செவ்வாய், 14 ஜூன், 2011

இளஞ்சிவப்பு உடையணிந்து...

உலக மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவர் கென்னடி. அவர் படுகொலை செய்யப்பட்டபோது உலகமே சோகத்தில் ஆழ்ந்தது. குறிப்பாக கருப்பின மக்கள் கென்னடி மூலம் தங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என நம்பிக் கொண்டிருந்தனர். கென்னடியின் மரணம் அவர்களை ஏமாற்றத்திற்கும் துயரத்திற்கும் உள்ளாக்கியது. அதன் வெளிப்பாடாக எழுந்த ஒரு அற்புதமான கவிதை தான் “இளம்சிவப்பு ஆடையணிந்து .....” என்ற தலைப்பில் டட்லி ரேண்டால் என்ற புகழ்பெற்ற கறுப்பின கவிஞனின் படைப்பாகும். இசைப் பாடலாகப் பாடப்படும் இந்தப் பாடல் வெளிப்படுத்தும் சோகம் கேட்பவரின் உள்ளங்களை கலங்கடிக்கும் இயல்புடையது. அந்தக் கவிதையின் சாராம்சம் பின்வருமாறு:
மழைநாள் ஒன்றில் மகிழ்வுந்தில் அமர்ந்து
மன்னவன் பயணம் செய்கிறான்.
அது அவனின் இறுதிப் பயணம் !
ஆமாம், அதுதான் அவனின் இறுதிப் பயணம்.
ஆளுநர் அருகே அவன் அமர்ந்திருக்கிறான்.
அரசியும் அவனுடன் பயணம் செய்கிறாள்.

“மூடிய உந்தில் செல்லலாம்” என்று ஆலோசனை சொல்கிறார் ஆளுநர்.
“திறந்த உந்தில் சென்றால் மட்டுமே
கையசைத்து நண்பர்களுடன் பேசிட முடியும்”
என்றே மன்னன் பயணம் தொடர்கிறான்.

ஆர்பரித்த மக்கள் நடுவே ஆனந்தமாக
மன்னனும் அரசியும் பயணிக்கிறார்கள்.
ஆளுநர் சொல்கிறார், “பாருங்கள் வெளியே!
சிரித்தபடி மக்கள் உமை வரவேற்பதை.”

மன்னன் ஆளுநரோட பயணம் செய்கிறான்
அருகில் அரசியும் அமர்ந்திருக்கின்றாள்.
மணமகள் சூடிய ரோஜா மலரின்
இளஞ்சிவப்பு ஆடையை உடுத்திய வண்ணம்.

இளஞ்சிவப்பு ரோஜாவாய் அரசி பவனி வருகிறாள்
எங்கிருந்தோ பாய்ந்து வருகின்றன தோட்டாக்கள்.
இறங்குகின்றன மன்னன் தலையில் இடியாக.
பீறிட்டு பாயும் ஊற்றென ரத்தம் கொப்பளித்தே.
அரசி குனிந்து அன்பனின் தலையை மடிமேல் கிடத்துகிறாள்
இளஞ்சிவப்பாடை ரத்தச்சிவப்பாய் உருமாறியதங்கே!

மன்னன் ஆளுநரோடு பயணம் செய்கிறான்
அருகில் அரசியும் அமர்ந்திருக்கின்றாள்....
அவளின் இளஞ்சிவப்பு ஆடை முழுதும்
ரத்தத்தின் அடர் சிவப்பு நிறம் ஏற்றப்பட்டு!

