வெள்ளி, 25 செப்டம்பர், 2009

கனவு மெய்ப்பட வேண்டும்!

இடி விழுந்தாலும்
இடியாத
மனம் வேண்டும்.
எதிரியையும்
நேசிக்கும்
இதயம் வேண்டும்.
நல்லதே
நடக்குமென்ற
நம்பிக்கை வேண்டும்.
நினைத்ததை
நடத்தியே
தீர்வதென்ற
உறுதி வேண்டும்.
எல்லாமும்
எனக்கென்ற
எண்ணம் நீங்கி
'எல்லார்க்கும்
எல்லாமும்'
எனும் எண்ணம்
ஓங்க வேண்டும்.
'முடியாது'
என்ற சொல்
விடை பெற்று
ஓட வேண்டும்.
முயலாத பேர்களுக்கு
இடமில்லை
மண்ணகத்தில்
என்று விதி
இயற்றல் வேண்டும்.
கூராக வேண்டும்
சிந்தனை.
நேராக வேண்டும்
பார்வை.
யாராண்டால்
என்ன எனும்
அலட்சியம்
இனியேனும்
நமைவிட்டு
அகல வேண்டும்.
தமிழ் மீது
என்றென்றும்
சரியாத
காதல் வேண்டும்.
தேசத்தின் பால்
தணியாத
பாசம் வேண்டும்.
சாதி மதப்
பிரிவினைகள்
நிரந்தரமாய்
ஒழிய வேண்டும்.
மண்ணெல்லாம்
மழை
கொட்ட வேண்டும்.
ஆறெல்லாம்
கரை புரண்டு
ஓட வேண்டும்.
வயலெல்லாம்
செந்நெல்லாய்ச்
சிரிக்க வேண்டும்.
வயிறெல்லாம்
பசியாறிக்
குளிர வேண்டும்.

புதன், 16 செப்டம்பர், 2009

மழை

மழை இல்லையேல் மன்னுயிர் இல்லை

மழை பொழிந்தால் மண் சிரிக்கும்
மண் சிரித்தால் பொன் விளையும்.

மேகம் அழும் பொழுது மண்ணின்
தாகம் தணிகிறது.

மழையும் மரங்களும் நல்ல நண்பர்கள்.
மழை பொழிய மரங்கள் வளரும்.
மரங்கள் வளர மழை பொழியும்.

தேவர் உலகில் அமிழ்தம் உண்டோ இல்லையோ
தெரியாது.ஆனால், வானத்தில் அமிழ்தம் உள்ளது.
அதன் பெயர் மழை.

குளிர்விக்கும் மழைக்கு கொதிப்பேறி விட்டால்
நாட்கணக்கில் கொட்டோ கொட்டென்று கொட்டும்;
வெள்ளம் பெருக , விரயமாகும் மண்.

மழை சொட்டவும் செய்யும்; கொட்டவும் செய்யும்.

மழைநீரைத் தேக்கி வைக்க குயவன் பானைகள்
செய்துகொண்டிருந்தான். மழை பெய்து மண் பானைகள்
கரைந்து காணாமல் போயின.

பெய்யாமல் கெடுப்பது மட்டுமின்றி பெய்தும் கெடுக்கும்
ஆற்றல் மழைக்கு உண்டு என்பர் தமிழ் ஆன்றோர்.

மழை பொழிந்து மண்ணில் ஈரம் கசிந்தால் தான்
மக்கள் மனம் நிறைந்து மகிழ்வார்கள்.

மழுங்காகி.....மழுங்காகி

"ஏங்க, உங்களத்தான்,
படியில நிக்காதீங்க
ஏறி, எறங்கறவங்களுக்கு
எடஞ்சல் பண்ணாதீங்க",
நடத்துனர்
நயமாகவும்
நாகரீகமாகவும் வேண்டினார்,
பயனேதும் இல்லாது.
"ஒன்னத் தானப்பா
படிய விட்டு மேலேறு,"
இம்முறை
நடத்துனர் குரலில்
காரமும்
கண்டிப்பும் தெறித்தது.
ஆனாலும்
நம் ஆசாமி
அசைய மறுத்தான்.
"ஏறுடா மேலே
கத்திகிட்டே இருக்கேன்
புடிச்சி வெச்ச
புளி மாதிரி
நிக்கிறியே."
இந்த மொழி
நன்கு புரிந்ததால்
அவசர அவசரமாக
மேலேறினான் ரோசக்காரன் (?)

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

கிரேண்ட் கேன்யன்


கிரேண்ட் கேன்யன்,
நீரும் வளியும்
குளிரும் வெப்பமும்
கல்லையும் மண்ணையும்
கடைந்தும் கரைத்தும்
எழுதிய அற்புதம்!
உலக மகா அதிசயம்!
இயற்கை படைத்த
எழில் மிகு காவியம்!

வெறி பிடித்த
கொலராடோவின்
திமிர் பிடித்த வெள்ளம்
வடித்தெடுத்த
வண்ணக்காட்சிதான்
கிரேண்ட் கேன்யன்!

