சனி, 18 டிசம்பர், 2010

மாணவர்-பெற்றோர்-ஆசிரியர்

அளவுக்கு மீறி உணவு ஊட்டினால், குழந்தையின் உடல் நலத்துக்கு ஊறு வந்து சேரும். அளவுக்கு மீறி பாடம் புகட்டினால், குழந்தையின் மனதிற்கு ஊறு வந்து சேரும்.

பூ போன்ற மனதில் புயல் வேகத்தில் எண்ணங்களைத் திணித்தால் பட்டுப் போவது குழந்தைகள் மட்டுமல்ல... தேசமும் தான்.

புத்தகங்களின் கனத்தால் குழந்தையின் மனம் அழுத்தப்படக் கூடாது.

பாடமானாலும் பாலானாலும் அளவறிந்து புகட்டுதலே அறிவுடைமை.

பாடப் பொருளோடு அன்பையும் குழைத்துக் கற்றுத் தரும் ஆசிரியரே குழந்தையின் உற்ற நண்பராவார்.

ஆசிரியரைப் பார்த்து குழந்தை அச்சப்படும் பொழுது அந்த இடத்தில் கற்பித்தல் தோற்றுப் போகிறது.

கல்வி சரியான காலத்தில், சரியான அர்த்தத்தில் புகட்டப்படாத பொழுது தான் பயங்கரவாதிகளும், தீவிரவாதிகளும், வன்முறையாளர்களும், சமூக விரோதிகளும் நாட்டில் உருவாகிறார்கள்.

சாதி, மதம், நிறம், இனம், மொழி இவற்றைத் தாண்டி, எல்லாவற்றையும் எல்லோரையும் நேசிக்கிற மனிதர்களை உருவாக்குவதே சரியான கல்வி முறை.

இயற்கையை நேசிக்கவும் ரசிக்கவும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். அப்பொழுது தான் இந்த பூமியில் எப்பொழுதும் இயற்கை எழில் நிரம்பி வழியும்.

குழந்தையிடம் ஏராளமான ஆற்றல்களும் திறமைகளும் மண்டிக் கிடக்கின்றன. அவற்றை முழு வீச்சில் வெளிக் கொணர்வது ஒரு சிறந்த ஆசிரியனின் கடமையாகும்.

குழந்தைகளுக்கு அன்போடு சேர்த்து, அறிவைப் புகட்டும் பொழுது, நாட்டிற்கு எல்லோரையும் நேசிக்கிற அறிவாளிகள் கிடைக்கிறார்கள்.

ஆசிரியர்களுக்கு எல்லாம் தெரியும் என்று குழந்தைகள் நினைக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போகாத வண்ணம் ஆசிரியர்கள் தங்கள் அறிவை நாள்தோறும் விசாலப்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

எப்பொழுதும் ஆசிரியர்கள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் தற்கால குழந்தைகளின் உள்ளங்களில் கேள்விகளும் ஐயங்களும் முளைத்த வண்ணம் உள்ளன.

குழந்தைகளின் வயது, மனது, ஈர்க்கும் சக்தி, உடல்நலம், தனிநபர் வேறுபாடுகள் ஆகிவற்றைக் கருத்தில் கொண்டு கற்பிக்கும் ஆசிரியர்களே கற்பித்தலில் வெற்றி பெறுகிறார்கள்.

ஒரு சராசரியான குழந்தையின் மனதில் அன்றைய பாடப்பொருளை வெற்றிகரமாகப் பதிய வைக்கும் ஆசிரியாருக்கு அன்றைய பொழுது அர்த்தமுள்ள பொழுதாக அமைகிறது. அதில் கிடைக்கும் ஆத்ம திருப்தியை விட அவருக்கு வேறு எந்தப் பரிசும் தேவையில்லை.

பின் தங்கிய குழந்தைகளை அறிவாளிகளாக மாற்றுதல் என்பது வறண்ட களர் நிலத்தை வளமான விளைநிலமாக மாற்றுவதற்கு ஒப்பாகும்.

கல்வி என்னும் அகல் விளக்கால் மட்டுமே அறியாமை என்னும் காரிருளை அகற்ற முடியும்.

கல்வி இல்லாத தேசத்தின் மீது வறுமையும் அறியாமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் மூட நம்பிக்கைகளும் படையெடுத்துப் பாழ்படுத்தும்.

ஒரு கல்வி முறை வன்முறையாளர்களையும், தீவிரவாதிகளையும், பயங்கரவாதிகளையும் உருவாக்குமானால் அந்தக் கல்வி முறையை ஒழித்துக் கட்டுவோம்.

எந்தக் கல்வி முறை மனிதநேயம் மிக்க மனிதர்களை உருவாக்குமோ அந்தக் கல்வி முறையை மலர் தூவி வரவேற்போம்.

கல்வி தேர்ந்த மருத்துவர்களையும், திறமையுள்ள பொறியியலாளர்களையும், அறிவுக் கூர்மையுடைய விஞ்ஞானிகளையும், நல்ல மெய்ஞானிகளையும் உருவாக்கட்டும்; கூடவே, அவர்களை மனிதநேயம் மிக்கவர்களாகவும் மாற்றட்டும்.

தலை நிமிரச் செய்வதும், தன்மானம் ஊட்டக்கூடியதும், தன்னம்பிக்கை தழைக்கச் செய்வதும் வாழ்வதற்கான தகுதிகளை வளர்ப்பதும் உண்மையான கல்வியின் மேன்மையான நோக்கமாகும்.

கருத்துகள் இல்லை: