திங்கள், 24 டிசம்பர், 2012

என்ன கிழித்தோம்?

என்ன கிழித்தோம் பெரிதாக?
எதற்கு வீணாய் ஆர்ப்பாட்டம்?
             மரங்களை வெட்டி மழையைத் தடுத்தோம்
             மக்களைச் சுரண்டி பைகளை நிறைத்தோம்
             கல்வியின் பெயரால் வணிகம் செய்தோம்
              கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்தோம்
என்ன கிழித்தோம் பெரிதாக?
எதற்கு வீணாய்  ஆர்ப்பாட்டம்?
               இயற்கையை அழித்து இல்லம் சமைத்தோம்
               இல்லாதவரின் எண்ணிக்கை பெருக்கினோம்
                வீதிகள் எங்கும் குழிகளைத் தோண்டி
                விதவிதமாகக் கொடிகள் நட்டோம்
என்ன கிழித்தோம் பெரிதாக?
எதற்கு வீணாய் ஆர்ப்பாட்டம்/?
                 ஆங்கிலச் சொற்களை அதிகம் கலந்து
                  அன்னைத் தமிழின் அழகைக் குலைத்தோம்
                  அயல் மொழிப் பள்ளிக்கு ஆரத்தி எடுத்து
                   தாய்மொழிப் பள்ளிக்கு தாழ்ப்பாள் போட்டோம்
என்ன கிழித்தோம் பெரிதாக?
எதற்கு வீணாய் ஆர்ப்பாட்டம்?
                   இயற்கையை விட்டு எங்கோ சென்றோம்
                   இதயம் தன்னை வெறுப்பால் நிறைத்தோம்
                    சாதியின் பெயரால் ரத்தம் சிந்தினோம்
                    மதம் பிடித்ததால் மக்களைப் பிரித்தோம்
என்ன கிழித்தோம் பெரிதாக?
எதற்கு வீணாய் ஆர்ப்பாட்டம்?
                     மூத்தோர் சொல்லை ஏற்க மறுத்தோம்
                         
                     முதியோர் இல்லம் பெருகச் செய்தோம்
                      அன்பை இழந்து அன்னியரானோம்
                      அறிவை எதற்கோ அடகு வைத்தோம்
என்ன கிழித்தோம் பெரிதாக?
எதற்கு வீணாய் ஆர்ப்பாட்டம் ?
                         
                                                                                 


























சனி, 22 டிசம்பர், 2012

கனவுகள்

கனவுகளைக்
கெட்டியாகப் பற்றிக் கொள்ளுங்கள்
ஏனெனில்
கனவுகள் மரணித்தால்
வாழ்க்கை
இறக்கை    ஒடிந்த
பறக்கவியலா
பறவை.
கனவுகளைக்
கெட்டியாகப் பற்றிக் கொள்ளுங்கள்.
கனவுகள் போய்விட்டால்
வாழ்க்கை
உறைந்த பனிமூடிய
தரிசு நிலம்.
                  -------லேங்க்ஸ்டன் ஹியுக்ஸ்    

புதன், 31 அக்டோபர், 2012

அன்பு வெல்லும்

ஏழைக்கு
என்றென்றும்
நேசம் காட்டு.
எதிரிக்கும்
நட்புடனே
கரத்தை நீட்டு..
எவ்வுயிரும்
இன்பமுற
அன்பை மீட்டு.
'என்றுமே
அன்பு வெல்லும்'
எனும் தமிழ்பாட்டு.
வார்த்தைகளால்
யாரையுமே
 பழிக்காதே.
வசவுகளால்
இதயங்களைக்
 கிழிக்காதே.
நல்லுறவை
வன்முறையால்
 இழக்காதே.
நட்புணர்வை
இழிமொழியால்
 துளைக்காதே.
அன்பாலே
எல்லாமும் முடியும்.
ஆனந்தம்
வாழ்க்கையிலே விடியும்.
ஒரு கோடி
துயரங்கள் வடியும்.
ஓயாத
நோயெல்லாம் மடியும்.


செவ்வாய், 16 அக்டோபர், 2012

தேர்தல்

நல்லவர்கள்
வரிசையாக நின்றார்கள்
வாக்குச்சாவடிகளில்.....
நல்லவர்கள்
அல்லாதவர்களைத்
தெரிவு செய்வதற்காக.

மழை

விழவேண்டிய நேரத்தில்
விழவேண்டிய இடத்தில்
விழாமல் பொய்த்ததால்
விழுந்து போனது
விவசாயம்.

புதன், 3 அக்டோபர், 2012

தமிழும் நானும்

அன்னைத் தமிழே,
உன்னை நினைத்தால்
ஆனந்தம் பாய்கிறது.
கன்னித் தமிழே,
உன்னைப் படித்தால்
கன்னலும் தோற்கிறது.
என்னில் நுழைந்து
இதயம் நிரம்பி
பொங்கி வழிகிறாய்.
நின்னை வணங்கி
நெஞ்சில் இருத்தி
பொன்னாய்ப் போற்றிடுவேன்!

உயிராய் எம்முள் நிறைந்தவளே,
உணர்வாய் குருதியில் கரைந்தவளே,
பயிராய் எம் வயல் படர்ந்தவளே,
பாகாய் மனதில் இனிப்பவளே,
கயிறாய் தமிழரை இணைப்பவளே,
கானகத் தேனாய் சுவைப்பவளே,
துயரை இசையால் துடைப்பவளே,
தொழுது உன்னைப் போற்றிடுவேன்!


இரத்தம்...புத்தம்...கச்சாமி!