செம்மாந்து நிற்கும்
செங்குத்துப் பாறைகள் நடுவில்
ஆழ ஆழமாய்
பள்ளத்தாக்கு........
அதற்குள்ளே
நீலப் பெரும்பாம்பாய்
வளைந்து வளைந்து
விரைந்து ஓடும்
கொலராடோ நதி!

எத்தனை விதமாய்
பாறைகள்.
காலங்காலமாய்
இயற்கையின்
இடைவிடாத செதுக்கலில்
எத்தனை விதமாய்
வடிவங்கள்!
வடிவத்திற்கு ஏற்ப
வைக்கப்பட்ட பெயர்கள்!
அமெரிக்கப் பாறைகளில்
இந்தியக் கடவுளரை
செதுக்கியுள்ள
இயற்கையின் விளையாட்டை
என்னென்று நாம் சொல்ல!
குளிர் காலம்
பாறை உச்சிகளில்
பனிப் பூக்களால்
முடி சூட்டி மகிழும்!

உதயத்தின் பொழுதும்
மறையும் பொழுதும்
கிரணக் கற்றைகளை
கிரேண்ட் கேன்யனில் தெளித்து
பாறை முகடுகளில்
சூரியன் செய்யும்
வர்ண ஜாலங்களை
வார்த்தைகள் கொண்டு
வர்ணிக்க முடியாது.
இருண்ட அதன் ரகசியங்களை
கொஞ்சம் கொஞ்சமாக
வெளிக் கொணரும்
காலைக் கதிரவனின்
கலை விளையாட்டை
ரசிப்பதற்கென்று
வெவ்வேறு நாடுகளிலிருந்து
வித விதமாய் மனிதர்கள்!

வானமும் வளியும்
ஞயிற்றின் ஒளியும்
மண்ணும் காலமும்
மழை நீர் பெருக்கும்
ஒன்றிணைந்த
பேரானந்தப் பெருவெளி தான்
கிரேண்ட் கேன்யன்!

மனிதன் அமைத்ததல்ல-
மயன் சமைத்ததல்ல-
யாருடைய ஆணைக்கும்
அடங்காமல்
எவ்விதத் திட்டமும்
இல்லாமல்
யுக யுகங்களாக
இயற்கை பாடிய
இணையற்ற காவியமே
கிரேண்ட் கேன்யன்!

ஆறு மில்லியன் ஆண்டுகள்
வரலாறு கொண்ட
கிரேண்ட் கேன்யனின்
ததும்பி வழியும் அழகையும்
தன்னில் ஒளித்து வைத்திருக்கும்
இரகசியங்களையும்
ஒரு நாளில் பார்த்து
சொல்லவும் முடியாது......
ஒரு பக்கத்தில் எழுதி
புரிய வைக்கவும் முடியாது!

[ 2004 அக்டோபர் 29 மாலையிலும் 30 காலையிலும்
மனைவி, மகன், மருமகள் ஆகியோருடன்
கிரேண்ட் கேன்யனை ரசித்த பொழுது மனதில்
கிளர்ந்த உண்ர்வுகளின் பதிவுகளே
மேற் கண்ட வரிகள் ]

புதன், 9 செப்டம்பர், 2009

பயணம்

அந்த வண்ணத்துப் பூச்சி
நான் பயணித்த
இரவுப் பேருந்தில்
மெல்லிய
இறக்கைகளை
அசைத்தவண்ணம்
பறந்து கொண்டிருந்தது
பறந்து பறந்து
சலித்தது போல்
யாருடைய சட்டையிலோ
அல்லது
சேலையிலோ
ஒட்டிக்கொண்டது
அதை
மறந்திருந்த பொழுது
மீண்டும்
பறக்க ஆரம்பித்தது.
அம்மா மடியில் இருந்த
சின்னக் குழந்தை
கையை நீட்டிப்
பிடிக்க முயன்று
தோற்று
அழுதது.
இடையில் நான்
இறங்கிக் கொண்டாலும்
அந்த வண்ணத்துப் பூச்சி
என்னவாகியிருக்குமோவென
சின்னக்கேள்வி
மனதில்
ஒரு பெரிய
சுமையாய்.........
யாருடைய
பூட்ஸ் காலிலும்
நசுங்காமல்
இருந்தால் போதும்!

