்சியில்
ஒவ்வொரு
கட்டத்தையும்
ரசித்த
அப்பனுக்கு
ஏன் இப்படி
தப்பாய்
ஒரு தடுமாற்றம்
கோதையின்
காவலுக்கு
ஏன்
கொடும் பாம்பைத்
தேர்ந்தெடுத்தான்?

பையனுக்கு
"சர்க்கார் வேலை"
"கை நிறையச் சம்பளம்"
"வீடு அரண்மனை போல"
"வேலைக்காரி வீட்டோட"
என்பது போன்ற
நடுத்தர வர்க்க
கவர்ச்சி மொழிகளின்
வலை விரிப்பில்
பெற்றவர்கள்
மாட்டிக் கொண்டதன்
விளைவு
ஒரு மனிதப் பெண்ணுக்கும்
மானிடத் தோல் போர்த்திய
மிருகத்துக்கும்
நரகத்தில்
நிச்சயிக்கப்பட்ட
திருமணம்
ஒரு நல்ல நாளில்{?}
ஒரு நகரத்துக்
கல்யாண மண்டபத்தில்
நிறைவேறியது.

முதலிரவு
ஒரு பெண்ணுக்கு
நல்ல துணைவன்
என்னும்
முதல் வரவு
என்பார்கள்.
ஆனால்.....
இந்த
தங்க மயிலுக்கோ,
அந்த இரவு
முடிக்கத் தெரியாத
தொடர் கதையின்
முதல் அத்தியாயமாயிற்று.

பூவைக்கு
புகை மீது
தீராத பகை.
வாய்த்த கணவனோ
வண்டி வண்டியாய்
புகைக்கின்ற
கரி எஞ்சின்.
போதாததற்கு
குடியோடு
எப்போதும்
அவனுக்குக்
குடித்தனம்.
சாராயத்தை
அவன் குடித்தான்
சாராயம்
அவனைக் குடித்தது.
தெம்பில்லாத உடம்பு
அன்பில்லாத மனம்
அவள்
அவனுக்கு
வெறும்
இரவுத் தேவை
மட்டுமே.

அந்தக் குடும்பத்தில்
அவளின் வரவு
ஒரு வேலைக்காரிக்கு
சீட்டுக் கிழித்துக்
கொண்டாடப்பட்டது!

அவளின்
மாமியார்
ஆஸ்த்மா நோயாளி
மட்டுமல்ல-
ஆத்மா நோயாளி கூட
என்பது
அவளுக்குத் தெரிய
சில நாட்களே
ஆயின.

"கொண்டு வா"
என்பது
மருமகளுக்கு
மாமியார்
ஓதிய
புதிய
பொருளாதார மந்திரம்!

மாமனாரோ
அந்த வீட்டில்
அல்லி சாம்ராஜ்யத்து
ஆணைகளுக்குக்
காத்திருக்கிற
அலி!

கொண்டு போகவே
பிறப்பெடுத்த
நாத்தனார்;
அவளுடைய
தொடை ந்டுங்கிக்
கணவன்;
அவர்களின்
தொண தொணப்புக்
குழந்தைகள்.
இவர்கள்
அடிக்கடி வந்து
அவளை
ஆட்டுவிக்கிற
கொள்ளிவாய்ப்
பிசாசுகள்!

பட்டையின் மீது
கணவன்
காட்டிய பரிவில்
நூற்றிலொரு பங்கு
கொண்டவளின் மேல்
படர்ந்திருக்குமானால்
அவள்
பரவசலோகத்தில்
பட்டுப்பூச்சியாய்
பறந்திருப்பாள்.

நீவிக் கொடுக்கவேண்டிய
நீலாம்பரக் கன்னத்தில்
எத்தனை தடவை
தோலுரித்தன
ஆணாதிக்க
அடக்குமுறைக் கரங்கள்!
தழுவ வேண்டிய
தங்க உடலில்
காரணமில்லாமல்
தர்ம அடிகள்!

வெந்நீரைக்
கொட்டினாற் போல்
வெறித்தனமான
வார்த்தைகள்.
கடித்துக்
குதறுவது போல்
கடுகடுப்பான
பார்வைகள்.
மொத்தத்தில் அவள்
அந்தக் குடும்பத்தில்
வெட்ட வெளியில்
நிற்கும்
பட்ட மரம்.
வாழ்க்கைச் சுவரோடு
அன்புப் பசை
இல்லாததால்
ஒட்ட இயலாத
வெற்றுக்காகிதம்!