வெள்ளி, 3 ஜூன், 2011

பிர்மிங்காம் கதைப் பாடல்

படித்ததில் பிடித்ததும் பெருமளவில் என்னைப் பாதித்ததுமான ஒரு கவிதை பிர்மிங்காம் கதைப் பாடல். கருப்பு இன மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய பொழுது, அலபாமா மாநிலத்தில் பிர்மிங்காம் நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் குண்டு வெடித்தது. கள்ளங்கபடில்லாத சிறுமியர் நான்கு பேர் மடிந்துபோயினர். அந்த துயர நிகழ்வை மையமாகக் கொண்டு டட்லி ரேண்டால் என்ற அற்புதமான கறுப்பினக் கவிஞர் வரைந்த கவிதை ஓவியம் தான் பிர்மிங்காம் கதைப்பாடல் சோகம் சொட்டும் இந்தக் கவிதை, “பாதுகாப்பானது என்று நாம் கருதும் ஒரு இடம் உண்மையில் பாதுகாப்பானது அல்ல” என்ற மையக் கருத்தையும் கொண்டுள்ளது.கவிதையின் சாராம்சம் பின்வருமாறு:
“அம்மா, அம்மா, உனையொன்று கேட்பேன்
அனுமதி தந்தால் அகம் மகிழ்ந்திடுவேன்
பிர்மிங்காம் வீதி விடுதலை ஊர்வலத்தில்
கலந்து கொள்ள அனுப்பி வைப்பாயா?”
“வேண்டாம் என் செல்லமே! வீண்வம்பு எதற்கு?
வெறிபிடித்த நாய்கள் விரட்டிடும், கண்ணே!
விலங்கும் நீர்பீச்சியும் துப்பாக்கியும் சிறையும்
சின்னக் குழந்தையுனக்குப் பொருந்தாது பெண்ணே!”
“ஆனால்....அம்மா, தனியாய் நான் போகவில்லை;
அருமைத் தோழிகள் உடன் வருகின்றனர் .
அடிமை நிலையிலிருந்து நாட்டை வென்றெடுக்க
பிர்மிங்காம் வீதிகளில் ஊர்வலம் செல்கிறோம்.”
“வேண்டாம் செல்லமே,சொல்வதைக் கேள்;
தேவாலயம் சென்று மாதாவை வணங்கிடுவாய்
குழந்தைகள் இசைக் குழுவில் பாடிக் களித்திடுவாய்!”
அருமை அம்மா ஆசைமகளை அருகில் அழைத்தாள்;
கருமைவண்ண முடியை நன்கு கோதி முடித்தாள்;
ரோஜாமுகம் பளபளக்க நீரால் கழுவினாள்;
வெண்ணிறக் கையுறை கரங்களில் மாட்டினாள்;
சின்னப் பாதங்களில் காலணி அணிவித்தாள்.
ஆலயம் நோக்கி அனுப்பி வைத்தாள்.
அன்னையின் மனதில் அளவிலா ஆறுதல்.
ஆலயம் தன்னில் அருமைக் கண்மணி
பாதுகாப்பாய் இருப்பதை எண்ணி
அம்மா முகமெங்கும் ஆனந்தப் புன்முறுவல்!
அந்தோ, பரிதாபம்! அப்பாவி அம்மாவுக்கு
அப்போது தெரியவில்லை
அது தான் அவளின்
கடைசிப் புன்முறுவல் என்று.
கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாமே முடிந்துபோனது.
குண்டு வெடித்ததில் சிதறியது தேவாலயம்.
நெஞ்சம் பதைபதைக்க
கண்ணீர் பெருக்கெடுக்க
தேவாலயம் நோக்கி
பிர்மிங்காம் வீதிகளில்
ஓட்டமாய் ஓடினாள்
அந்த அபலைத் தாய்!
குழந்தையின் பெயரைக் கூவியபடி
குவிந்திருந்த கண்ணாடி, செங்கல் துண்டுகளுக்கிடையே
கைவிட்டுத் துழாவினாள்.
அய்யோ, கடவுளே!
கைக்குக் கிடைத்தது ஒரு காலணி மட்டுமே –
ஆசை மகளின் ஒற்றைக் காலணி!
வெறி கொண்டவளாய் கத்தினாள்,
“இதோ, என் கண்மணியின் காலணி!
ஆனால்... எங்கே, என்னாசைக் கண்மணி?
ஐயோ! எங்கே, என் செல்ல மகள்?”