வியாழன், 27 செப்டம்பர், 2012

கனவுகள்

அழுகின்ற குழந்தைக்கு
ஆழாக்குப் பால் வாங்கணும்...
ஒழுகும் குடிசைக்கு
ஓலை வாங்கி மேயணும் ....
மெழுகுவர்த்தியில் படிக்கும்
சின்னப் பையனுக்கு
மின்விளக்கு பொருத்தணும்...
அழகான மனைவிக்கு
வரும் பொங்கலுக்காவது
கம்மல் வாங்கித் தரணும்...
இருக்கின்ற மவராசனுக்கு
இவை எல்லாம்
கடுகுச்சோடு விசயங்க தான்.
இல்லாத சம்சாரிக்கோ
மொடாச்சோடு கனவுகள்.

அது வரைக்கும்

தேளாய்க் கொட்டுகிறது வறுமை.
தீயாய் எரிக்கிறது பசி.
சாண் ஏற முழம் சறுக்கும் வாழ்க்கை.
'விழுவது எழுவதற்கே'
கேட்பதற்கு
கவர்ச்சியாகவே இருக்கிறது
உபதேசம்.
எழும் வரைக்கும்
உயிர்த்திருக்க என்ன வழி?

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

பாடம்

பகையும் உறவும் பருவங்கள் போல
தேயும்;வளரும் வானத்து நிலவாய்.
கசப்பு என்பது இனிப்பின் மரணம்.
வெறுப்பின் முடிவில் அன்பின் உதயம்.
பொறுமையின் உச்சம் பூமியின் நடுக்கம்.
காற்றின் சினத்தில் கடும்புயல் சீறும்.
கடலின் கொதிப்பில் வெள்ளம் பாயும்.
கதிரவன் சீறின் குளிர்நீர் கொதிக்கும்.
ஏழைகள் எழுந்தால் புரட்சிகள் வெடிக்கும்;
ஆளும் வர்க்கம் அடியோடு  ஒழியும்.
சரித்திரம் சொல்லும் பாடம் இது தான்.
தெரிந்து நடந்தால் வாழ்க்கை பிழைக்கும்.

வாழ்க்கையின் ரகசியம்

கொஞ்சம் சிரிப்பு
கொஞ்சம் அழுகை
அது தான் வாழ்க்கையடா!
இன்பம் சிலநாள்
துன்பம் சிலநாள்
அதன் பேர் இயற்கையடா!
இனிப்பே தின்றால்
திகட்டிப் போகும்
கசப்பும் வேண்டுமடா!
நிழலின் அருமை
வெயிலில் தெரியும்
பெரியோர் மொழிந்ததடா!
வாழும் வரைக்கும்
மனிதரை நேசி
வாழ்க்கை இனிக்குமடா!
இருப்பதைப் பலர்க்கும்
பகிர்ந்து கொடுத்தால்
இன்பம் கிடைக்குமடா!



வியாழன், 20 செப்டம்பர், 2012

ஒளியிழந்த கண்ணினாய்.

           இருட்டு..இருட்டு...எங்கும் இருட்டு,
           நடுப்பகலின் கூச வைக்கும் ஒளியில் கூட.
           மீளவியலா இருள்;முழுக் கிரகணம்.
           பகலின் நம்பிக்கை துளியுமின்றி.
            [ஹெலன் ஹெல்லருக்குப் பிடித்த ஹோமரின் வரிகள்] 

சிறிது பெரிதாய்.....


                இங்கு
                 இந்தக் கணத்தில்
                 நிகழும்
                 சின்னஞ்சிறிய
                 வண்ணத்துப்பூச்சியின்
                 சிறகசைப்பு
                  நாளை அல்லது
                  பிறிதொரு நாள்
                  வேறொரு இடத்தில்
                   மிகப் பெரிய
                   சூறாவளியைக்
                   கிளப்பக்கூடும்.
                                      ------யாரோ 

புதன், 19 செப்டம்பர், 2012

வெண்பாக்கள்

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகள்,எழுபதுகளில் இலக்கிய இதழ்களில் வெண்பாப் போட்டிகள் நடைபெற்றன.குறிப்பாக கண்ணதாசனின் தென்றல் இதழில் வெளிவந்த வெண்பாக்கள் தரம் வாய்ந்தவை.தமிழக அரசின் தமிழரசு மாத இதழில் வரும் வெண்பாப் போட்டியில் நானும் என் நண்பர் சண்முகசுந்தரம் அவர்களும் கலந்து கொள்வது உண்டு.ஒன்றிரண்டு தடவை எங்கள் பாக்கள் வெளியிடப்பட்டு,நாங்கள் பரவசப்பட்டதுண்டு.
                         ஒரு தடவை கனிச்சோலை என்ற இதழில் வெண்பாப் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.'மன்னிப்பே இல்லை உனக்கு' என்ற ஈற்றடிக்கு வெண்பா எழுத வேண்டும்.வழக்கம்போல்நானும் நண்பரும் எழுதி அனுப்பினோம்.அடுத்த இதழில் பத்து வெண்பாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நடுப்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தன.நண்பரின் வெண்பா வெளியிடப்பட்டிருந்தது.ஆனால் என் வெண்பாவைக் காணோம்.சிறிது ஏமாற்றமாக இருந்தது.மெல்ல புத்தகத்தைப் புரட்டினேன்.என்ன ஆச்சரியம்!நடுப்  பக்கத்தில் என் வெண்பா முத்திரைக் கவிதையாக ஒரு இலக்கிய அணிந்துரையுடன் இடம் பெற்றிருந்தது.
                          பல ஆண்டுகளுக்கு முந்தைய 'தமிழரசு' இதழ் ஒன்றை ஞாபகார்த்தமாக பாதுகாத்து வருகின்றேன்.சில நாட்களுக்கு முன்னால் அதில் இருந்த வெண்பாக்களை பார்வையிட்டேன்.அந்த வெண்பாக்களில் ஒன்று இன்று கவிப்பேரரசர் என்று உலகெங்கும் அறியப்படும் அன்றைய வைரமுத்து அவர்களால் எழுதப்பட்டிருந்தது.மகிழ்ச்சியாக இருந்தது.
                           நான் எழுதிய மூன்று வெண்பாக்கள் பின்வருமாறு:

                  பதியில்லை;கைம்பெண்நான்;பாழும் உலகில்
                  விதியென்று நானிருந்தேன்; ஆனால் --சதிநிலவே
                   இன்னுமெனை நீவேறு வாட்டிநின்றால்,உண்மையாய்
                   மன்னிப்பே யில்லை யுனக்கு.
                                                               [கனிச்சோலை---ஜூலை 1970]
                    பொட்டில்லை;பூச்சூடச் சுற்றத்தார் ஒப்பவில்லை;
                     கட்டினேன் காரிகைக்குப் பொற்றாலி -சுட்டெடுத்த
                     ஆணிப்பொன் பூமுகத்தில் ஆனந்தப் புன்முறுவல்
                      காணக் குளிர்ந்ததே கண்.
                                                                [தமிழரசு ....நவம்பர் 1970]
                       எல்லா நலத்துடனும் ஏற்றம் பலவுற்று
                        வல்லார் மிகச்சிலரே வாழ்கின்றார் - பல்லோர்
                        தலைக்கெண்நெய் இல்லாது தாழ்கின்றார்;இந்த
                        நிலையை ஒழிக்க நினை.
                                                                 [தமிழரசு 16.08.1971]

                

திங்கள், 17 செப்டம்பர், 2012

சாதனை நாயகர் பெரியார்

இன்று செப்டம்பர் 17.மனிதர்களுக்கு முகவரி தந்த மாமேதை தந்தை பெரியார் பிறந்த நாள்.மதமும் சாதியும் மனிதர்களை அவமதித்தபொழுது அதற்கு எதிராக எரிமலையாய்க் கிளர்ந்து  எழுந்தவர் பெரியார்.கல்லூரியில் படித்துப் பட்டம் பெறாவிட்டாலும் ஒரு சமூகப் போராளியாய் அவர் புரிந்த சாதனைகள் இன்று பல பேராசிரியர்களின் ஆராய்ச்சிப் பட்ட மேற்படிப்புக்கு பாடப் பொருளாகத் திகழ்கின்றன.மூச்சடங்குகிற வரையிலும் தமிழ் மண்ணெங்கும் சூறாவளியாய் சுற்றி தன்மான முழக்கம் செய்த தந்தை பெரியாரை நினைவுகூர என்றோ எழுதிய ஒரு கவிதையை வாசகர்களுக்கு முன்னர் வைக்கிறேன்.கவிதை பின்வருமாறு:

               அறியாமைக் கருக்கிருட்டில் அமிழ்ந்திருந்த தமிழர்களை
                    அறிவென்னும் வெளிச்சத்தால் விடுவித்த ஆதவன் நீ!
                வறியாராய்க் கடுந்துயரில் வதையுண்ட ஏழையரை
                      வாழவைக்க இங்குதித்த வண்ணத்தமிழ் மன்னன் நீ!
                  பறிபோன பழந்தமிழர் பண்பாட்டு மேன்மைதனை
                       பக்குவமாய் மீட்கவந்த பைந்தமிழர் தோழன் நீ!
                  சரியாத தமிழ்மொழியை சாகின்ற கணம்வரைக்கும்
                         சலிக்காமல் ஒலித்திட்ட சாதனையின் நாயகன் நீ!

                    சாதியென்ற சவக்குழிக்குள் சரிந்திட்ட மக்கள்தமை
                         சரிசெய்து எழவைத்து சரித்திரத்தில் இடம்பெற்றாய்!
                     நாதியில்லா நடைப்பிணமாய் நலிவுற்ற பாமரர்க்கு
                          நல்லவழி காட்டுதற்கு நாளெல்லாம் பாடுபட்டாய்!
                      ஆதிமகன் வள்ளுவனின் 'பிறப்பொக்கும் உயிர்க்' கென்ற
                           அழியாத வேதத்தை எல்லோர்க்கும் போதித்தாய்!
                       'நீதிஎலாம் பொது'வென்ற நிறைமொழியின் சத்தியத்தை
                            நின்றொளிரும் தத்துவமாய் இங்கெமக்கு நீ தந்தாய்!
                                                   [தினகரன் 17.09.2003]
                     
                     

காஞ்சி வேந்தே!வாழி!வாழி!

செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்.அவர் தலை சிறந்த பேச்சாளர்;ஈடு இணையற்ற எழுத்தாளர்.தமிழ்,ஆங்கிலம் இரண்டிலும் முத்திரை பதித்தவர்.இறுதி வரை படித்துக் கொண்டே இருந்தவர். .பத்திரிக்கையாளர்.நாடக நடிகர்.அரசியலாளர்.பன்முகம் கொண்ட அந்த மனிதாபிமானி இன்று நம்மிடையே இல்லை.எனக்குள் தமிழின் பால் சாகாத காதலை தோற்றுவித்த அந்த மாமனிதனை நினைவுகூர என்றோநான் எழுதிய ஒரு கவிதையை இங்கு சமர்ப்பிக்கிறேன்.கவிதை பின்வருமாறு:

                நூலென்றால் தமிழர்க்குக் குறளாம்;அமுத
                     மொழியென்றால் உயர்தமிழே முன்னே நிற்கும்!
                 பாலென்றால் பசும்பாலே சிறப் புடைத்து!
                      பழமென்றால் இனிக்கின்ற மாவீன் கனியே!
                  ஆறென்றால் காவிரிதான் பாய்ந்து வரும்!
                       அன்பென்றால் அண்ணாவின் அன்பே அன்பு!
                   ஊரென்றால் காஞ்சியைத்தான் ஒப்புக் கொள்வோம்!
                        உறவென்றால் அண்ணாதான் உயர்ந்து நிற்பார்!

                 ஏர்பிடித்து உழுகின்ற உழவர் மக்கள்,
                        ஏற்றமிகு தொழிலாளர்,புலமை மிக்கார்,
                   பார்வியக்கும் தமிழகத்து இளைஞர் கூட்டம்,
                         பைந்தமிழின் நல்லழகுப் பெண்டி ரெல்லாம்
                   கார்ஒக்கும் கலைவல்லார் காஞ்சி வேந்தை
                          கவின்தமிழாள் பெற்றெடுத்த ஆணிப் பொன்னை
                    ஆர்க்கின்ற அன்புடனே வாழ்த்து கின்றார்!
                          அறிஞர்புகழ் தொல்லுலகில் வாழி!வாழி!
                                                         [மாலைமுரசு 15.09.1970]

                  

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

தலைவர்

அவர்தான் எல்லாமென்று
எல்லோரும் சொல்கிறார்கள்.
அவர் நன்கறிவார்
அவரில்லை என்பதை.
ஆனாலும் விடுவதாயில்லை
சுற்றிலுமிருப்பவர்கள்.
எப்பொழுதும் போல
இம்முறையும்
ஏற்றிவிட்டார்கள்
பலிபீடத்தில்.
.

