புதன், 14 மார்ச், 2012

அரும்புகளுக்கு அறிவுரைகள்

சின்னஞ் சிறிய குழந்தைகளே,
தேன்மொழி பேசும் குயிலினமே,
கன்னலின் இனித்திடும் நற்சாறாய்
கவலைகள் தீர்த்திடும் மருந்தமுதே!

நல்லதை என்றும் எண்ணிடுவீர்
நற்செயல் புரிந்தே உயர்ந்திடுவீர்
அல்லதைப் புறத்தே ஒதுக்கிடுவீர்
ஆன்றோர் நல்வழி நடந்திடுவீர்

தேசம் தன்னை நேசித்தே
தினமும் கடமைகள் ஆற்றிடுவீர்
பாசத்துடனே தமிழ் மொழியை
பாங்காய் நாளும் வளர்த்திடுவீர்

கல்வியைக் கண்ணாய்ப் போற்றிடுவீர்
கணினி இயலைக் கற்றிடுவீர்
பல்மொழி ஞானம் பெறுவதனால்
பாரினில் எங்கும் சென்றிடலாம்

எல்லா உயிரும் சமமென்ற
உணர்வை நெஞ்சினில் கொள்வீரே
அல்லா ஏசு ராமபிரான்
அனைவரும் நமக்கு ஒன்றேதான்.

வேண்டாம் நமக்குள் பிரிவினைகள்
வெறுப்பின் வேர்களை அறுத்தெறிவீர்
ஆண்டவன் பேரால் நமக்குள்ளே
அடிதடி நிகழ்தலை தடுத்திடுவீர்.

சொல்லும் செயலும் ஒன்றானால்
சொர்க்கம் நம்முன் உருவாகும்
கல்லும் கூட கனியாகும்.
கனவுகள் எல்லாம் நனவாகும்.

வாழும் நாட்கள் மிகக்குறைவு
வாழ்க்கை நீண்ட கடும்பயணம்
சூழும் தடைகளைப் பொடியாக்கி
சுறுசுறுப்புடனே உழைத்திடுவீர்.

நம்பிக்கை தீபம் எரியட்டும்
நாளைய உலகம் உம்கையில்
தெம்புடன் செயல்கள் புரிந்திடுவீர்
தேசம் தன்னை உயர்த்திடுவீர்.
உடலை நன்கு போற்றுங்கள்
உணவை மென்று தின்னுங்கள்
திடமாய் காரியம் செய்திடுவீர்
துணிவால் நெஞ்சை நிரப்பிடுவீர்.

மரங்களை நட்பாய் மதித்திடுவீர்
மண்ணில் வனங்களைப் பெருக்கிடுவீர்.
விண்மழை இங்கே கொட்டட்டும்
வசந்தம் வாழ்வில் கிட்டட்டும்.

வறுமை தடைஎனல் அறிவீனம்
வாழ்க்கையில் சோம்பல் பலவீனம்
எருமையாய் சோம்பி இருக்காமல்
எருதென உழைத்தால் பிரகாசம்.

தோல்விகள் தொகையாய் படையெடுக்கும்
துவண்டு நின்றால் அடிசறுக்கும்
ஆல்போல் நிமிர்ந்து நின்றிடுவீர்
அடிக்கும் புயலை வென்றிடுவீர்.

அறிவியல் உலகை முன்னேற்றும்
ஆயுதம் முற்றிலும் விலக்கிடுவீர்
வெறிப் போருணர்வை வெறுத்திடுவோம்
வெல்வோம் உலகை அன்பாலே.

உணவைப் பெருக்கும் வழிகாண்போம்
உழைக்கும் மக்களைப் போற்றிடுவோம்
பணம்தான் எல்லாம் என்றெண்ணி
பண்புகள் தம்மை இழக்காதீர்.

புதுப்புது கலைகள் கற்றிடுவீர்
புதுமைகள் பலபல கொணர்ந்திடுவீர்
கற்றலை என்றும் தொடர்ந்திடுவீர்
கடைசி வரைக்கும் படைத்திடுவீர்

ஆயிரம் பட்டங்கள் பெற்றாலும்
அடக்கம் இல்லார் அறிவில்லார்
பணிதல் யார்க்கும் நன்றென்ற
பொய்யா மொழியை மறவாதீர்.

