திங்கள், 11 நவம்பர், 2013

இது தான் வாழ்க்கை

ஒரு நாள்  போல்
மறு நாளில்லை.
நேற்றைய சந்தோசம்
இன்று காணோம்.
இன்றைய சோகங்கள்
நாளை மாறலாம்.
மாறாமல் போவதும்
சாத்தியமானதே.
வாய்த்த படிக்கு
வாழ்ந்து முடிப்போம்.
ஒற்றை இரவில்
உற்ற துன்பங்கள்
விலகுதல் என்பது
விளையாட்டல்ல.
இறக்கை இல்லாமல்
பறக்க முயல்வது
இயற்கைக்கு முரணானது.
திட்டமிட்டாலும்
இல்லாவிடினும்
தன்பாட்டுக்குப் போகும்
வாழ்க்கை.

மீண்டும் குறுங் கவிதைகள்

கடலில்
நல்ல மழை
குருட்டு மேகம்.

மழைத் துளியில்
மாயா ஜாலம்
வான வில்.

எத்தனை முறை
ஐயம் கேட்டும்
கோபப்படாத ஆசிரியர்
'டியுசன்' வகுப்பு.

எமன் குறித்த நேரத்துக்கு
முன்னதாகவே மரணம்
தர்மாஸ்பத்திரி.

எல்லா வகை ரத்தமும்
ஒரே உடலில்
கொசு.

கொட்டியதும்
வளைந்தது
சட்டம்.

ஏமாற்றிய காகம்
ஏமாந்தது நரியிடம்
சந்தோசத்தில் பாட்டி.

நிஜம் வெளியே
நிழல் உள்ளே
நிலைக் கண்ணாடி.

வாலை வெட்டு
முதுகை நிமிர்த்து
மனிதன்.

ஆண்டவனுக்கும்
மாண்டவனுக்கும்
அலங்கார தேர்பவனி. 

சனி, 9 நவம்பர், 2013

இன்னும் சில குறுங் கவிதைகள்

வாங்கியும்
சிவக்கலாம்
கரங்கள்.

வெள்ளை மாளிகையில்
கருப்பு அதிபர்
கால மாற்றம்.

மீனையும் காணோம்
பறவையும் வரவில்லை
வற்றிய குளம்.

திரையில்
நட்சத்திரங்கள்
பகலிலும்.

உண்டி கொடுப்போர்
வயிற்றில்
உறு பசி.

நெய்தோர்
உடலெங்கிலும்
அம்மணம்.

மாளிகை கட்டியவன்
வாசம்
மண் குடிசையில்.

சாலை போட்டவன்
வீட்டிற்கு
சரியான பாதையில்லை.

அன்று மட்டும்
வீட்டிலேயே குடித்தார்கள்
காந்தி ஜெயந்தி.

இறக்கைகள் இல்லாமலே
பறக்கிறது
விலைவாசி.  

புதன், 6 நவம்பர், 2013

சிந்தனையில் சிந்தியவை

                                      சம நீதி
ஆயிரம் உண்டிங்கு சாதி -எனில்
அன்னியர் வந்து புகலென்ன நீதி?
நாங்கள் மட்டுமே கொள்ளை யடிப்போம்
சமமாய் எமக்குள் பிரித்துக் கொள்வோம்.

                        புதிய ஜனநாயகம்
மக்களின் பணத்தை
மக்களில் சிலர்
(தம்)மக்களுக்காக
கொள்ளை அடிப்பது.

                           காலத்தின் கோலம்
 பொங்கும் காலம் போய்
 'போ'ங்காலம் வந்து விட்டால்
 அருகம் புல் நட்டாலும்
 அப்படியே கருகி விடும்.  

 






ஞாயிறு, 3 நவம்பர், 2013

குறுங் கவிதைகள்

திருமகளை
அடைவதற்காக
கலைமகளை விற்கிறார்கள்
கல்வி வியாபாரம்.

குய்யோ முறையோ என்று
கூக்குரலிட்டாலும்
உடைந்த மண்பானை
ஒட்டிக் கொள்ளவா போகிறது?

அஸ்தமனமானாலும்
அடுத்த நாள் காலை
புத்தம் புதிதாய்
எழும் ஞாயிறு.

 விழுந்தால் தான்
 உதயமாகும்
 எழ வேண்டும்
 எனும் எண்ணம்.

 சுவரெங்கிலும்
 எழுதப்பட்டிருந்தது
 'சுவற்றில் எழுதாதே'

 நடுவே நெருப்பு
 சுற்றிலும் நீர்
 ஈழம்.

 பூவின் மேல்
 இன்னொரு பூ
 வண்ணத்துப் பூச்சி.

 அழுகையும் சிரிப்பும்
 எழுத்துகளில்லாத
 வார்த்தைகள்.

  மூடிய கதவைத் திறக்கும்
  திறந்த கதவை மூடும்
  கொள்கை இல்லாத காற்று.
 
  வந்ததும் போனதும்
   குழந்தைக்குத் தெரியாது
   அப்பாவுக்கு ஐ.டி வேலை.
 



வெள்ளி, 4 அக்டோபர், 2013

எங்கே காந்தியம்?

சாதிப் புயலில்
பிய்ந்து உதிரும்
அமைதிப் பூக்கள்.

மனித நேயம்
கிழித்துக் குதறும்
மதவெறி நகங்கள்.

நீதியின் கரங்களை
வெட்டிச் சாய்க்கும்
வன்முறை வாட்கள்.

மண் எங்கிலும்
ரத்த ஆறுகள்.

தரை முச்சூடும்
தசைத் துண்டங்கள்.

எங்கு காணினும்
பயங்கர வாதம்.

தீரா நோயாய்
தீவிர வாதம்.

மேலை நாடுகள்
காந்தியின் பொருட்களை
ஏலம் போடுதாம்!
ஓ, இதென்ன அதிசயம்?
நாங்கள்
காந்தியத்தையே
ஏலம் போட்டு விட்டோம்!


செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

மரமும் பறவையும்

சாலையோரம் ஒரு பெரிய மரம். எந்தக் காலத்தில், எந்தப் புண்ணியவான் நட்டு வளர்த்ததோ! அந்த மரத்தில் ஒரு பறவை நெடுங்காலமாக கூடு கட்டி வாழ்ந்து வந்தது. பறவையும் மரமும் நல்ல நண்பர்கள். ஒரு நாள் இரை தேடிவிட்டு இரவு திரும்பிய பறவையிடம் மரம் வருத்தத்தோடு சொன்னது, " இன்னும் இரண்டு நாட்களில் என்னை அடியோடு வெட்டப் போகிறார்களாம். அதிகாரிகள் பேசிக் கொண்டார்கள். சாலையை அகலப்படுத்தப் போகிறார்களாம்." இதைக் கேட்ட பறவையின் கண்களில் நீர் வழிந்தது. அதைப் பார்த்த மரம், "வருத்தப்படாதே, நண்பனே. வெட்டுப்படுவது எங்களுக்கு வாடிக்கை. காலையில் விரைவாக எழுந்து வேறு மரத்திற்குச்  சென்று விடு. போகும்பொழுது என் சருகுகளையும் குச்சிகளையும் எடுத்துக்கொண்டு போ. கூடு கட்ட உதவும். இந்தா, பழம் சாப்பிடு " என்று கூறி கனிவோடு தன் கனிகளைக் கொடுத்தது. பறவையின் கண்கள் கலங்கின. மனம் நெகிழ்ந்தது. " கவலைப்படாதே, நண்பா. நீ கொடுத்த கனிகளைச் சாப்பிட்டுவிட்டு, உன் விதைகளை மண்ணில் பரப்புவேன். நீ மறுபடியும் புதிதாகப் பிறப்பாய்." என்று நன்றியுடன் மொழிந்தது பறவை. சிலிர்த்துச் சிரித்தது மரம்.        

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

மானும் எறும்பும்

அன்றொரு நாள் பலத்த மழை. காட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு கட்டெறும்பு வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு தத்தளித்தது. அப்பொழுது கலைமான் ஒன்று வெள்ளத்தில் நீந்தியவாறு எதிரில் வந்தது. " என்னைக் காப்பாற்று" என்று மானைக் கெஞ்சியது எறும்பு. "சரி. என் மீது ஏறிக்கொள் " என்று மான் கூற, எறும்பு மான் மீது ஏறி, அதன் கொம்பில் பாதுகாப்பாக அமர்ந்து கொண்டது. சில மணி நேரத்திற்குப் பின் வெள்ளம் வடிந்தது. மானிடம் நன்றி கூறிவிட்டு எறும்பு தன் இருப்பிடம் சென்றது. பிறிதொரு நாள். நல்ல வெய்யில் நேரம். மரநிழலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது மான். சற்றுத் தொலைவில் புலி ஒன்று மானையே உற்றுப் பார்த்தவண்ணம் நின்று கொண்டிருந்தது. எந்தக் கணத்திலும் அது மான் மீது பாய்ந்து தாக்கலாம். திடீரென்று யாரோ மானை பலமாகக் கடித்தார்கள். வலி பொறுக்காது எழுந்த       மானைப் பார்த்து, " பயப்படாதே. நான் தான் உன்னைக் கடித்து எழுப்பினேன். எதிரில் பார்." என்றது எறும்பு. எதிரில் புலியைப் பார்த்த மான் அபாயத்தைப் புரிந்து கொண்டது. எறும்பு நண்பனுக்கு மனமார நன்றி சொல்லிவிட்டு, பாதுகாப்பான இடத்திற்கு விரைந்தது மான். 