சகல கொடூரங்களையும்
சந்தித்த பின்னரும்
அவள்
சாதிக்கவில்லை எதையும்-
மெளனத்தைத் தவிர.
பெற்றவரிடம் கூட
பெருமூச்சு விட்டதில்லை.
உற்றவர்கள்
உறவினர்கள்
மற்றவர்கள்,
"ஏனடி இப்படி
எலும்பும் தோலுமாய்?"
என்று கேட்டால்
பதிலாக
கட்டாயத்தில்
வரவழைக்கப்பட்ட
வெற்றுப் புன்னகை
மட்டுமே!


இது அவளின்
வெளித் தோற்றம்
ஆனால்......
உள்ளேயோ......
எந்தப்பாதையும்
எங்கோ
ஓரிடத்தில்
முடிந்துதான் தீரும்
ஊதப்படும் பலூன்
ஒரு கட்டத்தில்
உடைவது
என்பது
இயற்கையின் நியதி
எரிமலையின்
காத்திருப்பு
வெளிக்கிளம்பும்
துடிதுடிப்பில்தான்.
ஆம்,
மங்கையின்
பொங்கிய உள்ளத்தில்
பொறுமை
தன் எல்லைக்கோட்டில்
செக்கச்சிவந்து
நின்று கொண்டிருந்தது.

முகம் பார்க்கிற
கண்ணாடி முதல்
படுத்துச்
சுகம் காண்கிற
கட்டில்வரை
கொண்டுவந்து
கொட்டிய பின்னரும்,
"என்ன கிழித்தான்
உன் அப்பன்?"
என்ற பாணியில்
மாமியார்க்காரி
வசவு வார்த்தைகளை
வாரியிறைத்த போது
ஒரு டிகிரி..........
படுக்கை அறையில்
புனித உணர்வுகளை
புறக்கணித்து விட்டு
பரத்தையாக எண்ணி
கசக்கப்பட்ட போது
ஒரு டிகிரி........
பெற்றவரைத்
தூற்றிய போது
ஒரு டிகிரி.........
பிறந்தகத்தை
ஏசிய போது
ஒரு டிகிரி........
இப்படி
ஒவ்வொரு டிகிரியாய்
உயர்ந்து உயர்ந்து
வெறுப்பு எரிமலை
அக்னிக் குழம்பு
கொதிநிலையை எட்டி
அவளின் இதயத்தை விட்டு
வெளிக்கிளம்ப
துடித்துக்கொண்டிருந்த
வேளையில் தான்........
அது நிகழ்ந்தது!

அலுவலகத்திலிருந்து
வந்ததும்
வராததுமாய்
அன்றைய
வசையிலக்கியத்தை
வாசிக்கத்
தொடங்கினான்,
மாணிக்க
வீணையை
வாசிக்கத் தெரியாத
வீணன்!
"ஸ்கூட்டர்
வாங்க வேண்டும்.
கேட்டு வாங்கி வா
உன் அப்பனிடமிருந்து
பத்தாயிரம்."
கொண்டவன்
இம்முறை
சுரண்டலின் உச்சியைத்
தொட்டான்
"ஆசை வெட்கமறியாது!"
எவ்வளவு உண்மை!
பொறுமையின்
எல்லை கடப்பு
இப்பொழுது நிகழ்ந்தது!


பேசாமடந்தை
பேசத்தொடங்கினாள்
"என் அப்பா
நோட்டா அடிக்கிறார்,
கேட்ட போதெல்லாம்
'இந்தா' என்று
எடுத்து நீட்ட?"
எரி மலையின்
முதல் வீச்சு
அம்மாக்காரிக்கும்
அடிமைப் பிள்ளைக்கும்
திகைப்பையும்
எரிச்சலையும்
ஏற்படுத்தியது.
"என்னடி
நாக்கு நீள்கிறது?"
உடம்பெல்லாம்
நாக்குக் கொண்ட
அம்மாக்காரி
ஆர்ப்பரித்தாள்.
தாய்
பத்தடி பாய்ந்தால்
குட்டி
சும்மாயிருக்குமா?
"என்னடி சொன்னாய் நாயே,
எதிர்த்தா பேசுகிறாய்?"
மென்மையான
கன்னத்தில்
பளீரிட்டது
மின்னல்.
"கொன்றே போட்டாலும்
இனி மேல்
கொண்டுவர மாட்டேன்"
பாரதியின் பெண்
அங்கே
அந்தக் கணத்தில்
உதயமானாள்
"கொல்லவா சொல்கிறாய்?
கொல்கிறேன்
கொஞ்சம் பொறு"
எஜமானத்தனம்
எவரெஸ்ட் சிகரத்தில்
வெறியாட்டமிட்டது

சீர் கொண்டுவந்து
அந்தக் குடும்பத்தில்
சீரிழந்து போன
அந்த
சின்ன மயிலை
செல்லக் கிளியை
அம்மாக்காரி
அமுக்கிப்பிடிக்க
அருமை மகன்
அடுக்களையிலிருந்து
கொண்டுவந்த
ஒரு டின் கெரசினை
கொண்டவளின் மேல்....
கொண்டு வந்து
கொட்டிக்கொண்டே
இருந்தவளின் மேல்
கொட்டி,
அக்னி சாட்சியாய்
கைப்பிடித்தவள் மேல்
தீக்குச்சி ஒன்றை
உரசி வீச.......
தீயின்
கோர நடனம்
துவங்கியது.