தோல்வியைக் கண்டு துவளாதீர்
துணிந்து நின்றால் வென்றிடலாம்.
ஆல்போல் வாழ்க்கை தழைத்திடுமே!
அகிலாய் எங்கும் மணந்திடுமே!

ஒன்றாய் சேர்ந்து வாழ்ந்திடுவீர்
ஒற்றுமை பலமென உணர்ந்திடுவீர்.
பிரிந்து நிற்றல் பலவீனம்.
பின்னப் படுதல் அறிவீனம்.

கூட்டாய் மேய்ந்த எருதுகளை
கொல்ல முடியலை சிங்கத்தால்.
பாட்டினில் படித்த பாடத்தை
பகுத் தறிவோடு சிந்திப்பீர்.

பழமையில் நல்லதை எடுத்துக்கொள்.
புதுமையை அதனில் குழைத்துக்கொள்.
செழுமையில் வாழ்வு சிறக்கட்டும்.
சாதனை செயலில் பிறக்கட்டும்.

பணவெறி என்றும் நன்றல்ல
பண்புகள் தாமே பெருஞ்செல்வம்.
குணமே என்றும் பிரதானம்.
குற்றம் களைந்து வாழ்ந்திடுவீர்.

பதவி வெறியில் மூழ்காதீர்.
பாவச் செயல்கள் புரியாதீர்..
உதவி கேட்டு வருவோரை
உதறித் தள்ள முயலாதீர்.

ஏசுவைப் போல மானுடத்தை
நேசிக்க வேண்டும் எந்நாளும்.
புத்தனைப் போல வாழ்வினிலே
போக்கிட வேண்டும் பேராசை.

முகமது நபிகள் சொன்னபடி
முயன்று நல்வழி சென்றிடுவீர்.
காந்தி காட்டிய பாதையிலே
காத்திடு வீரே சத்தியத்தை.

முன்னைப் போர்கள் இனிவேண்டாம்.
முயன்று கொணர்வோம் நல்லுறவை.
அன்னை தெரசா அடியொற்றி
அணைப்போம் அன்பால் அகிலத்தை.

முதுமையை என்றும் இகழாதீர்.
முன்னோர் சொற்களைத் தள்ளாதீர்.
அக்கறை அவர்மேல் கொண்டிடுவீர்.
அன்பாய் அவர்களைப் புரந்திடுவீர்.

வீரம் மட்டும் நெஞ்சினிலே
இருந்தால் மட்டும் போதாது.
ஈரம் அதிலே சுரக்கட்டும்.
இரக்கத்தால் அது நிரம்பட்டும்.

ஏழையர் தம்மை எந்நாளும்
அணைத்திட வேண்டும் அன்போடு.
கீழாய் எவரையும் நடத்தாதே
மானுடர் யாவரும் சரிசமமே.

வேர்வை சிந்தி பெறப்பட்ட
ஒவ்வொரு பொருளும் வைரம்தான்.
ஆர்வத்துடனே உழைப்ப தனால்
ஆயிரம் சாதனைப் பூப்பூக்கும்.

மூடப் பழக்கம் ஒழித்திடுவீர்
முட்டாள்தனத்தை மாய்த்திடுவீர்.
பகுத்து அறிவீர் என்றென்றும்;
படைப்பீர் புதிய உலகத்தை.

.

சனி, 18 பிப்ரவரி, 2012

பெண்

கல்யாணத்திற்கு முன்
தினந்தோறும்
இரண்டுமுறை குளித்து
பல தடவை முகங்கழுவி
பொருத்தமாய் பொட்டிட்டு
கண்ணுக்கு மையப்பி
மணிக்கணக்காய் ஆராய்ந்து
ஆடை தேர்ந்து
உடுத்திப் பார்த்து
பிடிக்காமல் போய்
மீண்டும் மாற்றி
கோதிய தலையில்
கொத்துப் பூச்சூடி
மருதாணிச் சாயத்தை
நகம் கை பூசி
தன்னை அழகாக்கிக் கொள்வாள்.
கல்யாணத்திற்குப் பின்
அரைத் தூக்கத்தில்
அதிகாலை துயிலெழுந்து
வாசல் பெருக்கி
வண்ணக் கோலமிட்டு
சமையல் பண்ணி
வீடு பெருக்கித் துடைத்து
சலவை செய்து
குளிக்கக் கூட நேரமில்லாமல்
தன்னை அழுக்காக்கிக் கொள்வாள்.