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

கொக்கும் எருமையும்

புல்வெளியில் எருமை ஒன்று உற்சாகமாக மேய்ந்து கொண்டிருந்தது. பறந்து வந்த ஒரு பால் நிறக் கொக்கு எருமை அருகே புல்வெளியில் அமர்ந்தது. "நண்பா, நலமா?நானும் உன்னுடன் வரலாமா?"என்று பணிவாக வேண்டியது கொக்கு. எருமை நட்புணர்வோடு ஒப்புதல் தந்தது. எருமை செல்லுமிடம் எங்கும் கொக்கும் கூடவே சென்றது. எருமை மேயும் பொழுது புற்களிலிருந்து வெளியேறும் பூச்சிகளைப் பிடித்துத் தின்று பசியாறியது கொக்கு. கைமாறாக, எருமையின் மீது அமர்ந்து, அதன் ரத்தத்தை உறிஞ்சும் உண்ணிகளைப் பிடித்துத் தின்று எருமைக்குச் சுகமளித்தது.

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

ஆறும் கல்லும்

ஒரு மலையின் அடிவாரத்தில் ஒரு கல் கிடந்தது. அது ஒழுங்கற்று, அழகின்றி, சொரசொரப்பாக இருந்தது. விளையாடும் சிறுவர்கள் கூட அதைத் தொடுவதில்லை. அவர்கள் விளையாடுவதற்கு வழவழப்பான, உருண்டையான கற்களையே விரும்பித் தெரிவு செய்தனர். இதை ஒரு அவமானமாகக் கருதி வருத்தப்பட்டது அந்தக் கல். ஒரு நாள் பலத்த மழை பெய்தது. வெள்ளம் அந்தக் கல்லை அடித்துச் சென்று ஆற்றில் சேர்த்தது. ஆற்று வெள்ளம் அந்தக் கல்லை புரட்டி, உருட்டி சொரசொரப்பை நீக்கி வழவழப்பாக்கியது. கல் இப்பொழுது உருண்டையாய் அழகிய வடிவத்துடன் காட்சியளித்தது. தன்னைச் செதுக்கிப் பண்படுத்திய ஆற்றுக்கு நன்றி கூறியது கல். 

சனி, 10 ஆகஸ்ட், 2013

பூவும் வண்ணத்துப் பூச்சியும்

தோட்டத்துச் செடியில் பூ ஒன்று அழகாகப் பூத்திருந்தது. பூவின் விரிந்த, பெரிய இதழ்கள் மஞ்சள் பூசி மங்களகரமாகக் காட்சியளித்தன. எங்கிருந்தோ பறந்து வந்தது ஒரு அழகான வண்ணத்துப் பூச்சி. பூவைச் சுற்றி சற்று நேரம் வட்டமடித்தது. பிறகு அன்பான குரலில் பூவிடம்,"பூவே, பூவே, உன் மீது அமர்ந்து சற்று ஓய்வெடுக்கலாமா?"என வேண்டியது. "ஓ, தாராளமாக. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீ தங்கலாம். பசித்தால், என்னிடம் தேனுள்ளது. வேண்டுமளவு பருகலாம்,"என்று இனிய குரலில் மொழிந்தது பூ. தேனுண்டு இளைப்பாறிய வண்ணத்துப் பூச்சி,  பூவின் விருந்தோம்பல் பண்புக்கு நன்றி கூறி விடைபெற்றது. போகும்பொழுது, பூவின் மகரந்தத்தை தன் இறக்கையில் எடுத்துக்கொண்டுபோய் வேறொரு பூவில் சேர்த்து இன விருத்திக்கு உதவியது.   

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

சிந்தனை பத்து -20


  1. சாதாரணமான மனிதர்கள் இறக்கும் பொழுது பிணமாகிறார்கள். ஆனால் புரட்சியாளர்கள் மரிக்கும் பொழுது புதிதாகப் பிறக்கிறார்கள்.
  2. ஏற்றத் தாழ்வுகளும், வர்க்க பேதங்களும், இன ஒடுக்கல்களும், சுரண்டலும் எந்தச் சமூகத்தில் எல்லை தாண்டிப் பெருகுகின்றனவோ அங்கு நிச்சயம் புரட்சி வெடிக்கும்.
  3. மாற்றங்கள் மனிதர்களிடம் தேடும் தாகத்தையும் செயல்படும் வேகத்தையும் முடுக்கிவிட்டு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செலுத்தும்.
  4. வண்ணங்கள் மாறுபட்டாலும் பூக்கள் ஒன்றையொன்று வெறுப்பதில்லை.
  5. பூக்கள் வெறுமனே பூக்கள் மட்டுமல்ல. அவற்றுக்குள் காய்கள், கனிகள், விதைகள், மரங்கள் என்று எண்ணற்ற ரகசியங்கள் மறைந்துள்ளன.
  6. மகரந்தம் கொணர்ந்த வண்ணத்துப் பூச்சிக்கு தேன் தந்து நன்றி நவின்றது பூ.
  7. விதவைக்குப் பூக்கள் மறுக்கும் உலகம் அவளின் பிணத்தின் மீது பூக்களாய்க் கொட்டும்.
  8. மண்ணுக்கு விருப்பு, வெறுப்பு கிடையாது. சாதி, மதம் இல்லை.யார் தோண்டினாலும் தண்ணீர் தரும். யார் பயிரிட்டாலும் உணவு கொடுக்கும்.
  9. அடித்தாலும், உதைத்தாலும், குதித்தாலும்,சிதைத்தாலும் சினம் கொள்ளாது மண்.
  10. இயற்கைத் தேவன் தன் இன்னுயிர்க் காதலிக்கு வாரி இறைத்த வைரங்களே நட்சத்திரங்கள்.  

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

சிந்தனை பத்து -19

1. எளியோரை ஏளனம் செய்தலும் வலியோர்க்கு சாமரம் வீசலும்            அறிவுடையோர் செயல் அல்ல.
2. நா காத்தல் இரு வகைப்படும். தீய சொற்களைப் பேசாதிருத்தல் ஒரு வகை.    அளவுக்கு மிஞ்சி உணவுண்ணாமல் நாவைக் கட்டுப்படுத்தல் இரண்டாவது  வகை.
3. இருட்டை விரட்டுகின்றன கதிரோனின் ஒளிக் கதிர்கள். அறியாமையை  நீக்குகிறது கல்வி.
4. அரசை எதிர்த்து தீவிரமாக முழங்கிக் கொண்டிருப்பவர்கள் திடீரென்று  மௌனிகளாகி விட்டால் என்ன பொருள்? பயமுறுத்தப்பட்டிருப்பார்கள்  அல்லது விலை போயிருப்பார்கள்.
5. நம் பகுதிக்கு வருகை தரும் பறவைகளை வரவேற்போம். அப் பறவைகள்  நம்முடைய விருந்தாளிகள். ஓசைகள் எழுப்பி அவற்றை பயமுறுத்த  வேண்டாம். நிம்மதியாகத் தங்கி விட்டுச் செல்லட்டும்.
6. அறிவாளி ஒருவனின் சுதந்திரத்தைப் பறிக்கும் எந்த ஒரு தேசமும்  உயர்ந்ததாக வரலாறு இல்லை.
7. எதை எதிர்பார்த்து மழை பொழிகிறது? மண் எதை எதிர்பார்த்து  விளைச்சலைக் கொடுக்கிறது? காற்று எதை எதிர்பார்த்துக் குளுமையாக  வீசுகிறது? மழை, மண், காற்று போல நாமும் எந்தக் குறியெதிர்ப்பும்  இல்லாமல் பிறர்க்கு உதவி செய்தல் வேண்டும்.
8. தண்ணீர்ப் பற்றாக்குறையின் பொழுது இலைகளை உதிர்த்து விடுகின்றன  மரங்கள். அது போல, வருமானம் குறையும்பொழுது, நாம் தேவையற்ற  ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
9. பலருடைய மன அழுத்தங்களுக்குக் காரணம் அவர்கள் தங்களின்  பிரச்சனைகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளாததே. வாய்விட்டுப்  பேசினால் மனம் லேசாகும். அழுத்தம் அகலும்.
10. நீதி மன்றங்கள் துணிவாகவும், தெளிவாகவும் தீர்ப்புக்கள் வழங்கும்  ஒவ்வொரு முறையும் மக்களாட்சியின் மீது நமக்கு நம்பிக்கை மலர்கிறது.  ஒருவித பாதுகாப்பு உணர்வும் மனதில் விரிகிறது.       