இயற்கை

யாருக்குத்
தெரியப் போகிறது
என்ற தைரியத்தில்
நாம் செய்யும் காரியங்கள்
யாருக்கோ
தெரிந்துவிடுகிறது.

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

ஆப்ரிக்காவின் வேண்டுகோள்

நீயல்ல நான்...
ஆனாலும் நீ
எனக்கொரு சந்தர்ப்பம்
தர மறுக்கிறாய்;
நான் நானாக இருக்க
விடமாட்டேன் என்கிறாய்.
"நான் நீயாக இருந்தால்...."என
பிலாக்கணம் பாடுகிறாய்.
நான் நீயல்ல என்பது
உனக்குத் தெரிந்திருந்தும்
என்னை நானாக இருக்க விடாது
அடம் பிடிக்கிறாய்.
நீதான் நான் என்றும்
என் செயல்கள் நினதென்றும் கருதி
அவற்றில் குறுக்கிடுகிறாய்;
உள்ளே நுழைகிறாய்.
நியாயமில்லாமல்
அறிவில்லாமல்
முட்டாள்தனமாக
நான் நீயாக முடியுமென்றும்
உன்னைப் போல
பேச,சிந்திக்க,செயல்பட
என்னால் முடியுமென்றும்
நீ எண்ணுகிறாய்!
எல்லாம் தெரிந்த இறைவன்
என்னை நானாகவும்
உன்னை நீயாகவும்
தெளிந்து படைத்துள்ளார்!
அந்த இறைக்காகவேனும்,
என்னை நானாய் இருக்க
அனுமதி நண்பா!
                         ---ரோலண்ட் டாம்பெகெய் டெம்ப்ஸ்டர்




வியாழன், 13 செப்டம்பர், 2012

எங்கே வானவில் முடிகிறதோ.....

எங்கே வானவில் முடிகிறதோ அங்கே,
ஒரு இடம் அமையப்போகிறது,சகோதரனே!
அங்கே உலகம் எல்லாவிதப் பாடல்களையும் பாடப்போகிறது.
அங்கே நாம் சேர்ந்து பாடப்போகிறோம்,சகோதரனே!
நானும் நீயுமாகச் சேர்ந்து--
நீ வெள்ளையன் ...நான் அவ்வாறு இல்லாவிடினும் கூட.
அது ஒரு சோகமான பாடலாக இருக்கும்,என் சகோதரனே!
ஏனெனில் அதன் மெட்டு நாம் அறியோம்.
கற்பதற்கு கடினமான மெட்டு அது.
ஆனாலும் என் சகோதரனே,
நீயும் நானுமாகச் சேர்ந்து
நாம் கற்றுக் கொள்ளமுடியும் அதனை.
கருப்பு மெட்டு என்று ஒன்று எங்கும் இல்லை.
வெள்ளை மெட்டு என்பதும் இல்லவே இல்லை.
இசை மட்டுமே இருக்கிறது,சகோதரனே.இசை மட்டுமே.
ஆம்,நாம் இசையை மட்டுமே பாடப் போகிறோம்-
வானவில் எங்கு முடிகிறதோ,அங்கே.
                                              ---ரிச்சார்டு ரைவ்(தென்னாப்பிரிக்கக் கவிஞர்)

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

நன்றாகக் கற்றுக் கொடுங்கள்

எல்லோரும் கடிதம் எழுதுகிறார்கள்.அவற்றில் பல படித்து முடித்ததும் கிழித்து வீசப்படுகின்றன.ஆனால்,சில கடிதங்கள் என்றும் சாகாத இலக்கியங்களாக சரித்திரத்தில் பதிவு செய்யப்படுகின்றன.அப்படிப்பட்ட ஒரு கடிதத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்து வாசகர்களுக்குத் தருவதில் மகிழ்வுறுகிறேன்.அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய அற்புதக் கடிதம் அது.ஆசிரியர்கள் அனைவரும் படித்துப்  பின்பற்ற வேண்டிய கற்பித்தல் தத்துவம்.

"எல்லா மனிதர்களும் நியாயவான்கள் அல்ல;எல்லா மனிதர்களும் வாய்மையாளர்கள் அல்ல என்பதை அவன் கற்றுக் கொள்ளட்டும் .