ஒரே புத்தன்
இந்தியாவில் ஒரு மாதிரி...
இலங்கையில் வேறு மாதிரி...
இந்திய புத்தன்
யுத்த வெறி பிடித்த
அசோக மன்னனை
சாந்த சொரூபியாய்
மாற்றம் செய்தான்.
இலங்கைக்குப் போன
இறக்குமதி புத்தனோ
இரக்கமில்லா ராஜபக்சேயை
ரத்தம் குடிக்கும் அரக்கனாக்கி
அகம் மகிழ்கின்றான்.
ஒரே புத்தன்
இருவேறு நாடுகளில்
வெவ்வேறு மாதிரி!

வியாழன், 27 செப்டம்பர், 2012

கனவுகள்

அழுகின்ற குழந்தைக்கு
ஆழாக்குப் பால் வாங்கணும்...
ஒழுகும் குடிசைக்கு
ஓலை வாங்கி மேயணும் ....
மெழுகுவர்த்தியில் படிக்கும்
சின்னப் பையனுக்கு
மின்விளக்கு பொருத்தணும்...
அழகான மனைவிக்கு
வரும் பொங்கலுக்காவது
கம்மல் வாங்கித் தரணும்...
இருக்கின்ற மவராசனுக்கு
இவை எல்லாம்
கடுகுச்சோடு விசயங்க தான்.
இல்லாத சம்சாரிக்கோ
மொடாச்சோடு கனவுகள்.

அது வரைக்கும்

தேளாய்க் கொட்டுகிறது வறுமை.
தீயாய் எரிக்கிறது பசி.
சாண் ஏற முழம் சறுக்கும் வாழ்க்கை.
'விழுவது எழுவதற்கே'
கேட்பதற்கு
கவர்ச்சியாகவே இருக்கிறது
உபதேசம்.
எழும் வரைக்கும்
உயிர்த்திருக்க என்ன வழி?

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

பாடம்

பகையும் உறவும் பருவங்கள் போல
தேயும்;வளரும் வானத்து நிலவாய்.
கசப்பு என்பது இனிப்பின் மரணம்.
வெறுப்பின் முடிவில் அன்பின் உதயம்.
பொறுமையின் உச்சம் பூமியின் நடுக்கம்.
காற்றின் சினத்தில் கடும்புயல் சீறும்.
கடலின் கொதிப்பில் வெள்ளம் பாயும்.
கதிரவன் சீறின் குளிர்நீர் கொதிக்கும்.
ஏழைகள் எழுந்தால் புரட்சிகள் வெடிக்கும்;
ஆளும் வர்க்கம் அடியோடு  ஒழியும்.
சரித்திரம் சொல்லும் பாடம் இது தான்.
தெரிந்து நடந்தால் வாழ்க்கை பிழைக்கும்.

வாழ்க்கையின் ரகசியம்

கொஞ்சம் சிரிப்பு
கொஞ்சம் அழுகை
அது தான் வாழ்க்கையடா!
இன்பம் சிலநாள்
துன்பம் சிலநாள்
அதன் பேர் இயற்கையடா!
இனிப்பே தின்றால்
திகட்டிப் போகும்
கசப்பும் வேண்டுமடா!
நிழலின் அருமை
வெயிலில் தெரியும்
பெரியோர் மொழிந்ததடா!
வாழும் வரைக்கும்
மனிதரை நேசி
வாழ்க்கை இனிக்குமடா!
இருப்பதைப் பலர்க்கும்
பகிர்ந்து கொடுத்தால்
இன்பம் கிடைக்குமடா!



வியாழன், 20 செப்டம்பர், 2012

ஒளியிழந்த கண்ணினாய்.

           இருட்டு..இருட்டு...எங்கும் இருட்டு,
           நடுப்பகலின் கூச வைக்கும் ஒளியில் கூட.
           மீளவியலா இருள்;முழுக் கிரகணம்.
           பகலின் நம்பிக்கை துளியுமின்றி.
            [ஹெலன் ஹெல்லருக்குப் பிடித்த ஹோமரின் வரிகள்] 

சிறிது பெரிதாய்.....


                இங்கு
                 இந்தக் கணத்தில்
                 நிகழும்
                 சின்னஞ்சிறிய
                 வண்ணத்துப்பூச்சியின்
                 சிறகசைப்பு
                  நாளை அல்லது
                  பிறிதொரு நாள்
                  வேறொரு இடத்தில்
                   மிகப் பெரிய
                   சூறாவளியைக்
                   கிளப்பக்கூடும்.
                                      ------யாரோ 

புதன், 19 செப்டம்பர், 2012

வெண்பாக்கள்

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகள்,எழுபதுகளில் இலக்கிய இதழ்களில் வெண்பாப் போட்டிகள் நடைபெற்றன.குறிப்பாக கண்ணதாசனின் தென்றல் இதழில் வெளிவந்த வெண்பாக்கள் தரம் வாய்ந்தவை.தமிழக அரசின் தமிழரசு மாத இதழில் வரும் வெண்பாப் போட்டியில் நானும் என் நண்பர் சண்முகசுந்தரம் அவர்களும் கலந்து கொள்வது உண்டு.ஒன்றிரண்டு தடவை எங்கள் பாக்கள் வெளியிடப்பட்டு,நாங்கள் பரவசப்பட்டதுண்டு.
                         ஒரு தடவை கனிச்சோலை என்ற இதழில் வெண்பாப் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.'மன்னிப்பே இல்லை உனக்கு' என்ற ஈற்றடிக்கு வெண்பா எழுத வேண்டும்.வழக்கம்போல்நானும் நண்பரும் எழுதி அனுப்பினோம்.அடுத்த இதழில் பத்து வெண்பாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நடுப்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தன.நண்பரின் வெண்பா வெளியிடப்பட்டிருந்தது.ஆனால் என் வெண்பாவைக் காணோம்.சிறிது ஏமாற்றமாக இருந்தது.மெல்ல புத்தகத்தைப் புரட்டினேன்.என்ன ஆச்சரியம்!நடுப்  பக்கத்தில் என் வெண்பா முத்திரைக் கவிதையாக ஒரு இலக்கிய அணிந்துரையுடன் இடம் பெற்றிருந்தது.
                          பல ஆண்டுகளுக்கு முந்தைய 'தமிழரசு' இதழ் ஒன்றை ஞாபகார்த்தமாக பாதுகாத்து வருகின்றேன்.சில நாட்களுக்கு முன்னால் அதில் இருந்த வெண்பாக்களை பார்வையிட்டேன்.அந்த வெண்பாக்களில் ஒன்று இன்று கவிப்பேரரசர் என்று உலகெங்கும் அறியப்படும் அன்றைய வைரமுத்து அவர்களால் எழுதப்பட்டிருந்தது.மகிழ்ச்சியாக இருந்தது.
                           நான் எழுதிய மூன்று வெண்பாக்கள் பின்வருமாறு:

                  பதியில்லை;கைம்பெண்நான்;பாழும் உலகில்
                  விதியென்று நானிருந்தேன்; ஆனால் --சதிநிலவே
                   இன்னுமெனை நீவேறு வாட்டிநின்றால்,உண்மையாய்
                   மன்னிப்பே யில்லை யுனக்கு.
                                                               [கனிச்சோலை---ஜூலை 1970]
                    பொட்டில்லை;பூச்சூடச் சுற்றத்தார் ஒப்பவில்லை;
                     கட்டினேன் காரிகைக்குப் பொற்றாலி -சுட்டெடுத்த
                     ஆணிப்பொன் பூமுகத்தில் ஆனந்தப் புன்முறுவல்
                      காணக் குளிர்ந்ததே கண்.
                                                                [தமிழரசு ....நவம்பர் 1970]
                       எல்லா நலத்துடனும் ஏற்றம் பலவுற்று
                        வல்லார் மிகச்சிலரே வாழ்கின்றார் - பல்லோர்
                        தலைக்கெண்நெய் இல்லாது தாழ்கின்றார்;இந்த
                        நிலையை ஒழிக்க நினை.
                                                                 [தமிழரசு 16.08.1971]

                

திங்கள், 17 செப்டம்பர், 2012

சாதனை நாயகர் பெரியார்

இன்று செப்டம்பர் 17.மனிதர்களுக்கு முகவரி தந்த மாமேதை தந்தை பெரியார் பிறந்த நாள்.மதமும் சாதியும் மனிதர்களை அவமதித்தபொழுது அதற்கு எதிராக எரிமலையாய்க் கிளர்ந்து  எழுந்தவர் பெரியார்.கல்லூரியில் படித்துப் பட்டம் பெறாவிட்டாலும் ஒரு சமூகப் போராளியாய் அவர் புரிந்த சாதனைகள் இன்று பல பேராசிரியர்களின் ஆராய்ச்சிப் பட்ட மேற்படிப்புக்கு பாடப் பொருளாகத் திகழ்கின்றன.மூச்சடங்குகிற வரையிலும் தமிழ் மண்ணெங்கும் சூறாவளியாய் சுற்றி தன்மான முழக்கம் செய்த தந்தை பெரியாரை நினைவுகூர என்றோ எழுதிய ஒரு கவிதையை வாசகர்களுக்கு முன்னர் வைக்கிறேன்.கவிதை பின்வருமாறு:

               அறியாமைக் கருக்கிருட்டில் அமிழ்ந்திருந்த தமிழர்களை
                    அறிவென்னும் வெளிச்சத்தால் விடுவித்த ஆதவன் நீ!
                வறியாராய்க் கடுந்துயரில் வதையுண்ட ஏழையரை
                      வாழவைக்க இங்குதித்த வண்ணத்தமிழ் மன்னன் நீ!
                  பறிபோன பழந்தமிழர் பண்பாட்டு மேன்மைதனை
                       பக்குவமாய் மீட்கவந்த பைந்தமிழர் தோழன் நீ!
                  சரியாத தமிழ்மொழியை சாகின்ற கணம்வரைக்கும்
                         சலிக்காமல் ஒலித்திட்ட சாதனையின் நாயகன் நீ!

                    சாதியென்ற சவக்குழிக்குள் சரிந்திட்ட மக்கள்தமை
                         சரிசெய்து எழவைத்து சரித்திரத்தில் இடம்பெற்றாய்!
                     நாதியில்லா நடைப்பிணமாய் நலிவுற்ற பாமரர்க்கு
                          நல்லவழி காட்டுதற்கு நாளெல்லாம் பாடுபட்டாய்!
                      ஆதிமகன் வள்ளுவனின் 'பிறப்பொக்கும் உயிர்க்' கென்ற
                           அழியாத வேதத்தை எல்லோர்க்கும் போதித்தாய்!
                       'நீதிஎலாம் பொது'வென்ற நிறைமொழியின் சத்தியத்தை
                            நின்றொளிரும் தத்துவமாய் இங்கெமக்கு நீ தந்தாய்!
                                                   [தினகரன் 17.09.2003]
                     
                     

காஞ்சி வேந்தே!வாழி!வாழி!

செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்.அவர் தலை சிறந்த பேச்சாளர்;ஈடு இணையற்ற எழுத்தாளர்.தமிழ்,ஆங்கிலம் இரண்டிலும் முத்திரை பதித்தவர்.இறுதி வரை படித்துக் கொண்டே இருந்தவர். .பத்திரிக்கையாளர்.நாடக நடிகர்.அரசியலாளர்.பன்முகம் கொண்ட அந்த மனிதாபிமானி இன்று நம்மிடையே இல்லை.எனக்குள் தமிழின் பால் சாகாத காதலை தோற்றுவித்த அந்த மாமனிதனை நினைவுகூர என்றோநான் எழுதிய ஒரு கவிதையை இங்கு சமர்ப்பிக்கிறேன்.கவிதை பின்வருமாறு:

                நூலென்றால் தமிழர்க்குக் குறளாம்;அமுத
                     மொழியென்றால் உயர்தமிழே முன்னே நிற்கும்!
                 பாலென்றால் பசும்பாலே சிறப் புடைத்து!
                      பழமென்றால் இனிக்கின்ற மாவீன் கனியே!
                  ஆறென்றால் காவிரிதான் பாய்ந்து வரும்!
                       அன்பென்றால் அண்ணாவின் அன்பே அன்பு!
                   ஊரென்றால் காஞ்சியைத்தான் ஒப்புக் கொள்வோம்!
                        உறவென்றால் அண்ணாதான் உயர்ந்து நிற்பார்!

                 ஏர்பிடித்து உழுகின்ற உழவர் மக்கள்,
                        ஏற்றமிகு தொழிலாளர்,புலமை மிக்கார்,
                   பார்வியக்கும் தமிழகத்து இளைஞர் கூட்டம்,
                         பைந்தமிழின் நல்லழகுப் பெண்டி ரெல்லாம்
                   கார்ஒக்கும் கலைவல்லார் காஞ்சி வேந்தை
                          கவின்தமிழாள் பெற்றெடுத்த ஆணிப் பொன்னை
                    ஆர்க்கின்ற அன்புடனே வாழ்த்து கின்றார்!
                          அறிஞர்புகழ் தொல்லுலகில் வாழி!வாழி!
                                                         [மாலைமுரசு 15.09.1970]

                  

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

தலைவர்

அவர்தான் எல்லாமென்று
எல்லோரும் சொல்கிறார்கள்.
அவர் நன்கறிவார்
அவரில்லை என்பதை.
ஆனாலும் விடுவதாயில்லை
சுற்றிலுமிருப்பவர்கள்.
எப்பொழுதும் போல
இம்முறையும்
ஏற்றிவிட்டார்கள்
பலிபீடத்தில்.
.

இயற்கை

யாருக்குத்
தெரியப் போகிறது
என்ற தைரியத்தில்
நாம் செய்யும் காரியங்கள்
யாருக்கோ
தெரிந்துவிடுகிறது.

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

ஆப்ரிக்காவின் வேண்டுகோள்

நீயல்ல நான்...
ஆனாலும் நீ
எனக்கொரு சந்தர்ப்பம்
தர மறுக்கிறாய்;
நான் நானாக இருக்க
விடமாட்டேன் என்கிறாய்.
"நான் நீயாக இருந்தால்...."என
பிலாக்கணம் பாடுகிறாய்.
நான் நீயல்ல என்பது
உனக்குத் தெரிந்திருந்தும்
என்னை நானாக இருக்க விடாது
அடம் பிடிக்கிறாய்.
நீதான் நான் என்றும்
என் செயல்கள் நினதென்றும் கருதி
அவற்றில் குறுக்கிடுகிறாய்;
உள்ளே நுழைகிறாய்.
நியாயமில்லாமல்
அறிவில்லாமல்
முட்டாள்தனமாக
நான் நீயாக முடியுமென்றும்
உன்னைப் போல
பேச,சிந்திக்க,செயல்பட
என்னால் முடியுமென்றும்
நீ எண்ணுகிறாய்!
எல்லாம் தெரிந்த இறைவன்
என்னை நானாகவும்
உன்னை நீயாகவும்
தெளிந்து படைத்துள்ளார்!
அந்த இறைக்காகவேனும்,
என்னை நானாய் இருக்க
அனுமதி நண்பா!
                         ---ரோலண்ட் டாம்பெகெய் டெம்ப்ஸ்டர்




வியாழன், 13 செப்டம்பர், 2012

எங்கே வானவில் முடிகிறதோ.....

எங்கே வானவில் முடிகிறதோ அங்கே,
ஒரு இடம் அமையப்போகிறது,சகோதரனே!
அங்கே உலகம் எல்லாவிதப் பாடல்களையும் பாடப்போகிறது.
அங்கே நாம் சேர்ந்து பாடப்போகிறோம்,சகோதரனே!
நானும் நீயுமாகச் சேர்ந்து--
நீ வெள்ளையன் ...நான் அவ்வாறு இல்லாவிடினும் கூட.
அது ஒரு சோகமான பாடலாக இருக்கும்,என் சகோதரனே!
ஏனெனில் அதன் மெட்டு நாம் அறியோம்.
கற்பதற்கு கடினமான மெட்டு அது.
ஆனாலும் என் சகோதரனே,
நீயும் நானுமாகச் சேர்ந்து
நாம் கற்றுக் கொள்ளமுடியும் அதனை.
கருப்பு மெட்டு என்று ஒன்று எங்கும் இல்லை.
வெள்ளை மெட்டு என்பதும் இல்லவே இல்லை.
இசை மட்டுமே இருக்கிறது,சகோதரனே.இசை மட்டுமே.
ஆம்,நாம் இசையை மட்டுமே பாடப் போகிறோம்-
வானவில் எங்கு முடிகிறதோ,அங்கே.
                                              ---ரிச்சார்டு ரைவ்(தென்னாப்பிரிக்கக் கவிஞர்)

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

நன்றாகக் கற்றுக் கொடுங்கள்

எல்லோரும் கடிதம் எழுதுகிறார்கள்.அவற்றில் பல படித்து முடித்ததும் கிழித்து வீசப்படுகின்றன.ஆனால்,சில கடிதங்கள் என்றும் சாகாத இலக்கியங்களாக சரித்திரத்தில் பதிவு செய்யப்படுகின்றன.அப்படிப்பட்ட ஒரு கடிதத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்து வாசகர்களுக்குத் தருவதில் மகிழ்வுறுகிறேன்.அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய அற்புதக் கடிதம் அது.ஆசிரியர்கள் அனைவரும் படித்துப்  பின்பற்ற வேண்டிய கற்பித்தல் தத்துவம்.

