திங்கள், 11 நவம்பர், 2013

இது தான் வாழ்க்கை

ஒரு நாள்  போல்
மறு நாளில்லை.
நேற்றைய சந்தோசம்
இன்று காணோம்.
இன்றைய சோகங்கள்
நாளை மாறலாம்.
மாறாமல் போவதும்
சாத்தியமானதே.
வாய்த்த படிக்கு
வாழ்ந்து முடிப்போம்.
ஒற்றை இரவில்
உற்ற துன்பங்கள்
விலகுதல் என்பது
விளையாட்டல்ல.
இறக்கை இல்லாமல்
பறக்க முயல்வது
இயற்கைக்கு முரணானது.
திட்டமிட்டாலும்
இல்லாவிடினும்
தன்பாட்டுக்குப் போகும்
வாழ்க்கை.

மீண்டும் குறுங் கவிதைகள்

கடலில்
நல்ல மழை
குருட்டு மேகம்.

மழைத் துளியில்
மாயா ஜாலம்
வான வில்.

எத்தனை முறை
ஐயம் கேட்டும்
கோபப்படாத ஆசிரியர்
'டியுசன்' வகுப்பு.

எமன் குறித்த நேரத்துக்கு
முன்னதாகவே மரணம்
தர்மாஸ்பத்திரி.

எல்லா வகை ரத்தமும்
ஒரே உடலில்
கொசு.

கொட்டியதும்
வளைந்தது
சட்டம்.

ஏமாற்றிய காகம்
ஏமாந்தது நரியிடம்
சந்தோசத்தில் பாட்டி.

நிஜம் வெளியே
நிழல் உள்ளே
நிலைக் கண்ணாடி.

வாலை வெட்டு
முதுகை நிமிர்த்து
மனிதன்.

ஆண்டவனுக்கும்
மாண்டவனுக்கும்
அலங்கார தேர்பவனி. 

சனி, 9 நவம்பர், 2013

இன்னும் சில குறுங் கவிதைகள்

வாங்கியும்
சிவக்கலாம்
கரங்கள்.

வெள்ளை மாளிகையில்
கருப்பு அதிபர்
கால மாற்றம்.

மீனையும் காணோம்
பறவையும் வரவில்லை
வற்றிய குளம்.

திரையில்
நட்சத்திரங்கள்
பகலிலும்.

உண்டி கொடுப்போர்
வயிற்றில்
உறு பசி.

நெய்தோர்
உடலெங்கிலும்
அம்மணம்.

மாளிகை கட்டியவன்
வாசம்
மண் குடிசையில்.

சாலை போட்டவன்
வீட்டிற்கு
சரியான பாதையில்லை.

அன்று மட்டும்
வீட்டிலேயே குடித்தார்கள்
காந்தி ஜெயந்தி.

இறக்கைகள் இல்லாமலே
பறக்கிறது
விலைவாசி.  

புதன், 6 நவம்பர், 2013

சிந்தனையில் சிந்தியவை

                                      சம நீதி
ஆயிரம் உண்டிங்கு சாதி -எனில்
அன்னியர் வந்து புகலென்ன நீதி?
நாங்கள் மட்டுமே கொள்ளை யடிப்போம்
சமமாய் எமக்குள் பிரித்துக் கொள்வோம்.

                        புதிய ஜனநாயகம்
மக்களின் பணத்தை
மக்களில் சிலர்
(தம்)மக்களுக்காக
கொள்ளை அடிப்பது.

                           காலத்தின் கோலம்
 பொங்கும் காலம் போய்
 'போ'ங்காலம் வந்து விட்டால்
 அருகம் புல் நட்டாலும்
 அப்படியே கருகி விடும்.  

 






ஞாயிறு, 3 நவம்பர், 2013

குறுங் கவிதைகள்

திருமகளை
அடைவதற்காக
கலைமகளை விற்கிறார்கள்
கல்வி வியாபாரம்.

குய்யோ முறையோ என்று
கூக்குரலிட்டாலும்
உடைந்த மண்பானை
ஒட்டிக் கொள்ளவா போகிறது?

அஸ்தமனமானாலும்
அடுத்த நாள் காலை
புத்தம் புதிதாய்
எழும் ஞாயிறு.

 விழுந்தால் தான்
 உதயமாகும்
 எழ வேண்டும்
 எனும் எண்ணம்.

 சுவரெங்கிலும்
 எழுதப்பட்டிருந்தது
 'சுவற்றில் எழுதாதே'

 நடுவே நெருப்பு
 சுற்றிலும் நீர்
 ஈழம்.

 பூவின் மேல்
 இன்னொரு பூ
 வண்ணத்துப் பூச்சி.

 அழுகையும் சிரிப்பும்
 எழுத்துகளில்லாத
 வார்த்தைகள்.

  மூடிய கதவைத் திறக்கும்
  திறந்த கதவை மூடும்
  கொள்கை இல்லாத காற்று.
 
  வந்ததும் போனதும்
   குழந்தைக்குத் தெரியாது
   அப்பாவுக்கு ஐ.டி வேலை.