சுயநலமே உருவான ஒரு அரசியல்வாதிக்குக் கூட அர்ப்பணிப்பு உணர்வுள்ள தலைவன் இருக்கக் கூடும் என்பதையும் ஒரு கயவனுக்குக் கூட கதாநாயகன் இருக்கக் கூடும் என்பதையும்,அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

ஒவ்வொரு பகைவனுக்கும் ஒரு நண்பன்  இருக்கிறான் என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

தானாகக் கிடைக்கும் ஐந்து டாலர்களைக் காட்டிலும் உழைத்துப் பெறப்படும் ஒரு டாலர் அதிக மதிப்புள்ளது என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

இழப்பதற்கு அவன் கற்றுக் கொள்ளட்டும்.அதே  சமயத்தில் வெற்றிகொள்வதில் உள்ள மகிழ்ச்சியை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளட்டும்.

பொறாமைத் தீயிலிருந்து அவனை நெடுந்தொலைவு தள்ளிச் செல்லுங்கள்.அமைதியான சிரிப்பு என்னும் ரகசியத்தை அவனுக்குப் புகட்டுங்கள்.

அடக்கியாள்பவன் வெகு சுலபமாக அடிமையாகி விடுவான் என்பதை அவனுக்குத் தொடக்கத்திலேயே கற்றுக் கொடுங்கள்

புத்தகங்களின் அற்புதத்தை அவனுக்குக் காட்டுங்கள்.அதே சமயத்தில்,வானில் பறக்கும் பறவைகள்,சூரிய ஒளியில் நனையும் தேன் ஈ க்கள்,மலையோரத்துப் பூக்கள் ஆகியன பற்றிய முடிவற்ற ரகசியங்களைச் சிந்திப்பதற்கு நேரத்தை ஒதுக்குங்கள்.

ஏமாற்றிப் பிழைத்தலை விட தோல்வியுறுதல் பெருமைக்கு உரியது என்பதைப் பள்ளியில் அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

தன்னுடைய கருத்துக்களில் முழு நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள் ----எல்லோரும் ஒட்டு மொத்தமாக அவை தவறு எனக் குற்றம் சாட்டினாலும் கூட

ஒரு பெரும் கூட்டத்தை கண்மூடித்தனமாகப் பின்பற்றிச் செல்லாதிருப் பதற்கான வல்லமையை அவனுள் ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள்.

எவர் சொல்வதையும் செவிமடுக்கக் கற்றுக்  கொடுங்கள்..ஆனால்கேட்டவற்றை உண்மை எனும் திரையில் வடித்தெடுக்கவும் கூடவே கற்றுக் கொடுங்கள்

துயரமான பொழுதுகளில்  சிரிப்பதற்கு அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.கண்ணீர் வடிப்பதில் அவமானம் ஏதுமில்லை என்பதையும் தெரியப்படுத்துங்கள்.

எதிலும் எப்பொழுதும் குறை காண்பவர்களைப் பரிகசித்து ஒதுக்கவும் அளவுக்கு மீறி இனிப்பாகப் பேசுவோரிடம் எச்சரிக்கையாக இருக்கவும் கற்றுக் கொடுங்கள்.

அதிக விலை நிர்ணயிப்போருக்கே உடல் வலிமையையும் மூளையையும் விற்க வேண்டும் என அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள்.அதே சமயத்தில் அவனுடைய இதயத்திற்கும் ஆத்மாவிற்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்துங்கள்.

வெறுமனே ஊளையிடும் கூட்டத்தின் முன் காதுகளை இறுக மூடிக் கொள்ளவும் சரியான ஒன்றுக்காக துணிவோடு போராடவும் அவனுக்கு வழிகாட்டுங்கள்.

மென்மையாகச் சொல்லிக் கொடுங்கள்.அதற்காக அவனை ஆரத் தழுவிக் கொஞ்ச வேண்டும் என்பது அவசியமில்லை.ஏனென்றால் நெருப்புச் சோதனையில் தான் அருமையான இரும்பு உருவாக முடியும்.

விரைந்து செயல்படுவதற்கான துணிவை அவன் பெறட்டும்.அதே சமயத்தில் துணிவாக இருப்பதற்கான பொறுமையையும் சேர்த்தே அவன் பெறட்டும்.

எப்பொழுதும் தன் மீது உயர்ந்த நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்---அப்பொழுது தான் அவனால் மானுடத்தின் மேல் அபார நம்பிக்கை வைக்க முடியும்.
.
.

 .

.