"எல்லா மனிதர்களும் நியாயவான்கள் அல்ல;எல்லா மனிதர்களும் வாய்மையாளர்கள் அல்ல என்பதை அவன் கற்றுக் கொள்ளட்டும் .

சுயநலமே உருவான ஒரு அரசியல்வாதிக்குக் கூட அர்ப்பணிப்பு உணர்வுள்ள தலைவன் இருக்கக் கூடும் என்பதையும் ஒரு கயவனுக்குக் கூட கதாநாயகன் இருக்கக் கூடும் என்பதையும்,அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

ஒவ்வொரு பகைவனுக்கும் ஒரு நண்பன்  இருக்கிறான் என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

தானாகக் கிடைக்கும் ஐந்து டாலர்களைக் காட்டிலும் உழைத்துப் பெறப்படும் ஒரு டாலர் அதிக மதிப்புள்ளது என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

இழப்பதற்கு அவன் கற்றுக் கொள்ளட்டும்.அதே  சமயத்தில் வெற்றிகொள்வதில் உள்ள மகிழ்ச்சியை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளட்டும்.

பொறாமைத் தீயிலிருந்து அவனை நெடுந்தொலைவு தள்ளிச் செல்லுங்கள்.அமைதியான சிரிப்பு என்னும் ரகசியத்தை அவனுக்குப் புகட்டுங்கள்.

அடக்கியாள்பவன் வெகு சுலபமாக அடிமையாகி விடுவான் என்பதை அவனுக்குத் தொடக்கத்திலேயே கற்றுக் கொடுங்கள்

புத்தகங்களின் அற்புதத்தை அவனுக்குக் காட்டுங்கள்.அதே சமயத்தில்,வானில் பறக்கும் பறவைகள்,சூரிய ஒளியில் நனையும் தேன் ஈ க்கள்,மலையோரத்துப் பூக்கள் ஆகியன பற்றிய முடிவற்ற ரகசியங்களைச் சிந்திப்பதற்கு நேரத்தை ஒதுக்குங்கள்.

ஏமாற்றிப் பிழைத்தலை விட தோல்வியுறுதல் பெருமைக்கு உரியது என்பதைப் பள்ளியில் அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

தன்னுடைய கருத்துக்களில் முழு நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள் ----எல்லோரும் ஒட்டு மொத்தமாக அவை தவறு எனக் குற்றம் சாட்டினாலும் கூட

ஒரு பெரும் கூட்டத்தை கண்மூடித்தனமாகப் பின்பற்றிச் செல்லாதிருப் பதற்கான வல்லமையை அவனுள் ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள்.

எவர் சொல்வதையும் செவிமடுக்கக் கற்றுக்  கொடுங்கள்..ஆனால்கேட்டவற்றை உண்மை எனும் திரையில் வடித்தெடுக்கவும் கூடவே கற்றுக் கொடுங்கள்

துயரமான பொழுதுகளில்  சிரிப்பதற்கு அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.கண்ணீர் வடிப்பதில் அவமானம் ஏதுமில்லை என்பதையும் தெரியப்படுத்துங்கள்.

எதிலும் எப்பொழுதும் குறை காண்பவர்களைப் பரிகசித்து ஒதுக்கவும் அளவுக்கு மீறி இனிப்பாகப் பேசுவோரிடம் எச்சரிக்கையாக இருக்கவும் கற்றுக் கொடுங்கள்.

அதிக விலை நிர்ணயிப்போருக்கே உடல் வலிமையையும் மூளையையும் விற்க வேண்டும் என அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள்.அதே சமயத்தில் அவனுடைய இதயத்திற்கும் ஆத்மாவிற்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்துங்கள்.

வெறுமனே ஊளையிடும் கூட்டத்தின் முன் காதுகளை இறுக மூடிக் கொள்ளவும் சரியான ஒன்றுக்காக துணிவோடு போராடவும் அவனுக்கு வழிகாட்டுங்கள்.

மென்மையாகச் சொல்லிக் கொடுங்கள்.அதற்காக அவனை ஆரத் தழுவிக் கொஞ்ச வேண்டும் என்பது அவசியமில்லை.ஏனென்றால் நெருப்புச் சோதனையில் தான் அருமையான இரும்பு உருவாக முடியும்.

விரைந்து செயல்படுவதற்கான துணிவை அவன் பெறட்டும்.அதே சமயத்தில் துணிவாக இருப்பதற்கான பொறுமையையும் சேர்த்தே அவன் பெறட்டும்.

எப்பொழுதும் தன் மீது உயர்ந்த நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்---அப்பொழுது தான் அவனால் மானுடத்தின் மேல் அபார நம்பிக்கை வைக்க முடியும்.
.
.

 .

.

   

சனி, 28 ஜூலை, 2012

மலரட்டும் சமத்துவம்

மனிதனை மனிதன் நேசிக்கும்
மகத்துவம் மண்ணில் நிகழட்டும்.
புனிதன் காந்தி வழியினிலே
புதிய உலகம் அமையட்டும்.
இனிமை எங்கும் நிலவட்டும் .
இன்னாச் செயல்கள் ஒழியட்டும்.
கனியாய் வாழ்க்கை எல்லோர்க்கும்
காலம் முழுதும் இனிக்கட்டும்.


பெரியவர் சிறியவர் பேதமில்லை.
பிறவியில் அனைவரும் சரிசமமே.
அரியும் சிவனும் நமக்கொன்றே.
அல்லா ஏசு அது போன்றே.
மரியும் மாரியும் இரண்டல்ல.
மனிதர் தனித்தனி கூறல்ல.
சரிநிகர் சமமாய் வாழ்ந்திடுவோம்
சமத்துவம் எங்கும் மலர்ந்திடவே!

ஆறாம் அறிவைப் பெற்றிருந்தும்
அறிவிலி யாய்சிலர் வாழ்கின்றார்.
தேராச் செயல்கள் புரிகின்றார்.
தேய்ந்து வாழ்வில் உழல்கின்றார்.
மாறா எவர்க்கும் வெற்றியில்லை.
மருந்துக்குக் கூட வளர்ச்சியில்லை.
கூராய் அறிவைத் துணைகொண்டே
குறியாய்ப் பாரில் உயர்ந்திடுவோம்.

எத்தனை செல்வம் குவித்தாலும்
என்றும் பணிவு நன்றாகும்.
நித்திரை நீங்கி செயல்பட்டால்
நிம்மதி நாட்டில் பூப்பூக்கும்.
இத்தரை முழுதும் இனிதாகும்;
இன்மை என்பது அரிதாகும்.
பத்தரை மாற்றுப் பொன்னாக
பாரினில் தேசம் ஒளிர்ந்திடுமே!

கடந்தது போகட்டும் விட்டுவிடு.
கண்ணீர் வடித்து என்னபயன்?
நடப்பது நன்றாய் அமையட்டும்.
நாசங்கள் அடியோடு  ஒழியட்டும்.
அடக்கமா யிருப்பதில் தவறில்லை.
அடிமையா யிருப்பதே அவமானம் .
ஒடித்திடு தடைகளைக் காலத்தே.
உயர்ந்திடு உலகில் எப்போதும்!
 


திங்கள், 23 ஜூலை, 2012

திண்டாட்டம்

மழை வேண்டி
தவங் கிடக்கும்
உழவன்.
வேண்டாமென்று
இறைஞ்சும்
குயவன்.
இருவருக்கும்
இடையிலே
செய்வதறியாமல்
இறைவன்!

சனி, 21 ஜூலை, 2012

எரிச்சல்

'பாத்து நட'
தடுக்கி விழப் போன
என்னை
எச்சரித்தார் தாத்தா;
எரிச்சலாக வந்தது.

'பாத்து செலவு செய்யக்கூடாதா/?'
பிளாக்கில்
பத்து ரூபாய் டிக்கெட்டுக்கு
முப்பது கொடுத்து
சினிமா பார்த்ததற்கு
அறிவுரை கூறினார் அப்பா;
எரிச்சலாக வந்தது.

'பாத்துப் போ மகனே'
அசுர வேகத்தில்
பைக்கைக் கிளப்பியபொழுது
பதறினாள் அம்மா;
எரிச்சலாக வந்தது.

இன்று
இதையே நாங்கள்
எங்கள் மகனிடம்
சொல்லும்பொழுது
எரிச்சலாய் வருகிறது
அவனுக்கும்.  

உள்ளுக்குள்ளே

செதுக்காத வரைக்கும்
கல்லுக்குள்
சிலையிருப்பது தெரியாது.

பிழியாத வரைக்கும்
கரும்புக்குள்
சாறிருப்பது தெரியாது.

கடையாத வரைக்கும்
தயிருக்குள்
நெய்யிருப்பது தெரியாது.

எரியாத வரைக்கும்
மெழுகுக்குள்
ஒளியிருப்பது தெரியாது.

செயல்படாத வரைக்கும்
உனக்குள்
ஆற்றலிருப்பது தெரியாது.

வெள்ளி, 20 ஜூலை, 2012

கோபம் ....கோபம்.....கோபம்

கோபங்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் விதவிதம்.

கண்ணகியின் கோபம்
மதுரையை எரித்தது ;
கூடலனை கூடாக்கியது.
துரோபதையின் கோபம்
குருசேத்திரம் நிகழ்த்தியது.
சிவனின் ரௌத்திரம்
திரிபுரம் எரித்தது;
தக்கனின் யாகத்தை
தவிடு பொடியாக்கியது.

சிலரது கோபம்
வெற்று வெடி போல.
ஏழையின் கோபம்
சபிப்பதோடு முடிவுறும்.

சிலர் கோபத்திலும்
அழகாக இருப்பார்கள்.

மீசை துடிப்பது
ஒரு வகைக் கோபம்.
கண்கள் சிவப்பது
பிறிதொரு வகையாம்.

கோபத்தின் உச்சத்தில்
சிலருக்கு பேச்சு வராது.
சில சமயம்
மூச்சு நின்று விடுதல்
நிகழ்தலும் உண்டு.

சினிமாக் கோபக்காரர்களின்
கண்கள் பிதுங்கும்;
பற்கள் நற  நறக்கும்;
கழுத்து நரம்புகளில்
மின்னல் தெறிக்கும்;

கோபம் இருக்குமிடத்தில்
குணமிருக்கும் என்பது பழமொழி.
பணக்காரனின் கோபம்
சற்றே வலியது தான்.
எது எப்படியாயினும்
சிரித்தபடி கோபப்படுபவன்
சந்தேகமின்றி ஆபத்தானவனே

மனிதனுக்கே கோபமெனில்
படைத்த இயற்கைக்கு
இல்லாமலிருக்குமா
பொல்லாத கோபம்?
கடலின் கோபம் வெள்ளம்.
காற்றின் கோபம் புயல்.
பூமியின் கோபம் நடுக்கம்.

சேர்ந்தாரைக் கொல்லி என்றான்
சினந் தன்னை வள்ளுவன்.
சினப்பதற்கு முன்,மனிதா ,
சற்றிதை நீ சிந்தித்தல் நலமே!  .

புதன், 14 மார்ச், 2012

அரும்புகளுக்கு அறிவுரைகள்

சின்னஞ் சிறிய குழந்தைகளே,
தேன்மொழி பேசும் குயிலினமே,
கன்னலின் இனித்திடும் நற்சாறாய்
கவலைகள் தீர்த்திடும் மருந்தமுதே!