செவ்வாய், 16 ஜூலை, 2013

சிந்தனை பத்து - 18


  1. துயரங்கள் உன்னைச் சூழும் பொழுது துணிவாய் எதிர் கொள். அவை உன்னைப் பக்குவப்படுத்துவதற்கு வந்ததாய் எடுத்துக் கொள். 
  2. நாம் பிறரிடம்  உரையாடும் பொழுது,  அதை அவர்கள் விருப்புடன் கவனிக்கிறார்களா என்பதைத் தெரிந்து  நமது உரையைத் தொடர்தல் நல்லது. 
  3. நடக்க,  நடக்கத்தான் பாதை உருவாகும்.  முயற்சி செய்ய, செய்ய வாழ்க்கை கைகூடும்.    
  4.  நெடுநாள் கழித்து இளமைக்கால நண்பர்களை எதிர்பாராமல் சந்திக்கும் பொழுது ஏற்படுகின்ற மகிழ்ச்சிக்கு ஈடு இணை சொல்ல முடியாது.  
  5.  வாழ்க்கையை  பாலைவனமாக்குவதும் பசுஞ்சோலையாக்குவதும் நம் எண்ணங்களே.  நல்ல எண்ணங்கள் மெதுவாகவேனும் நம்மை உயர்வு நோக்கி உந்திச் செல்லும்.                                                                                                   
  6. உதவாக்கரை  என்று  ஒருவரை  ஒதுக்கி , ஓரங்கட்டி  விடாதீர்கள் . பிறவியில்  அப்படி  யாரும்  இல்லை . சூழ்நிலை  காரணமாக  ஒருவருக்குள்  இருக்கும்  திறமைகள்  வெளிப்படாமல்  இருக்கலாம் . சூழ்நிலை  கனியும்  பொழுது , அவருக்குள்  இருந்தும்  ஒரு  அற்புதமான  ஆற்றலாளன்  வெளிவரக்கூடும் .
  7. எளிமை என்பது ஒரு விலைமதிப்பற்ற ஆபரணம். அதை அணிந்ததனால் தான் காந்தி, காமராசர் போன்றோர்  உலகெங்கும் அறியப்படுகின்றனர்.
  8. அலமாரியில் உள்ள புத்தகங்களைத்  தொட்டு, எடுத்து, தூய்மைப்படுத்தி, நல்ல முறையில் ஒழுங்காக அடுக்கி வைக்கும் பொழுது மனதில் மகிழ்ச்சி மலரும். புத்தகங்களுக்கும் நமக்குமான உறவு விசாலமடையும்.   
  9. இயற்கையை  அழிப்பதால்  ஏற்படும் இழப்புக்கள்  பெரிய  அளவில்  நம்மைப் பாதிக்காமல்  இருக்கலாம். ஆனால்  வருங்காலத்  தலைமுறையினர் மழையையே  பார்க்காத  அவலத்தைச்  சந்திக்கப் போகிறார்கள்  என்பது மட்டும்  மகா சத்தியம்.
  10. அதிகார போதை  அபாயகரமானது . அதை உங்களுக்குள்ளே  அனுமதிக்காதீர்கள் . உங்களை  அது  படுகுழியில்  தள்ளிவிடும் . அன்பு  ஒன்றே  நிலையானது . அன்பு  காட்டுங்கள் . மனம்  லேசாகும் . வாழ்க்கை  சுகமாகும் . 

புதன், 10 ஏப்ரல், 2013

சிந்தனை பத்து -17



  1. பொறாமை வெறுப்பின் தாய்; கோபத்தின் உறவு;  எரிச்சலின் நண்பன்; உடல் நலத்தின் எதிரி; உள்ளத்தைப் பீடிக்கும் நோய். ஆதலினால், பொறாமை தவிர்ப்பீர்.
  2.   நல்லவனாய் இருந்தால் மட்டும் போதாது. உன்னைச் சுற்றிலும் கெட்டவர்களே அதிகம் இருக்கும் போது, நீ வல்லமை படைத்தவனாக இருந்தால் மட்டுமே இவ்வுலகில் வாழ முடியும்.
  3. சினத்தை ' சேர்ந்தாரைக் கொல்லி' எனச் செப்புகிறான் அய்யன் வள்ளுவன். சினம் இதயத்தை உடைத்துவிடும் என்கிறது மருத்துவ நூல். மன்னர்களின் சினத்தால் மாபெரும் சாம்ராஜ்யங்கள் சிதறி, சின்னாபின்னமாகின என்கிறது வரலாறு. நம் சினம் அடுத்தவர் மனதைப் புண்படுத்துகிறது. சினத்தினால் யாரும் இலாபம் ஈட்டியதாகச் செய்திகள் இல்லை. சினம் எதையும் சாதிப்பதும் இல்லை. ஆதலினால் சினம் தவிர்ப்பீர். 
  4. அள்ளிக் கொடுக்க நம்மிடம் அளவில்லாத அன்பு உள்ளது. நேசிக்க பரந்த மனம் உள்ளது. யோசிக்க அறிவு உள்ளது. பின் எதற்காக வன்முறை? ஏன் வெறியாட்டம்?
  5. எல்லோரும் நம் சகோதர, சகோதரிகள். மதம், சாதி, இனம் தாண்டி, மனிதர்களாக ஒன்றாக வாழ்வதை விட்டு விட்டு, வன்முறையால் ரத்தம் சிந்தலாமா? நன்முறைகளைப் போதித்த நீதி நூல்கள் எழுந்த தேசத்தில், வன்முறையின் கோர ஆட்சி நிகழ்வது சரியா? 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற மகத்தான உறவு முறை மலர்ந்த மண்ணில், எதற்கு கத்தி? எதற்கு தோட்டா? எதன் பொருட்டு வெடி குண்டு? அன்பைப் பரப்புவோம்; நட்புணர்வை வளர்ப்போம்; வன்முறையைத் தவிர்ப்போம்.
  6. உன்னிடம் பிறர்க்குக் கொடுக்க எதுவுமில்லை என்று வருத்தப்படாதே. கொடுக்க வேண்டும் என்ற மனம் உள்ளதல்லவா? அது போதும்.
  7. எந்நேரமும் தொலைக்காட்சி அல்லது கணினிக்கு முன் அமர்ந்து சுற்றுப் புறத்தையே மறந்து போன சின்னஞ் சிறு அரும்புகளே, கொஞ்சம் வெளியே வாருங்கள். என்ன அழகாகப் பூத்திருக்கின்றன மலர்கள்! அந்த வண்ண மலர்களின் மீது பூத்திருக்கின்ற சின்னச் சின்ன வண்ணத்துப் பூச்சிகளை பாருங்கள். விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் நடக்கும் மழை நெசவைக் கண்டு களியுங்கள். அதோ, கிழக்கு வானில் வானவில்!யாருக்காகக் காத்திருக்கிறது, ராமனுக்காகவா அல்லது அர்ச்சுனனுக்காகவா? இருவருக்கும் இல்லை. நீங்கள் ரசிப்பதற்காக மட்டுமே. துள்ளுகின்ற பசுக் கன்றுகளையும் தாவும் அணில்களையும் கீச்சிடும் பறவைகளையும் நோக்குங்கள். மெல்ல ரகசியம் பேசிச் செல்லும் காற்றின் மொழியை அனுபவியுங்கள். அதோ, அந்த நீல மலைகளைப் போர்த்தி நிற்கும் வெண் மேகங்களை தரிசியுங்கள். உங்கள் ரசனை விரியும். அறிவு பெருகும். இதயம் வலுவடையும். பார்வை கூர்மை அடையும். வாழ்நாள் கூடும். உங்களுக்கும் இயற்கைக்குமான உறவு வலுப்படும். வாருங்கள் குழந்தைகளே, வெளியே!
  8. பேருந்தில் நடத்துனர் பயணச் சீட்டு கொடுக்கும்பொழுது 'நன்றி' எனச் சொல்லிப் பாருங்கள்.....அவர் முகத்தில் தான் எவ்வளவு மலர்ச்சி! அன்று முழுதும் அவர் தனது பணியை மகிழ்ச்சியுடன் செய்வார் என்பது திண்ணம்.
  9. ஒரு குழந்தையிடம் 'நன்றி' கூறும் பொழுதும் 'வருந்துகிறேன்' என வருத்தம் தெரிவிக்கும் பொழுதும், அந்தப் பிஞ்சு மனதில் உங்களைப் பற்றி உயர்வான எண்ணம் உருவாகிறது. அது மட்டுமல்ல....நன்றி தெரிவிக்கும் பண்பாடும் வருத்தம் தெரிவிக்கும் நாகரிகமும் அந்தக் குழந்தையின் மனதில் பதியமாகின்றன.
  10. அதிகாரமாகச் சொல்லாமல், அன்பாகச் சொல்லிப் பாருங்கள்....எல்லோரும் நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள்.


புதன், 6 மார்ச், 2013

சிந்தனை பத்து - 16


  1. ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல செயலையாவது செய்ய வேண்டும். எவ்வளவு சிறிய செயலாயினும் பரவாயில்லை. எதிரே வரும் மனிதனைப் பார்த்து ஒரு புன்முறுவல், ஒரு குழந்தையை நோக்கி கையசைப்பு, ஒரு பார்வை இழந்த மனிதருக்கு சாலையைக் கடக்க உதவுதல், ஒரு மூதாட்டிக்கு தலைச் சுமை இறக்க கரம் நீட்டுதல், பிளாஸ்டிக் பொருளை குப்பைத் தொட்டியில் போடுதல் என எவ்வளவோ செயல்களைச் சொல்லலாம்.
  2. காலம் நம் கட்டளைக்கு அடி பணியாது. நம் ஆளுகைக்கு அடங்காது. எனவே செய்ய நினைப்பதை இன்றே செய்து விடு. நாளைக்குச் செய்யலாம் என எதையும் ஒத்திப் போடாதே.
  3. நேற்றைய தலைமுறையில் உண்மைக்கும், கண்ணியத்திற்கும், நீதிக்கும், நியாயத்திற்கும் சற்று மதிப்பிருந்தது. தீயன செய்ய அச்சமிருந்தது. ஊரார் என்ன சொல்வார்களோ என்ற தயக்கமும், கூச்சமும் இருந்தது. இன்று எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. கண்ணியம் காலாவதியாகி விட்டது; அச்சம், கூச்சம், தயக்கம் எல்லாம் அந்நியமாகிப் போயின. பலர் பணம் ஈட்டுவதில் முனைப்பாக இறங்கிவிட்டார்கள். பொது வாழ்க்கையில் தூய்மை என்பது கனவாகி காணாமல் போய் விட்டது. நாளைய தலைமுறை என்னவாகுமோ? அச்சமாக இருக்கிறது நினைத்துப் பார்க்க.
  4. எளிமையாகப் புரிய வைப்பதற்கு புதுப்புது வழிகளைக் கண்டுபிடிப்பவரே உண்மையான ஆசிரியராவார்.
  5. மாணவர்க்கு நண்பனாக இருந்து கற்பிக்கும் ஆசிரியரே நல்லதொரு சாதனையாளராகப் போற்றப்படுவார்.
  6. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உண்மையான அரசியலைப் போதித்தால் மட்டுமே தேசம் உருப்படும்.
  7. ஒரு ஆசிரியர் ஒரு மாணவனைக் குறை கூறுவதாக இருந்தால், தனியாக அழைத்துக் கண்டிக்க வேண்டும். பாராட்டுவதாக இருந்தால், பலர் நடுவே பாராட்ட வேண்டும்.
  8. மரங்களை வெட்டி, மழையைத் தடுத்து மண்ணைப் பாழாக்கிப் பாலையாக்கும் எவருமே தேசத் துரோகிகளே.
  9. முதியவர்களைப் புண்படுத்தும் வார்த்தைகளால் குதறாதீர்கள். சில நாட்கள் மட்டுமே வாழப் போகும் அவர்கள் நிம்மதியாய் வாழட்டும். அவர்களின் இறுதிக் காலம் இனிமையாய்க் கழியட்டும்.
  10. உங்களுக்கு முகவரி தந்த பெற்றோர்களை கடைசிக் காலத்தில் முகவரி அற்றவர்களாக்கி விடாதீர்கள்.



   

திங்கள், 4 மார்ச், 2013

சிந்தனை பத்து - 15


  1. அடுத்தவர் துயரில் பங்கு கொள்ளுங்கள். அவர்களுக்கு ஆதரவாய் நேசக் கரம் நீட்டுங்கள். சில அன்பு மொழிகளைக் கூறுங்கள். மெல்ல, மெல்ல அவர்களின் துயரம் குறையும்.
  2. பொறாமை வெறுப்பின் தாய்; கோபத்தின் உறவு; எரிச்சலின் நண்பன்;  உடல் நலத்தின் எதிரி; உள்ளத்தைப் பீடிக்கும் நோய். ஆகையால், பொறாமையைத் தவிர்ப்பீர்.
  3. வாழ்க்கைச் சக்கரத்திற்கு அன்பே அச்சாணி.
  4. பாழ்பட்ட நிலமே எனினும் பாடுபட்டால் நிச்சயமாய் பலன் விளையும்.
  5. நேசிப்பதாலே மனம் லேசாகும். நேசிப்பதாலே கவலைகள் கரையும். நேசிப்பதாலே உறவுகள் விரியும். நேசிப்பதாலே நட்பது மலரும்.
  6. வீணை செய்வது வீணாக்குவதற்கு அல்ல; மீட்டி இசையை ரசிப்பதற்கே. சிலை வடிப்பது போட்டு உடைப்பதற்கு அல்ல; அதில் உள்ள கலை நயத்தைப் பார்த்து மகிழ்வதற்கே.
  7. கரைக்குள் அடங்கி ஓடும் வரை நல்லாறு; கரை புரண்டு ஓடினால் காட்டாறு.
  8. வறட்சியிலும் சில தாவரங்கள் உயிர்த்திருப்பது போல, வறுமையிலும் தாக்குப் பிடிப்பவர்களே வாழ்வதற்கும், வாழ்த்தப்படுவதற்கும் தகுதி உடையவராவர்.
  9. பக்குவப்பட்டவர்கள் எப்போதும், எதற்கும் பதட்டமடைய மாட்டார்கள். நிதானமாகச் சிந்தித்து பிரச்சனைகளைச் சந்திப்பார்கள். தெளிவுடன் தீர்வு காண்பார்கள்.
  10. குப்பையையும் கொட்டி விட்டு, சுத்தம் செய்பவர்களை குறை சொல்கிற வேடிக்கை மனிதர்கள் வாழ்கின்ற விந்தையான உலகம் இது..  


சனி, 2 மார்ச், 2013

சிந்தனை பத்து - 14


  1. பாராட்டுங்கள் தாராளமாக. செலவு சில வார்த்தைகள் மட்டுமே. பாராட்டப்படுபவர் பரவசம் அடைவார்; உற்சாகம் பெறுவார்; வேகத்துடன் செயல்படுவார்; பாராட்டு  அவரின் சாதனைகளுக்கு ஊக்க மருந்தாய் அமையும்.
  2. சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் பாராட்டை விரும்புகிறார்கள். பாராட்டுவோமே....நாம் என்ன குறைந்தா போய் விடுவோம்?
  3. பாராட்டு என்பது பரிசாக இருக்கலாம். சான்றிதழாக இருக்கலாம். ஒரு கவிதையாக இருக்கலாம். ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளாக இருக்கலாம். ஒரு கைகுலுக்கல் கூட பாராட்டே. ஒரு சிறு முறுவலும் கூட.
  4. விதை உறக்க காலத்தில், முளைப்புக்காகத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்கிறது. இப்படி வாழ்க்கையை எதிர்கொள்ள நாம் நம்மை தயார்ப் படுத்திக் கொள்கிறோமா?
  5. மரங்களும் அவற்றில் அடையும் பறவைகளும் எவ்வளவு அழகாய் உள்ளன!காற்றில் இலைகள் சலசலக்கும் ஓசையும் காலை நேரத்தில் பறவைகளின் கலகலப்பான ஒலியும் கேட்பதற்கு எவ்வளவு ரம்மியமாக உள்ளது!
  6. சலசலத்து ஓடுகிறது ஆறு. ஆற்று நீரில் துள்ளிப் பாயும் வாழை மீன்கள். கரையில் செழித்து வளர்ந்த செடிகள். செடிகளின் பூக்களில் தேன் உறிஞ்சும் வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள். ஓ, இயற்கைத் தாயே, நின் வரங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.
  7. சில செயல்களை யோசித்துச் செய்ய வேண்டும். சிலவற்றை உடனடியாகச் செய்ய வேண்டும். சில செயல்களை துணிவோடு செய்ய வேண்டும். சில செயல்களைச் செய்வதற்கு அச்சப்பட வேண்டும்.
  8. கோபப்படும் பொழுது முகம் தன் அழகை இழக்கிறது. அகம் அறிவை இழக்கிறது. பேச்சும் மூச்சும் தடுமாறுகின்றன. இரத்தம் கொதிக்கிறது. மூச்சு நின்று விடுவதும் உண்டு. கோபத்தைத் தவிர்க்கலாமே! நெடுநாட்கள் வையத்தில் வாழலாமே!
  9. குழந்தையின் சிரிப்புக்குத் தான் எவ்வளவு வலிமை! அந்தச் சிரிப்பு நமக்கே தெரியாமல் நமக்குள் புகுந்து நம் முகத்தையும் அகத்தையும் மலர வைத்து மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
  10. முடிந்ததைச் செய்யுங்கள். இயன்றதைக் கொடுங்கள். அறிந்ததைக் கற்றுத் தாருங்கள். அறியாததை அறிய முயற்சி செய்யுங்கள். எப்போதும் எல்லோரையும் நேசியுங்கள். வாழ்க்கை இனியது.