கொஞ்சம் கூட
அவள்
பதறவில்லை;
கெஞ்சவில்லை;
தஞ்சம் தேடி
ஓடவில்லை.
சுவரில்
மாட்டியிருந்த
தலைப்பாகைக்
கவிஞனின்
படத்தை
வணங்கினாள்.
பெண் விடுதலைப்
புரட்சிக் கவிஞனின்
நெருப்பு விழிகள்
பாவைக்கு
சமிக்ஞை செய்தன;
"பாதகம்
செய்பவரைக்
கண்டால்
பயங்கொள்ளலாகாது
மோதி அழித்துவிடு"
பாப்பா பருவத்தில்
படித்த
இந்த வரிகளுக்கு
பாவை
இப்போது
வடிவமைக்க
முனைந்தாள்.

உள்ளேயும்
அக்கினி.
வெளியேயும்
அக்கினி.
காலங்காலமாக
இம்மண்ணில்
பிறந்த
ஒவ்வொரு
பெண்ணுக்குள்ளும்
எரிந்து கொண்டிருக்கும்
காலாக்கினி
விஸ்வரூபம்
எடுத்தது.
கட்டிய கணவனை
ஓடிச்சென்று
முதன் முறையாக
தானே
கட்டிப்பிடித்தாள்.
அவன்
அலற.......அலற
அவளின்
அணைப்பு
இறுகியது
அழுத்தம்
திருத்தமான
அந்த
அக்கினித் தழுவலில்
ஆணாகப் பிறந்தும்
அலியாக வாழ்ந்த
அறிவிலி ஒருவனின்
இறுதி யாத்திரை
உறுதியாயிற்று!
பெண்மையைச்
சீரழித்த
பேயன் ஒருவனின்
சாம்பல்
பூக்கத் தொடங்கியது.

பெண்மையின்
அசைவில்
சக்தியின்
நடனத்தை
தரிசித்த
மகா கவியின்
காலடியில்
அவனுடைய மகள்
ஒளி தேவதையாக
மண்டியிட்டு
விழுந்தாள்!
அந்தப்
புரட்சிக்காரியின் மீது
காய்ந்த
ரோஜாச் சருகுகளை
வர்ஷித்து
வீர அஞ்சலி
செலுத்தினான்
மீசைக் கவிஞன்!

சாயம் செய்த மாயம்

மாட்சிமை இல்லார் எம் மனைவி மக்கள்.
எனக்கு எதிராய் எண்ணுவர் இளையர்.
அல்லவை செய்வான் வேந்தன்; காக்கிலன்.
குறிப்புணர்ந் தியங்கா கோணல் ஏவலர்.
ஆன்றவிந் தடங்கா, கொள்கை பிறழ்ந்த
கீழோர் பலர் யான் வாழும் ஊரே!
இத்துணை இடர்கள் எய்திய போதும்
ஆண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்கா கியரென வினவுதிர் ஆயின்
எல்லாம் அந்த தலைமுடிச் சாயம்
நிகழ்த்திய மாயம் என்ற றிவீரே!

( பிசிராந்தையார் மன்னிப்பாராக! )

வியாழன், 27 ஆகஸ்ட், 2009

எங்கே செல்கிறோம்?

ஊரை ஏய்த்தவன்
காரில் செல்கிறான்.
உயர்ந்த மாளிகை
வாசம் செய்கிறான்.
தேரை இழுத்திட
முந்தி ஓடுறான்
தேர்தல் என்றதும்
ஆடிப் பாடுறான்.

காலட்சேபம்
கேட்பதற்கென்று
கணக்கில்லாத
பெருங்கூட்டம்.
ஏழையின் பாட்டைக்
கேட்பதற்கென்று
எங்கும் எவரும்
வருவதில்லை.

இங்கே ஒருத்தியின்
நளின ஆடலை
ஈராயிரம் பேர்
ரசிக்கின்றனர்.
அங்கொரு குடும்பம்
வறுமைப் புயலில்
அணைந்து போவதை
யாரறிவார்?