சனி, 5 செப்டம்பர், 2009

காதலின் தத்துவம்

ஊற்றுகள்
நதிகளோடு
சங்கமிக்கின்றன.
நதிகள்
கடலோடு
ஐக்கியமாகின்றன.
வானத்திலுள்ள
வாயுக்கள் அனைத்தும்
இனிமையான
உணர்ச்சிப் பெருக்கில்
என்றென்றும்
ஒன்றோடொன்று
கலக்கின்றன.
உலகத்தில்
தனித்ததென
ஒன்றுமேயில்லை.
எல்லாப் பொருள்களும்
ஒரு புனித விதியின் கீழ்
ஒன்றையொன்று
சந்தித்து
ஒன்றாகக் கலக்கின்றன.
நான் மட்டும்
ஏன்
உன்னோடு
கலத்தல் கூடாது?
நன்றாகப் பார்,
அந்த மலைகள்
வான் முகட்டை
முத்தமிடுவதையும்
இந்தக் கடலலைகள்
ஒன்றோடொன்று
பின்னிப் பிணைவதையும்.
மன்னிக்கப் படுவதேயில்லை
எந்தப் பூவும்
சகப் பூவை
வெறுக்கும் பட்சத்தில்.
பூமியை
இறுகப் பற்றுகிறது
ஞாயிற்றின் ஒளி வீச்சு.
கடலை
முத்தமிடுகிறது
சந்திரனின்
கிரணக் கற்றை.
இனிய இந்த
வேலைகளுக்கெல்லாம்
என்ன மதிப்பு,
என்னை
நீ
முத்தமிடாவிட்டால்?

ஆங்கில மூலம்:ஷெல்லி
தமிழில் பெயர்ப்பு:ஜகன்

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

புத்தகங்கள்

மனிதர்களை இணைக்கக்கூடிய வலிமையான பாலங்கள் புத்தகங்கள் .
உலகில் நிகழ்ந்த போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும்
தூண்டுகோல்களாக இருந்தவை புத்தகங்களே.
சமூகத்தை தலைகீழாகப் புரட்டியெடுக்கும் ஆற்றல் வாய்ந்த
நெம்புகோல்கள் புத்தகங்கள்.
புத்தகங்கள் வாழ்க்கையில் மாற்றங்களையும் திருப்புமுனைகளையும்
கொண்டுவருகின்றன.
புத்தகங்கள் நம்முடைய நிரந்தர நண்பர்கள்.
படைத்தவர்களையும் படிப்பவர்களையும் ஒருங்கிணைக்கின்றன புத்தகங்கள்.
அருவி நீரைக்கொட்டுவதைப்போல புத்தகங்கள் அறிவைக்கொட்டுகின்றன.
பல புத்தகங்களை வாசிக்கிறோம்; சில புத்தகங்களில் மட்டுமே வசிக்கிறோம்.
புத்தகங்களை நேசிப்பவனால் மட்டுமே மனித குலத்தை
நேசிக்கமுடியும்.
படிப்பது மட்டும் போதாது; படித்தபடி நடப்பது முக்கியம்.
படிப்பதற்குக் கேட்டால் மகிழ்ச்சியோடு புத்தகங்களைக் கொடுங்கள்.
நீங்கள் நேசிப்பவர்களுக்கு புத்தகங்களைப் பரிசாக வழங்குங்கள்.
உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்கிக்கொடுங்கள்.
வீட்டில் ஒரு நூலக அறை அமையும் பொழுது, வீடு
கூடுதல் அழகு பெறுகிறது.
ஒரு குழந்தையிடம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால்,
மனிதகுலத்தை நேசிக்கும் ஒரு மனிதன் உருவாவது திண்ணம்.
படைப்பாளிகளே! குழந்தைகளுக்காக நிறையப் புத்தகங்களை எழுதுங்கள்.
உங்கள் வருங்காலச் சந்ததிக்கு மண்ணும் பொன்னும் சேர்த்துவிட்டுச் செல்லும் பொழுது,
கொஞ்சம் புத்தகங்களையும் விட்டுச் செல்லலாமே!

புதன், 2 செப்டம்பர், 2009

பூக்களைப் பறிக்காதீர்

பூ என்றால்
உங்களில்
பல பேர்க்கு
அழகும்
மணமும் தான்
ஞாபகத்தில்
தெறிக்கும்
தலையில் சூடி
அழகூட்ட
அறிவீர்கள்
பூக்களைக்
காய்ச்சிக்
கஷாயமும்
அத்தரும்
சென்ட்டும்
தயாரிப்பீர்.
உங்களைப்
பொறுத்தமட்டில்
பூ என்பது
உங்களுக்காகவே
படைக்கப்பட்ட
நுகர்பொருள்!
ஆனால்
யாராவது
ஒரு கணமேனும்
இந்தப் பூக்களைப்
பூப்பதற்கு
தாவரம் புரிந்த
தவம் பற்றி
யோசித்ததுண்டா?
தன்னின்
உறுதியான
வேர்களைச் செலுத்தி
நெடும்
பாறைகளையும்
கடும்
மண்ணடுக்குகளையும்
பிளந்து சென்று
தண்ணீர்
கொண்டு வர
தாவரம் செய்த
பகீரதப்
பிரயத்தனம் பற்றி
சிந்தித்ததுண்டா?
மரங்களில்
பூக்களை
ரசிக்கும்
நீங்கள்
பூக்களில் உள்ள
மரங்களை
நினைப்பதுண்டா?