 



வெள்ளி, 1 மார்ச், 2013

சிந்தனை பத்து- 13


  1. குழந்தையிடம் அன்பைப் பொழியுங்கள். அது மற்றவர்களை நேசிக்கக் கற்றுக் கொள்ளும். இனிய சொற்களைப் பயன்படுத்துங்கள். குழந்தையும் இனிமையாகப் பேசும்.
  2. வரவுக்கு மேல் செலவு செய்பவன் வாழ்க்கையில் வசந்தம் பூக்காது.
  3. சம்பாதிக்கும் இளைஞர்களுக்கு வாழ்க்கை நடத்தும் கலையைக் கற்றுக்  கொடுக்க வேண்டும்.
  4. வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக அனுபவித்து வாழ்வதில் தவறேதும் இல்லை, வரவுக்குள் செலவு செய்யத் தெரிந்திருக்கும் பட்சத்தில்.
  5. நிதியைச் சரியான முறையில் கையாளாதவன் வாழ்க்கையில் கவலைகளே நிரம்பித் ததும்பும்.
  6. பேச்சில் தெளிவு, பழக்கத்தில் கனிவு, நடத்தையில் பணிவு, செயலில் உறுதி, சிந்தனையில் வேகம், பொது வாழ்வில் நாணயம், வார்த்தைகளில் வாய்மை ஆகியவை இருந்தால், நிறையச் சாதிக்கலாம்; நீடு புகழ் ஈட்டலாம்.
  7. குழந்தைகளின் அழுகை ஒரு வகை மொழி; தாய்க்கு மட்டுமே புரியும்.
  8. எந்த நாட்டில் கல்வி வியாபாரமாக நடத்தப்படுகிறதோ, அந்த நாடு உருப்படாது.
  9. எதையும், யாருக்கும் எளிமையாகச் சொல்ல வேண்டும். கனமாகச் சொல்லப்படும் கருத்துக்கள் கருத்தரிப்பதற்கு முன்னரே சிதைந்து போகும்.
  10. இலவசமாய்ப் பெறப்படும் பொருளுக்கு மதிப்பில்லை.ஒரு காசானாலும் உழைப்பினால் கிடைத்தால், ஒரு கோடி ரூபாய்க்குச் சமம்.  

வியாழன், 28 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து - 12


  1. கற்றும் நேர்பட வாழாதவன் இவ்வுலகில் இருந்து என்ன பயன்? கற்றவன் நல்லவனாய் இருக்கும் பொழுது மட்டுமே இவ்வுலகம் நல்லதாய் அமையும்.
  2. வசதி உள்ளவர்கள் வறுமையில் வாடுவோருக்கு உதவ வேண்டும். அதற்காகத் தான் அவர்களுக்கு வசதி வழங்கப்பட்டிருக்கிறது.
  3. எந்த நாட்டில் விவசாயி துன்பப்படுகிறானோ, அந்த நாடு விரைவில் பசியில் துடிக்கும்.
  4. நம்மில் பலருக்கு வாழ்த்த மனம் வருவதில்லை.வசை பாட மட்டுமே கற்றிருக்கிறோம். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நம்முடைய தவறுகள் நமக்கே புரியும். நம்மைச் சற்றே மாற்றிக் கொண்டால் வாழ்க்கை எவ்வளவு இனியதாய் மாறும்!
  5. எல்லோரும் ஏதோ ஒரு தருணத்தில் தவறு செய்யக்கூடும். அது மனித இயல்பு. சிலர் திருத்திக் கொள்கிறார்கள்; பலர் திருந்துவதில்லை.
  6. நம்மையும் வருத்திக்கொண்டு பிறரையும் வருத்துவதிலேயே நமது காலத்தில் பாதி பயனில்லாமல் கழிகிறது.
  7. காந்தியின் எளிமை குறித்துப் பெருமைப் படுகிறோம். வாய் கிழிய மேடையில் முழங்குகிறோம். ஆனால், காந்தி போல எளிமையாக வாழ்வதற்கோ, உண்மை பேசுவதற்கோ நாம் முயற்சி செய்வதில்லை.
  8. சொல் ஒன்றாய், செயல் வேறொன்றாய் போலியாய் நாம் வாழ்ந்து வருகிறோம். நாம், நாமாக என்று வாழப் போகிறோம்?
  9. இன்சொல், பேசுபவருக்கும், கேட்பவருக்கும் மகிழ்ச்சி தரும். இதயங்களை நெகிழ வைக்கும். நல்லுறவைச் சாத்தியமாக்கும்.
  10. எந்தப் பொருளைப் பயன்படுத்தும் பொழுதும் சிக்கனம் வேண்டும். நீரோ, மின்சாரமோ, சமையல் எரி வாயுவோ எதுவாக இருந்தாலும் சரியே. அப்பொழுது தான் எல்லோருக்கும் எல்லாமும் சரிசமமாய்க் கிடைக்கும். 




புதன், 27 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து- 11


  1. எவ்வளவுதான் மனதிற்குக் கடிவாளமிட்டாலும், சிலரைப் பார்க்கும்பொழுது வெறுப்புணர்வு பெருக்கெடுக்க ஆரம்பிக்கிறது. தவறு எனத் தெரிகிறது. ஆனால் தடுக்க முடியாமல் தத்தளிக்கிறோம். இன்னமும் நம் மனங்கள் பக்குவப்படவில்லை. இன்னும் நாம் நம் மனங்களை அதிகப்படியான அன்பால் நிரப்பிக் கொள்ள வேண்டியுள்ளது.
  2. யோகா பயில்கிறார்கள்; தியானம் செய்கிறார்கள்; நீதி நூல்கள் படிக்கிறார்கள்; உபதேசம் கேட்கிறார்கள். ஆனாலும் அவர்களால் சினத்தை அடக்குவதற்கு முடியவில்லை. பெற்ற பயிற்சியால் பயன் என்ன?
  3. எதிலும் குறை காண்பதும், எதையும் எதிர்மறையாய் அணுகுவதும் நல்ல உறவுக்கு வழி வகுக்காது.
  4. உறவுச் சிதைவுக்குக் காரணம் அதிக எதிர்பார்ப்புகள், புரிதல் இல்லாமை, விட்டுக் கொடுக்காமை மற்றும் மனம் விட்டுப் பேசாமை.
  5. படித்தால் மட்டும் போதாது; படித்ததைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுதலும், அதன்படி நடத்தலும் மிக மிக முக்கியம்.
  6. சண்டை போட்டுக் கொள்வது மிகவும் சுலபம். சமாதானமாக வாழ்தல் கடினம். அசாத்தியமான பொறுமையும், மனப் பக்குவமும் இருந்தால் மட்டுமே பின்னது சாத்தியமாகும்.
  7. தோண்டினால் பூமி பொறுத்துக் கொள்கிறது. மாறாக, நீர் தருகிறது; கனி வளங்களை வாரி வழங்குகிறது. பூமியிடமிருந்து நாம் நிரம்பக் கற்றுக் கொள்ள வேண்டும்.
  8. மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாதவன் வாழ்வில் ஏமாற்றங்களே மிஞ்சும்.
  9. சிறியது என்று எதையும் இகழாதே. சிறியதிலும் சிறந்தது இருக்கக் கூடும்.
  10. ' இல்லையே' என ஏங்காதீர். உம்மிலும் ' இல்லாரை' எண்ணிப் பார்த்தால், உங்கள் ஏக்கம் விலகும்.

  

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து - 10

  1. ஒரு இலக்கை அடைய பல பாதைகள் இருந்தாலும் அதில் நேர் பாதையைத் தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனம்.
  2. இன்று மழை வரவில்லை என்பது உழவனுக்கு ஏமாற்றம் தான். அதற்காக அவன் ஒரே அடியாக மனம் உடைய வேண்டியதில்லை. அவன் செய்ய வேண்டியதெல்லாம் நாளை மழை வரும் என்று நம்பிக்கையோடு காத்திருப்பது தான்.
  3. நாம் பிறரிடம் குற்றம் காண்பதிலேயே நிறைய நேரம் செலவழிக்கிறோம். நமக்குள் உள்ள குறைகளைக் கண்டு கொள்வதுமில்லை. ஒப்புக் கொள்வதுமில்லை. திருத்த முயல்வதுமில்லை.
  4. குழு மனப்பான்மை என்பது  மனிதர்களுக்கு இடையே முகிழ்க்கும் நல்ல உறவுகளை முறித்துவிடும். மனித நேயத்தை குலைத்து  விடும்.
  5. எந்த ஒரு பகுதியிலும் ஒரு சிலரே பொது அமைதிக்கு கேடு விளைவிக்கிறார்கள். பெரும்பான்மையினர் அச்சத்தால் அவர்களை விட்டு விலகி ஓடுகிறார்கள். அந்த ஒரு சிலர் வைத்ததே சட்டமாகி விடுகிறது.
  6. தேர்வில் தோற்றுப் போனால் தற்கொலை ஒன்று தான் தீர்வா? தோற்றுப் போனவர்கள் மீண்டும் வெல்வதில்லையா? உலக வரலாற்றை சற்றே புரட்டிப் பார்த்தோமானால் பல சாதனையாளர்கள் தேர்வுகளில் தோல்வியுற்ற செய்திகளைக் கண்ணுறலாம்.
  7. யாரும் உங்களை விட்டு விலக காரணமாக இருக்காதீர்கள். அனைவரையும் அன்போடு அரவணைத்து உங்களோடு இணைத்துக் கொள்ளுங்கள்.
  8. ஒருவன் உயர, உயரப் பணிவு வர வேண்டும். அது தான் அறிவின் ஆரம்பம்.
  9. ஒருவன் எவ்வளவு தான் படித்துப் பட்டம் பெற்றிருந்தாலும், உயர் பதவி வகித்தாலும், அடக்கம் இல்லாமல், ஆர்ப்பாட்டம் செய்தால், அவனை அறிவுடையோர் மதிக்க மாட்டார்கள்.
  10. நல்ல பேச்சுக்கு ஆர்ப்பாட்டம் அவசியமில்லை.அடக்கமே அதன் அணிகலன். 


திங்கள், 25 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து- 9

  1. சேராத இடம் சேர்ந்தவர்கள் எவரும் வாழ்க்கையில்  கரை சேர்ந்ததாக வரலாற்றில் பதிவு இல்லை.
  2. நல்லோர் சொல் கேள். அவர் பக்கம் நில். அவர்கள் வகுத்த பாதையில் செல். வாழ்க்கையில் வெல்.
  3. சொல் ஒன்று; செயல் வேறு என்ற ரீதியில் வாழ்வோர் எவரும் வாழ்வில் உயர்ந்ததாக வரலாறு இல்லை.
  4. முதுமையைப் பார்த்து இளமை பரிகசிக்கும். முதுமையோ இளமையைப் பார்த்துப் பரிதாபப்படும்.
  5. இளமை கூறியது, "நான் எவ்வளவு அழகாகவும், பலசாலியாகவும் உள்ளேன் பார்த்தாயா? " முதுமை அடக்கத்தோடு சொன்னது, "நானும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தேன்." புரிந்துகொண்ட இளமை தலை குனிந்தது. 
  6. பேரண்டப் பெரு வெளியில் நாம் ஒன்றுமே இல்லை என்பது அறிந்தும் நம்மால் தற்பெருமை, மமதை, அகங்காரம், வீண் ஆர்ப்பாட்டம் போன்றவற்றிலிருந்து விடுபட முடியவில்லையே!
  7. ஓராண்டு வாழ்ந்தாலும், நூறாண்டு வாழ்ந்தாலும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதே பிறவி எடுத்ததன் பயனாகும்.
  8. ஒரு வயதான மூதாட்டிக்கு சாலையைக் கடக்க ஒருவன் உதவினால், அவன் அந்த நாளை பயனுள்ள நாளாக வாழ்ந்தவனாகிறான்.
  9. வெளிச்சம் வர இருள் விலகும். கதிரொளி பட்டதும் காலைப் பனி காணாமல் போகும். அது போல் தான் துயரங்களும். காலம் தரும் ஒத்தடத்தில் கரைந்து போகும். 
  10. நல்லவர்களைப் பாராட்டுங்கள். இன்னும் நல்லது செய்வார்கள்.



   

சனி, 23 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து-8


  1. திறந்து வைக்கப்பட்டுள்ள சாக்கடைகளில் பிளாஸ்டிக் காகிதங்கள், பைகள் போன்ற வேண்டாத பொருள்களைப் போடுபவர்கள் சமூகக் குற்றவாளிகள்.  மழைக் காலங்களில் சாக்கடைகள் அடைபடுவதால் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு அவர்களே காரணம்.
  2. சாதாரணமாகச் சொன்னாலோ அல்லது வேண்டிக் கொண்டாலோ யாரும்  எதையும் காதில் வாங்கிக் கொள்வதில்லை. அதனால் தான் கண்ணதாசன்  "ஜனநாயகத்தை விடுத்து, சற்றே கையில் சவுக்கு எடுப்போம்" என்று பாடிச் சென்றார்.
  3. தேர்தல் முடிந்ததும் வெற்றி பெற்றவர்களை தோல்வியுற்றவர்கள் வாழ்த்த வேண்டும். வெற்றியாளர்கள் அடக்கத்தோடு எல்லோரையும் பாகுபாடின்றி  நடத்த வேண்டும். கட்சி வேறுபாடுகளைத் தாண்டி ஒருவர்க்கொருவர்  பிறந்த நாள் வாழ்த்துக் கூற வேண்டும். எல்லோரும் எல்லோர் வீட்டு  விழாக்களிலும் கலந்து கொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் வருமா அந்த  நயத்தக்க நாகரிகம்?
  4. பரிணாம வளர்ச்சியில் மனிதன் என்ன தான் புறத் தோற்றத்தில் விலங்குகளிடமிருந்து மாறுபட்டிருந்தாலும், அவனின் உள் மனதில் இன்னும் விலங்கு உணர்வுகளே நிரம்பியுள்ளன.
  5. ஆசை போட்டியை ஏற்படுத்துகிறது; பொறாமையை வளர்க்கிறது; வெறுப்பை  உருவாக்குகிறது; மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. முடிவில் மன அமைதி  வெளியேறுகிறது; உடல் நலம் கெடுகிறது; வாழும் நாட்கள் குறைகின்றன. அதனால் தான் அன்றே புத்தன் சொன்னான், 'ஆசையை ஒழி' என்று.
  6. நேர்மறையாக எண்ணுங்கள். மனிதர்கள் யாவரும் நல்லவர்கள்.    இனியவர்கள். உங்கள் தோழர்கள். ஐயக் கண்ணால் யாரையும் பார்க்காதீர். யாவரையும் அன்போடு அணுகுங்கள். சூழ்நிலைத் தவறுகளை பெரிய  மனதோடு மன்னியுங்கள். புல், பூண்டு முதல் மனிதர் வரை எல்லோரையும்  நேசியுங்கள். உலகம் மகிழ்ச்சியாக இருக்கும்; வாழ்க்கை வசந்தமாய்  சிரிக்கும்.
  7. மழையைக் கண்டு மகிழாதவன் நெஞ்சில் ஈரமில்லாதவன்.
  8. நாள் முழுதும் உண்மையாக உழைப்பவன் மட்டுமே உண்ணவும் உறங்கவும்  தகுதி உடையவன்.
  9. தவறு செய்வது மனித இயல்பு. அதே தவறைத் திரும்பத் திரும்பச் செய்வது அறிவுடைமை அல்ல.
  10. மழைக்காக உழவன் இறைவனை வேண்டுகிறான். மண்பானை செய்பவனோ மழை பெய்யக் கூடாது என இறைஞ்சுகிறான். என்ன செய்வான் இறைவன், பாவம்!

 
    

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து-7


  1. உருப்படாதவன் என்று யாருக்கும் அவசரப்பட்டு பட்டம் சூட்டி விடாதீர்கள். அவனுக்குள்ளும் ஏதாவது திறன் ஒளிந்து இருக்கலாம். அதைக் கண்டறிந்து அவனுக்கு முறையான பயிற்சி அளித்தால், அவன் உயர்நிலைக்கு வருவான். சற்று காலம் பிடித்தாலும் முயற்சியைக் கைவிடாது தொடர்ந்து உழைத்தால்  வெற்றி நிச்சயம்.
  2. அடித்தாலும், இடித்தாலும், ஏளனம் செய்தாலும், எள்ளி நகையாடினாலும், வாய்க்கு வந்தபடி வசைமாரி பொழிந்தாலும் கொண்ட கொள்கையிலிருந்து  பிறழாமல் உண்மை வழியில் நடப்பதன் பெயர்தான் காந்தியம். 
  3. நம்மால் செயல்படுத்த முடியவில்லை என்பதற்காக நீதி நெறிகளை கேலி செய்தல் என்பது அறிவுடைமை அல்ல. நம்மை அளவீடாகக் கொண்டு நாமே உலகத்தை அளத்தல் ஒப்புக்கொள்ளத் தக்கதல்ல.
  4. வெளியே தெரியாமல் மரத்திற்காக நீர் சேகரிக்கிறது வேர். வேர் போன்று சில நல்லவர்கள் அமைதியாக, விளம்பரமில்லாமல் சமுதாயத்திற்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சில அற்பப் பதர்கள் மட்டுமே சிறிய சிறிய விசயங்களுக்காக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்; தற்பெருமை  பேசுகிறார்கள்; ஆர்ப்பரித்து, அமர்க்களம் செய்கிறார்கள்.
  5. கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே என்று பகவத் கீதை வகுப்பு  நடத்துபவர்கள், தாங்கள் ஆற்றும் பணிக்கு வெகுமதி இல்லையே, விளம்பரம்  இல்லையே, யாரும் பாராட்டவில்லையே என்று அங்கலாய்க்கிறார்கள்;   அவதிப் படுகிறார்கள்; விரக்தி அடைகிறார்கள்.
  6. இடிப்பதாலோ, அடிப்பதாலோ யாரும் உண்மையில் திருந்துவதில்லை. தாமே தாம் செய்வது தவறு என உணரும் பொழுது மட்டுமே ஒருவரால் உண்மையில்  திருந்த முடியும். ஆக, திருத்தம் என்பது உள்ளிருந்து முளைவிட வேண்டும்.
  7. ஒரு உணவகத்திற்குச் சென்று நூறு, இருநூறு உரூபா செலவழித்து உணவு அருந்துகிறோம். ஆனால், நம்மில் பலர் உணவு பரிமாறியவருக்கு இரண்டு உரூபா கூடக் கொடுப்பதில்லை. பணமிருந்தும் கொடுக்க மனம் இருப்பது  இல்லை. ஒருவேளை அந்தத் தோழர் பகுதி நேரக் கல்லுரி மாணவராகக் கூட இருக்கலாம். தயவு செய்து அவருக்கு உதவுங்கள்.
  8. அரசு மருத்துவ மனை வளாகத்தில் எச்சில் துப்புகிறோம். புகைக்கிறோம்.     இரைச்சல் போடுகிறோம். நோயாளிகளை நாம் சற்றும் நினைத்துக் கூட    பார்ப்பதில்லை. நாமே சுகாதார சீர்கேட்டை உண்டாக்கலாமா? மருத்துவ    மனைகள் தூய்மையாக இருக்க நாம் உதவ வேண்டும்.
  9. கிராமத்தில் பேருந்தில் ஏறியதும் வெற்றிலை, பாக்கு, புகையிலை போடும்  சிலரை கவனியுங்கள்.பயணம் முழுதும் வாயில் போட்டு குதப்பி விட்டு நகரில் வந்து இறங்கியதும் அழகான சாலையில் சிவப்பான தாம்பூலத்தை அனுபவித்துத் துப்புவார்கள். நம் நகரின் அழகையும், சுகாதாரத்தையும் நாமே பாழாக்குவது எவ்வகையில் நியாயம்? 
  10. நடைபாதை நாகரிகம் என்று ஒன்று உள்ளது.நடைபாதையில் நின்ற வண்ணம் ஊர்க் கதைகள் பேசிக்கொண்டு மற்றவர்கள் நடந்து செல்ல  இடையூறாக இருக்கக் கூடாது.