சனி, 11 பிப்ரவரி, 2012

காத்திருக்கிறார்கள்

வானம் பார்த்து
விவசாயி.
தேர்வு முடிவுக்கு
மாணவன்.
அடுத்த தேர்தலுக்கு
அரசியல்வாதி.
பிள்ளைகளை
கல்லூரியில் சேர்க்க
நீண்ட வரிசையில்
பெற்றவர்கள்.
முதல் தேதிக்காக
அரசு ஊழியர்.
திருமணத்திற்கு
முதிர்கன்னி.
பேருந்துக்கும்
புகை வண்டிக்கும்
பயணிகள்.
மரணத்திற்கு
அதி முதியோர்.

சனி, 4 பிப்ரவரி, 2012

நானும் அமெரிக்கனே

நானும் கூட அமெரிக்காவைத் தான் பாடுகிறேன்!
நான்தான் அந்தக் கறுப்புச் சகோதரன்.
விருந்தினர் வரும்பொழுது
சாப்பிடுவதற்கு
அவர்கள் என்னை
சமயலறைக்கு அனுப்புகின்றனர்.
சிரித்தபடியே நான்,
நன்றாகச் சாப்பிட்டு
பலசாலியாக வளருகிறேன்!
நாளைக்கு
விருந்தினர் வரும்பொழுது
அவர்களோடு உட்காருவேன்.
யாருக்கும்
தைரியம் இருக்காது
“சமையலறையில் சாப்பிடு”
என்று சொல்ல.
மாறாக,
எவ்வளவு அழகாக இருக்கிறேன்
என்பதைப் பார்த்து
அவமானத்தில் ஆழ்வார்கள்.
நானும் கூட
அமெரிக்காவைத் தான் பாடுகிறேன்!
____ லாங்ஷ்டன் ஹ்யுக்ஸ்

வியாழன், 2 பிப்ரவரி, 2012

நாளை நமதே

இப்படியே போகாது காலம்
வெளிச்சம் வரும்
விடியல் மலரும்.
வாழும் நாளெல்லாம்
கோடையே கொளுத்தாது.
சோகங்கள் மட்டுமே
கொண்டதல்ல வாழ்க்கை.
சுகங்களும் தாலாட்டும்.
பாலைவனங்களிலும்
சோலைகள் உண்டு.
வீழ்ச்சியிலும்
பாடம் படிக்கலாம்.
யோசிக்கையில்
வழிகள் கிடைக்கும்.
அடி தரும் காலம்
அள்ளித் தந்து
அணைக்கவும் செய்யும்.
நம்பிக்கையோடு செயல்படு.
நல்லது நடக்கும்.
நாளை நமதே!

சனி, 28 ஜனவரி, 2012

இடமாற்றம்

மதபோதகர்கள்
எங்கள் நாட்டில்
நுழைந்த பொழுது
அவர்களிடம்
பைபிளும்
எங்களிடம்
எங்கள் மண்ணும்
இருந்தன.
அவர்கள் சொன்னார்கள்,
“நாம் எல்லோரும்
ஒன்றாய்
இறைவனைத்
துதிப்போம்!”
நாங்களும்
கண்களை மூடி
உளமாரப்
பிரார்த்தித்தோம்.
கண்களைத்
திறந்த பொழுது
பைபிள்

எங்களிடமும்
எங்கள் மண்
அவர்களிடமும்
இடம் மாறியிருந்தன!
____பிசப் டேஷ்மான்ட் ட்யூட்டு

வியாழன், 7 ஜூலை, 2011

இரவும் மனமும்

ஆயிரம்
கண்கள்
இரவுக்கு.
ஒன்று
மட்டுமே
பகலுக்கு.
எனினும்
சூரியன்
மறைந்ததும்
பூமியில்
மரித்துப் போகிறது
பிரகாசம்.
மனத்திற்கு
ஆயிரம்
கண்கள்.
இதயத்திற்கு
ஒன்று மட்டுமே.
எனினும்
காதல்
மறைந்ததும்
செத்துப் போகிறது
வாழ்க்கையின்
பேரொளி
ஆங்கில மூலம்: பிரான்சிஸ் வில்லியம் போர்டில்லான் !