நல்லதை என்றும் எண்ணிடுவீர்
நற்செயல் புரிந்தே உயர்ந்திடுவீர்
அல்லதைப் புறத்தே ஒதுக்கிடுவீர்
ஆன்றோர் நல்வழி நடந்திடுவீர்

தேசம் தன்னை நேசித்தே
தினமும் கடமைகள் ஆற்றிடுவீர்
பாசத்துடனே தமிழ் மொழியை
பாங்காய் நாளும் வளர்த்திடுவீர்

கல்வியைக் கண்ணாய்ப் போற்றிடுவீர்
கணினி இயலைக் கற்றிடுவீர்
பல்மொழி ஞானம் பெறுவதனால்
பாரினில் எங்கும் சென்றிடலாம்

எல்லா உயிரும் சமமென்ற
உணர்வை நெஞ்சினில் கொள்வீரே
அல்லா ஏசு ராமபிரான்
அனைவரும் நமக்கு ஒன்றேதான்.

வேண்டாம் நமக்குள் பிரிவினைகள்
வெறுப்பின் வேர்களை அறுத்தெறிவீர்
ஆண்டவன் பேரால் நமக்குள்ளே
அடிதடி நிகழ்தலை தடுத்திடுவீர்.

சொல்லும் செயலும் ஒன்றானால்
சொர்க்கம் நம்முன் உருவாகும்
கல்லும் கூட கனியாகும்.
கனவுகள் எல்லாம் நனவாகும்.

வாழும் நாட்கள் மிகக்குறைவு
வாழ்க்கை நீண்ட கடும்பயணம்
சூழும் தடைகளைப் பொடியாக்கி
சுறுசுறுப்புடனே உழைத்திடுவீர்.

நம்பிக்கை தீபம் எரியட்டும்
நாளைய உலகம் உம்கையில்
தெம்புடன் செயல்கள் புரிந்திடுவீர்
தேசம் தன்னை உயர்த்திடுவீர்.
உடலை நன்கு போற்றுங்கள்
உணவை மென்று தின்னுங்கள்
திடமாய் காரியம் செய்திடுவீர்
துணிவால் நெஞ்சை நிரப்பிடுவீர்.

மரங்களை நட்பாய் மதித்திடுவீர்
மண்ணில் வனங்களைப் பெருக்கிடுவீர்.
விண்மழை இங்கே கொட்டட்டும்
வசந்தம் வாழ்வில் கிட்டட்டும்.

வறுமை தடைஎனல் அறிவீனம்
வாழ்க்கையில் சோம்பல் பலவீனம்
எருமையாய் சோம்பி இருக்காமல்
எருதென உழைத்தால் பிரகாசம்.

தோல்விகள் தொகையாய் படையெடுக்கும்
துவண்டு நின்றால் அடிசறுக்கும்
ஆல்போல் நிமிர்ந்து நின்றிடுவீர்
அடிக்கும் புயலை வென்றிடுவீர்.

அறிவியல் உலகை முன்னேற்றும்
ஆயுதம் முற்றிலும் விலக்கிடுவீர்
வெறிப் போருணர்வை வெறுத்திடுவோம்
வெல்வோம் உலகை அன்பாலே.

உணவைப் பெருக்கும் வழிகாண்போம்
உழைக்கும் மக்களைப் போற்றிடுவோம்
பணம்தான் எல்லாம் என்றெண்ணி
பண்புகள் தம்மை இழக்காதீர்.

புதுப்புது கலைகள் கற்றிடுவீர்
புதுமைகள் பலபல கொணர்ந்திடுவீர்
கற்றலை என்றும் தொடர்ந்திடுவீர்
கடைசி வரைக்கும் படைத்திடுவீர்

ஆயிரம் பட்டங்கள் பெற்றாலும்
அடக்கம் இல்லார் அறிவில்லார்
பணிதல் யார்க்கும் நன்றென்ற
பொய்யா மொழியை மறவாதீர்.

தோல்வியைக் கண்டு துவளாதீர்
துணிந்து நின்றால் வென்றிடலாம்.
ஆல்போல் வாழ்க்கை தழைத்திடுமே!
அகிலாய் எங்கும் மணந்திடுமே!

ஒன்றாய் சேர்ந்து வாழ்ந்திடுவீர்
ஒற்றுமை பலமென உணர்ந்திடுவீர்.
பிரிந்து நிற்றல் பலவீனம்.
பின்னப் படுதல் அறிவீனம்.

கூட்டாய் மேய்ந்த எருதுகளை
கொல்ல முடியலை சிங்கத்தால்.
பாட்டினில் படித்த பாடத்தை
பகுத் தறிவோடு சிந்திப்பீர்.

பழமையில் நல்லதை எடுத்துக்கொள்.
புதுமையை அதனில் குழைத்துக்கொள்.
செழுமையில் வாழ்வு சிறக்கட்டும்.
சாதனை செயலில் பிறக்கட்டும்.

பணவெறி என்றும் நன்றல்ல
பண்புகள் தாமே பெருஞ்செல்வம்.
குணமே என்றும் பிரதானம்.
குற்றம் களைந்து வாழ்ந்திடுவீர்.

பதவி வெறியில் மூழ்காதீர்.
பாவச் செயல்கள் புரியாதீர்..
உதவி கேட்டு வருவோரை
உதறித் தள்ள முயலாதீர்.

ஏசுவைப் போல மானுடத்தை
நேசிக்க வேண்டும் எந்நாளும்.
புத்தனைப் போல வாழ்வினிலே
போக்கிட வேண்டும் பேராசை.

முகமது நபிகள் சொன்னபடி
முயன்று நல்வழி சென்றிடுவீர்.
காந்தி காட்டிய பாதையிலே
காத்திடு வீரே சத்தியத்தை.

முன்னைப் போர்கள் இனிவேண்டாம்.
முயன்று கொணர்வோம் நல்லுறவை.
அன்னை தெரசா அடியொற்றி
அணைப்போம் அன்பால் அகிலத்தை.