வியாழன், 14 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து-6


  1. எடுத்தேன்;கவிழ்த்தேன் என்று செயல்படுதல் சர்வாதிகாரம்; நடைமுறைக்கு  ஒத்து வராத நாகரிகமற்ற ஆட்சி முறை.
  2. ஆசிரியர்களே! ஒரு குழந்தை வீட்டு வேலை செய்து வராவிட்டால் வானம் இடிந்து, விழுந்து  விடப் போவதில்லை. தண்டனைகள் மூலம் இளந்தளிர்களைக் கருக்கி விடாதீர்கள். அன்பு மூலம் மட்டுமே ஒரு குழந்தையை நம் வழிக்குக் கொண்டுவர இயலும்.
  3. மனிதப் பிறவி மிக உயர்ந்தது. ஆடு,மாடுகளைப் போல சாலையிலே அடிபட்டுச் சாவதற்காக நாம் இம்மண்ணில் பிறக்கவில்லை. செயற்கரிய செய்யும்பொருட்டு பிறந்திருக்கிறோம். எனவே எச்சரிக்கையோடும், பாதுகாப்பாகவும் இருங்கள். உங்கள் குழந்தைகளையும் அவ்வாறு வாழக் கற்றுக்கொடுங்கள். உங்களை நம்பி உங்கள் குடும்பத்தில் பல பேர்கள் கனவுகளோடு காத்திருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
  4. நீ என்னவாக வேண்டுமானாலும் ஆவது உனது விருப்பம்; உனது உரிமை. பொறியாளர், மருத்துவர், வியாபாரி, விஞ்ஞானி, தொழிலதிபர், தொழிலாளி, ஓட்டுனர் இவற்றில் எது என்றாலும் சரியே. தேர்ந்து எடுத்த துறையில் திறமைசாலியாக இரு. அது தான் முக்கியம்.மற்றபடி, செய்யும் தொழிலில் கீழானது, மேலானது என்று எந்த வேற்றுமையும் இல்லை.
  5. எதிர்மறையாக எதைச் சொன்னாலும் அதைச் செய்து பார்க்க முனைவது குழந்தைகளின் இயல்பு. எனவே முடிந்தவரை குழந்தைகளிடம் எதிர்மறையாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.
  6. குழந்தைகள் அப்பா,அம்மாவை உயர்வாகக் கருதுகிறார்கள். எனவே அவர்களுக்கு முன்னால் பெற்றோர்கள் எந்தத் தவறும் செய்யக் கூடாது. குறிப்பாக,சண்டை போட்டுக் கொள்ளல் கூடாது.
  7. எப்போதும் நல்லவர்களுடன் இருங்கள். சில தற்காலிக சில்லரை லாபங்களுக்காக தீயவர் பக்கம் சாயாதீர்கள். அது, உங்களுக்கும் நல்லதல்ல; உங்களை உள்ளடக்கிய சமூகத்திற்கும் நல்லதல்ல.
  8. பணிவாக இருங்கள். பாசமாகப் பழகுங்கள். இனிமையாகப் பேசுங்கள். எல்லோரும் உங்களை நேசிப்பார்கள்.
  9. அதிகாரத்தைப் பயன்படுத்தி சில தற்காலிக வெற்றிகளை அடையலாம். அன்பினால் மட்டுமே நிரந்தர வெற்றிகளை ஈட்ட முடியும்.
  10. பெரும்பான்மையான மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள். ஆனாலும், ஒரு சில சுயநலவாதிகள் அவர்கள் மீது வன்முறையைத் திணிக்கிறார்கள்.

புதன், 13 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து-5


  1. நேசிக்கும் தொழிலை தேர்ந்து எடு அல்லது தேர்ந்து எடுத்த தொழிலை நேசி.
  2. உன் தாத்தா தன் தொழிலில் கோடி,கோடியாக பணம் ஈட்டியிருக்கலாம். உன் அப்பா எல்லாவற்றையும் இழந்து ஓட்டாண்டியாகி இருக்கலாம். இரண்டிலிருந்தும் பாடம் படி. நீ முன்னேற பாதைகள் புலப்படும்.
  3. எப்பொழுதும் மகிழ்ச்சியாக, கலகலப்பாக இரு. அது உன் ஆயுளைக் கூட்டும்; நல்ல நண்பர்களை உருவாக்கும்.
  4. நாளை நமக்கு வெற்றி மாலைகளைச் சூட்டக் காத்திருக்கிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், இன்று அதற்கு நம்மை தகுதியாக்கிக் கொள்வது மட்டுமே.
  5. அளவுக்கு மீறிய அறிவுரைகளும் உபதேசங்களும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
  6. உண்மையான நட்பு நீ துயரப்படும் பொழுது கண்ணீர் துடைக்கும். நீ சந்தோசிக்கும் பொழுது, பரவசப்படும்.
  7. படித்தவன் சூதும் வாதும் செய்தால் 'ஐயோ'வென்று போவான்' என்று சபிக்கிறார் பாரதி. ஆனால், அவன் ஐயோ என்றும் போகவில்லை; அம்மா என்றும் சாகவில்லை.மாறாக, ராஜ போகத்தில் வாழ்கிறான்.
  8. தலைக்கனம் ஆபத்தானது. அது ஒருவனை அதல, பாதாளத்திற்குள் அமிழ்த்து விடும்.
  9. படிக்காதவர்களிலும் அறிவாளிகள் உள்ளனர், படித்தவர்களில் முட்டாள்கள் இருப்பதைப் போல.
  10. சுற்றுப்புறத்திலிருந்து ஒரு சிறிய குப்பையை நீக்குபவன் கூட தூய்மையான உலகை நிர்மாணிப்பதில் பங்கு கொள்கிறான்.


