புதன், 31 அக்டோபர், 2012

அன்பு வெல்லும்

ஏழைக்கு
என்றென்றும்
நேசம் காட்டு.
எதிரிக்கும்
நட்புடனே
கரத்தை நீட்டு..
எவ்வுயிரும்
இன்பமுற
அன்பை மீட்டு.
'என்றுமே
அன்பு வெல்லும்'
எனும் தமிழ்பாட்டு.
வார்த்தைகளால்
யாரையுமே
 பழிக்காதே.
வசவுகளால்
இதயங்களைக்
 கிழிக்காதே.
நல்லுறவை
வன்முறையால்
 இழக்காதே.
நட்புணர்வை
இழிமொழியால்
 துளைக்காதே.
அன்பாலே
எல்லாமும் முடியும்.
ஆனந்தம்
வாழ்க்கையிலே விடியும்.
ஒரு கோடி
துயரங்கள் வடியும்.
ஓயாத
நோயெல்லாம் மடியும்.


செவ்வாய், 16 அக்டோபர், 2012

தேர்தல்

நல்லவர்கள்
வரிசையாக நின்றார்கள்
வாக்குச்சாவடிகளில்.....
நல்லவர்கள்
அல்லாதவர்களைத்
தெரிவு செய்வதற்காக.

மழை

விழவேண்டிய நேரத்தில்
விழவேண்டிய இடத்தில்
விழாமல் பொய்த்ததால்
விழுந்து போனது
விவசாயம்.

புதன், 3 அக்டோபர், 2012

தமிழும் நானும்

அன்னைத் தமிழே,
உன்னை நினைத்தால்
ஆனந்தம் பாய்கிறது.
கன்னித் தமிழே,
உன்னைப் படித்தால்
கன்னலும் தோற்கிறது.
என்னில் நுழைந்து
இதயம் நிரம்பி
பொங்கி வழிகிறாய்.
நின்னை வணங்கி
நெஞ்சில் இருத்தி
பொன்னாய்ப் போற்றிடுவேன்!

உயிராய் எம்முள் நிறைந்தவளே,
உணர்வாய் குருதியில் கரைந்தவளே,
பயிராய் எம் வயல் படர்ந்தவளே,
பாகாய் மனதில் இனிப்பவளே,
கயிறாய் தமிழரை இணைப்பவளே,
கானகத் தேனாய் சுவைப்பவளே,
துயரை இசையால் துடைப்பவளே,
தொழுது உன்னைப் போற்றிடுவேன்!


இரத்தம்...புத்தம்...கச்சாமி!

ஒரே புத்தன்
இந்தியாவில் ஒரு மாதிரி...
இலங்கையில் வேறு மாதிரி...
இந்திய புத்தன்
யுத்த வெறி பிடித்த
அசோக மன்னனை
சாந்த சொரூபியாய்
மாற்றம் செய்தான்.
இலங்கைக்குப் போன
இறக்குமதி புத்தனோ
இரக்கமில்லா ராஜபக்சேயை
ரத்தம் குடிக்கும் அரக்கனாக்கி
அகம் மகிழ்கின்றான்.
ஒரே புத்தன்
இருவேறு நாடுகளில்
வெவ்வேறு மாதிரி!