ஏழையின் வீட்டு
விளக்கிற்கெண்ணெய்
எங்கு தேடியும்
கிடைக்கவில்லை.
எப்படி அந்த
மாளிகை உச்சியில்
நந்தா விளக்கு
எரிகின்றது?

புதன், 26 ஆகஸ்ட், 2009

தஞ்சை விவசாயி

வெறிச்சோடிய வானம்
வெண்மணற் பரப்பாய் காவேரி
வெற்றுத் தாளாய் வாழ்க்கை.

ஆத்மாவின் கேள்வி

குழி வெட்டியவன்
நீளமாய் வெட்டாமல்
ஆழமாய்
வெட்டிவிட்டான் என்று
ஆளாளுக்குப்
பிடித்துக்கொண்டார்கள்.
"நீளம்
இல்லாவிட்டால் என்ன?
ஆழம்
இருக்கிறதல்லவா!
படுக்க வைக்காமல்
உட்கார்த்திவிட்டால் போகிறது.
வெட்டிப் பிணத்துக்காக
வெட்டி விவாதம் எதற்கு?"
குழிக்கு
வெளியே இருந்து
இறந்தவனின் ஆத்மா
கேட்டது.

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

உண்மைச்சுதந்திரம்

எந்த நாளில் லஞ்சமொழிந்து நாடு செழிக்குமோ
எந்த நாளில் சொத்துசுகங்கள் பொதுவென்றாகுமோ
எந்த நாளில் சுரண்டும்கொடுமை அடியோ டொழியுமோ
அந்த நாளே உண்மைச்சுதந்திரம் அடைந்த நாளாகும்.

எந்த நாளில் சாதிப்பேயின் இரைச்சல் ஓயுமோ
எந்த நாளில் மதங்கள்தாண்டி மனிதம் பூக்குமோ
எந்த நாளில் மனங்கள்யாவும் ஒன்று கலக்குமோ
அந்த நாளே உண்மைச்சுதந்திரம் அடைந்த நாளாகும்.

எந்த நாளில் நதிகள் இணைந்து தாகம் தீர்க்குமோ
எந்த நாளில் பெண்ணைமதிக்கும் எண்ணம் வெல்லுமோ
எந்த நாளில் குழந்தை உழைப்பை நாடு தவிர்க்குமோ
அந்த நாளே உண்மைச்சுதந்திரம் அடைந்த நாளாகும்.

எந்த நாளில் முதுமை போற்றும் பண்பு மலருமோ
எந்த நாளில் காசில்லாமல் கல்வி கிட்டுமோ
எந்த நாளில் வறுமை ஒழிந்து வயிறு நிறையுமோ
அந்த நாளே உண்மைச்சுதந்திரம் அடைந்த நாளாகும்.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

மொழிக்கெல்லாம் நீதானே அரசி !

திசையெட்டும் இசைகொட்டும் தமிழே ! - உந்தன்
தேன்சொட்டும் சொல்லெமெக்கு அமிழ்தே !
சோறின்றி யாம் வாழ்வோம் தினமும் - நிந்தன்
சுவையின்றி உயிர்வாழ மாட்டோமே நாங்கள்.
எமக்கென்று பிறந்திட்ட அமுதே - எங்கள்
உடலெங்கும் பாய்கின்ற உணர்வென்னும் திருவே !
உதிரத்தில் உயிராக கரைந்திட்ட கருவே ! - எங்கள்
வாழ்வுக்கு வழிகாட்டும் தீபத்தின் ஒளியே !
மொழிக்கெல்லாம் நீதானே அரசி ! - உலகில்
வேறெந்த மொழிவெல்லும் உன்னோடு உரசி ?
புதுமை பல படைக்கின்றாய் இன்று - காலம்
படைத்திட்ட கணினிக்குள் புகுந்திட்டாய் நன்று !
இணையத்தில் தவழ்கின்ற தாயே ! - புவிதன்னில்
எங்கெங்கும் ஒளிர்கின்றாய் நீயே !
என்றைக்கும் நீ எமக்கு வேண்டும்.
எம்மோடு இரண்டறக் கலந்திட வேண்டும்.
நீயன்றி இவ்வுலகில் வேறென்ன வேண்டும் ?
உன்னணைப்பில் எம்வாழ்வு முழுதாக வேண்டும்.
உனக்குள்ளே யாம் மூழ்கி முத்தெடுக்க வேண்டும்.
உன்னாழம் காண்பதற்கு யாம் தேற வேண்டும்.
உனையறிய எமக்கறிவு கோடி வேண்டும்.
உலகமெலாம் நின்னடியில் கூட வேண்டும் !