திங்கள், 11 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து-4


  1. உன்னிடம் இருப்பதே உனக்குப் போதும். மற்றவனோடு ஒப்பிட்டுப் பார்த்துப் பொறாமைப்பட்டால், அது மனநலக் கேட்டுக்கு இட்டுச் செல்லும்.
  2. மரம் மழை தருகிறது. நிழல் தருகிறது. மண் காக்கிறது. பறவைகளுக்கு வீடாகிறது. பயணிகளுக்கு நிழற்குடையாகிறது. நட்புணர்வோடு நம்மைப் பார்த்து புன்னகைக்கும் மரத்தை வெட்டலாமா?
  3. இலட்ச, இலட்சமாய் செலவழித்து சாலை அமைக்கிறார்கள். அது நம் சாலை. நமது வரிப் பணத்தில் அமைக்கப்பட்டது. அதில் கட்சிக் கொடிகள் நடவும் அலங்கார வளைவுகள் அமைக்கவும் குழி தோண்டி சாலையைச் சிதைக்கிறோம். இது நியாயமா?
  4. எச்சில் துப்பி, குப்பை கொட்டி பொது இடங்களை அசுத்தம் செய்பவர்களை கடுமையான சட்டங்கள் மூலம் திருத்துவதில் தவறேதுமில்லை.
  5. சொல்லித் திருந்தாத சில பிறவிகள் கடுமையான சட்டங்களுக்கும் தண்டனைகளுக்கும் மட்டுமே அச்சப்படுவார்கள்.
  6. நல்ல நண்பர்களைப் பார்க்கும்பொழுது, பேசும்பொழுது, சுக, துக்கங்களை அவர்களோடு பகிர்ந்துகொள்ளும் பொழுது நமது கவலைகள் எல்லாம் கதிரொளி பட்ட காலைப் பனி போல் ஓடி ஒளிந்து கொள்கின்றன.
  7. உண்மையான நட்பு சாதி,மத,இன வேற்றுமைகள் பார்க்காது. ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வுகள் அதற்கு இல்லை.துன்பத்திலும்,இன்பத்திலும் தொடர்ந்து வரும்.
  8. ஒவ்வொரு முறை உங்களுக்கு இலாபம் கிட்டும் பொழுதும் அதில் ஒரு சிறு பகுதியை நோயாளிகளின் மருத்துவத்திற்காகவோ, ஏழைகளின் கல்விக்காகவோ ஒதுக்குங்கள். உங்களைச் சுற்றி ஒரு நல்ல சமூகம் உருவாக அது வழிவகுக்கும்.
  9. நீங்கள் எப்பொழுதும், எதிலும் ஒரு நல்ல முன்னுதாரணமாகத் திகழ்ந்தால், உங்கள் குழந்தைகள் நல்ல குடிமக்களாக உருவாவர்.
  10. சோதனைகள் வரும் பொழுது வேதனைப்படுவது விவேகமல்ல. அவற்றிலிருந்து மீள்தல் பற்றிய வழிகளை யோசிப்பதே அறிவுடைமை.  

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து-3


  1. கொடுப்பதற்கு பணம் மட்டும் இருந்தால் போதாது; ஈரமான மனமும் வேண்டும்.
  2. உறவுகள் வலுப்பட கொஞ்சம் விட்டுக் கொடுக்க வேண்டும். எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். உண்மையான நேசம் வேண்டும். மனம் விட்டுப் பேசுதல் வேண்டும். ஒப்பீட்டைத் தவிர்க்க வேண்டும். சாதி,மதம்,பொருளாதார ஏற்றத் தாழ்வு இவை தாண்டி அன்பை மட்டுமே அளவீடாகக் கொள்ள வேண்டும்.
  3. சின்னச் சின்ன சில்லரைக் காரணங்களுக்காகப் பிரிதல் என்பது பக்குவமற்ற மனத்தையே காட்டும்.
  4. பொது நலச் சேவை  செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் அருகி விட்டனர். ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
  5. பை நிறைய ஊதியம் வாங்கியும் மனம் நிறையாததால் கையூட்டு வாங்குகிறார்கள்.
  6. வாழ்க்கை சிலருக்கு வசந்த மாளிகை. பெரும்பாலோருக்கு போர்க்களம். சிலர் மாளிகையில். பலர் குடிசைகளில். இன்னும் சிலரோ நடைபாதைகளில். இந்த ஏற்றத் தாழ்வு இருக்கும் வரை 'ஒன்று பட்ட தேசம்' என்பது வெற்றுக் கனவே.
  7. எல்லோருக்கும் எல்லாமும் சமம் என்று சட்டம் சொல்வதைக் காட்டிலும் வேடிக்கை வேறொன்று இருக்க முடியாது.
  8. தோற்ற பிறகும் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, அதிலிருந்து பாடம் படிக்காதவன் என்றுமே வெற்றி பெற முடியாது.
  9. எப்படி வெற்றி நிரந்தரம் இல்லையோ, அது போல தோல்வியும் நிரந்தரமல்ல. மீண்டும் வெல்லலாம்.
  10. பதவிக்கு வருவது என்பது பொது மக்களுக்கு உழைப்பதற்கே;தம் மக்களுக்கு அல்ல.

வியாழன், 7 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து -2


  1. பாடுபட்டால் மட்டும் போதாது; படும் பாட்டில் ஈடுபாடு வேண்டும். அப்பொழுது தான் அதில் பலனிருக்கும்.
  2. நேற்றைய வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாது இருந்திருக்கலாம். அதையே நினைத்துப் புலம்பி இன்றைய வாழ்க்கையை துயரமாக்கிக் கொள்வது முட்டாள்தனம்.
  3. நேற்று விதைத்தது இன்று முளைக்காதது பற்றிக் கவலைப்படாதே. நாளை முளைக்கலாம். நாளை மறுநாள் முளைக்கலாம். அப்படியும் முளைக்காவிட்டால் மீண்டும் விதை. மீண்டும் மீண்டும் விதை. நம்பிக்கையும் தொடர் முயற்சியும் தான் வாழ்க்கை.
  4. பல முறை அடித்தும் அம்மி நகரவில்லையா? அடி போதவில்லை. மீண்டும் அடி.தொடர்ந்து அடி. ஏதோ ஒரு அடியில் அம்மி கண்டிப்பாய் நகரும்.
  5. இரவாமல் இருப்பது நன்று.இரந்தும் ஈயாமல் இருப்பது கொடுமை.
  6. தேவைகளைக் குறைத்துக் கொள். சேமிப்பதை தேவை உள்ளவனுக்குக் கொடு.
  7. உன் வழித்தோன்றல்களுக்கு நீ விட்டுச் செல்ல வேண்டியது பணமல்ல-ஒரு நல்ல பாரம்பரியம்.
  8. இயற்கையை அழிப்பதன் மூலம் மனிதன் தானே தனக்கான புதைகுழியைத் தோண்டிக் கொள்கிறான்.
  9. ஒரு பக்கம் கடவுள் சிலைக்கு பாலாபிசேகம். மறுபக்கம் பாலுக்கு அழும் பாலகர்கள். இதன் பேர் தான் சமூக அநீதி.
  10. யாரையும் புண்படுத்தாமல் இருப்பதே உயர்ந்த பண்பாடு.

புதன், 6 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து -1

  1. இதயங்கள் இணையும் பொழுது உறவுக்குப் பதியம் போடப்படுகிறது.
  2. மதியை இழக்கும் பொழுது விதி மீது நம்பிக்கை ஏற்படுகிறது.
  3. அறிவின் தொடர்ச்சி ஆக்கம். படிப்பின் தொடர்ச்சி படைப்பு.
  4. கத்தி எடுப்பது மட்டுமா வன்முறை? கடுஞ் சொல்லும் ஒருவகை வன்முறையே.
  5. வளர்பிறையும் தேய்பிறையும் வெறும் காட்சிப் பிழைகளே.
  6. நல்லது யார்க்கும் பணிவு. என்றும் வேண்டும் துணிவு.
  7. செல்வத்தில் சிறந்தது அறிவு. அறிந்ததில் வேண்டும் தெளிவு.
  8. கல்லாகிப் போன மண்ணில் காய்க்காது செடி கொடிகள்.
  9. இருளாகிப் போன மனதில் முளைவிடாது கற்பனைகள்.
  10. எண்ணங்கள் நல்லதானால் ஏற்றங்கள் ஓடி வரும்.

திங்கள், 4 பிப்ரவரி, 2013

அது போதும்

குபேரனாகாட்டிப் பரவாயில்லை,
கூழாவது கிடைக்கணும்
ஒவ்வொரு நாளும் .
ராஜ வாழ்க்கை
கிடைக்காட்டிப் போகட்டும் ;
ராப்பட்டினி கெடக்காம
இருந்தாப் போதும். 

இதயத்தின் குரல்

'அது முடியாது'என்றது கர்வம்.
'அது ஆபத்தானது'என்றது அனுபவம்.
'அது அர்த்தமில்லாதது'என்றது அறிவு.
'முயற்சித்துப் பார்ப்போமே'என்றது இதயம்.
                                                                      -யாரோ 

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

மூன்று குறுங் கவிதைகள்

                            ஆசை
ஆசைப் படாத
மனம் வேண்டும்
என்பதே
என்னாசை
                              பற்று
பற்றறுக்க வேண்டும்
எனும் நினைப்பைப்
பற்றிக் கொண்டிருக்கிறேன்
கெட்டியாக.
                               எழுத்து
எழுத முடியவில்லை
எனும் என் இயலாமை பற்றி
எழுதிக் கொண்டிருக்கிறேன்
தற்சமயம்.

                             .




சனி, 2 பிப்ரவரி, 2013

எழுதுதல்

எழுத வேண்டுமெனப்
பீறிடும் ஆசை
வெகு நாளாய்.
எதை எழுதுவதென
தீர்மானிக்க இயலவில்லை.
எதைப் பற்றி வேண்டுமானாலும்
எழுதலாம் என்கின்றனர்
ஏற்கெனவே எழுதியவர்கள்.
என்றாலும்
அச்சமாய் இருக்கிறது,
யாரேனும் எழுதியதை
எழுதி விடுவேனோவென்று.