முதுமையை என்றும் இகழாதீர்.
முன்னோர் சொற்களைத் தள்ளாதீர்.
அக்கறை அவர்மேல் கொண்டிடுவீர்.
அன்பாய் அவர்களைப் புரந்திடுவீர்.

வீரம் மட்டும் நெஞ்சினிலே
இருந்தால் மட்டும் போதாது.
ஈரம் அதிலே சுரக்கட்டும்.
இரக்கத்தால் அது நிரம்பட்டும்.

ஏழையர் தம்மை எந்நாளும்
அணைத்திட வேண்டும் அன்போடு.
கீழாய் எவரையும் நடத்தாதே
மானுடர் யாவரும் சரிசமமே.

வேர்வை சிந்தி பெறப்பட்ட
ஒவ்வொரு பொருளும் வைரம்தான்.
ஆர்வத்துடனே உழைப்ப தனால்
ஆயிரம் சாதனைப் பூப்பூக்கும்.

மூடப் பழக்கம் ஒழித்திடுவீர்
முட்டாள்தனத்தை மாய்த்திடுவீர்.
பகுத்து அறிவீர் என்றென்றும்;
படைப்பீர் புதிய உலகத்தை.

.

சனி, 18 பிப்ரவரி, 2012

பெண்

கல்யாணத்திற்கு முன்
தினந்தோறும்
இரண்டுமுறை குளித்து
பல தடவை முகங்கழுவி
பொருத்தமாய் பொட்டிட்டு
கண்ணுக்கு மையப்பி
மணிக்கணக்காய் ஆராய்ந்து
ஆடை தேர்ந்து
உடுத்திப் பார்த்து
பிடிக்காமல் போய்
மீண்டும் மாற்றி
கோதிய தலையில்
கொத்துப் பூச்சூடி
மருதாணிச் சாயத்தை
நகம் கை பூசி
தன்னை அழகாக்கிக் கொள்வாள்.
கல்யாணத்திற்குப் பின்
அரைத் தூக்கத்தில்
அதிகாலை துயிலெழுந்து
வாசல் பெருக்கி
வண்ணக் கோலமிட்டு
சமையல் பண்ணி
வீடு பெருக்கித் துடைத்து
சலவை செய்து
குளிக்கக் கூட நேரமில்லாமல்
தன்னை அழுக்காக்கிக் கொள்வாள்.

சனி, 11 பிப்ரவரி, 2012

காத்திருக்கிறார்கள்

வானம் பார்த்து
விவசாயி.
தேர்வு முடிவுக்கு
மாணவன்.
அடுத்த தேர்தலுக்கு
அரசியல்வாதி.
பிள்ளைகளை
கல்லூரியில் சேர்க்க
நீண்ட வரிசையில்
பெற்றவர்கள்.
முதல் தேதிக்காக
அரசு ஊழியர்.
திருமணத்திற்கு
முதிர்கன்னி.
பேருந்துக்கும்
புகை வண்டிக்கும்
பயணிகள்.
மரணத்திற்கு
அதி முதியோர்.

சனி, 4 பிப்ரவரி, 2012

நானும் அமெரிக்கனே

நானும் கூட அமெரிக்காவைத் தான் பாடுகிறேன்!
நான்தான் அந்தக் கறுப்புச் சகோதரன்.
விருந்தினர் வரும்பொழுது
சாப்பிடுவதற்கு
அவர்கள் என்னை
சமயலறைக்கு அனுப்புகின்றனர்.
சிரித்தபடியே நான்,
நன்றாகச் சாப்பிட்டு
பலசாலியாக வளருகிறேன்!
நாளைக்கு
விருந்தினர் வரும்பொழுது
அவர்களோடு உட்காருவேன்.
யாருக்கும்
தைரியம் இருக்காது
“சமையலறையில் சாப்பிடு”
என்று சொல்ல.
மாறாக,
எவ்வளவு அழகாக இருக்கிறேன்
என்பதைப் பார்த்து
அவமானத்தில் ஆழ்வார்கள்.
நானும் கூட
அமெரிக்காவைத் தான் பாடுகிறேன்!
____ லாங்ஷ்டன் ஹ்யுக்ஸ்

வியாழன், 2 பிப்ரவரி, 2012

நாளை நமதே

இப்படியே போகாது காலம்
வெளிச்சம் வரும்
விடியல் மலரும்.
வாழும் நாளெல்லாம்
கோடையே கொளுத்தாது.
சோகங்கள் மட்டுமே
கொண்டதல்ல வாழ்க்கை.
சுகங்களும் தாலாட்டும்.
பாலைவனங்களிலும்
சோலைகள் உண்டு.
வீழ்ச்சியிலும்
பாடம் படிக்கலாம்.
யோசிக்கையில்
வழிகள் கிடைக்கும்.
அடி தரும் காலம்
அள்ளித் தந்து
அணைக்கவும் செய்யும்.
நம்பிக்கையோடு செயல்படு.
நல்லது நடக்கும்.
நாளை நமதே!

சனி, 28 ஜனவரி, 2012

இடமாற்றம்

மதபோதகர்கள்
எங்கள் நாட்டில்
நுழைந்த பொழுது
அவர்களிடம்
பைபிளும்
எங்களிடம்
எங்கள் மண்ணும்
இருந்தன.
அவர்கள் சொன்னார்கள்,
“நாம் எல்லோரும்
ஒன்றாய்
இறைவனைத்
துதிப்போம்!”
நாங்களும்
கண்களை மூடி
உளமாரப்
பிரார்த்தித்தோம்.
கண்களைத்
திறந்த பொழுது
பைபிள்

எங்களிடமும்
எங்கள் மண்
அவர்களிடமும்
இடம் மாறியிருந்தன!
____பிசப் டேஷ்மான்ட் ட்யூட்டு