சனி, 2 மார்ச், 2013

சிந்தனை பத்து - 14


  1. பாராட்டுங்கள் தாராளமாக. செலவு சில வார்த்தைகள் மட்டுமே. பாராட்டப்படுபவர் பரவசம் அடைவார்; உற்சாகம் பெறுவார்; வேகத்துடன் செயல்படுவார்; பாராட்டு  அவரின் சாதனைகளுக்கு ஊக்க மருந்தாய் அமையும்.
  2. சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் பாராட்டை விரும்புகிறார்கள். பாராட்டுவோமே....நாம் என்ன குறைந்தா போய் விடுவோம்?
  3. பாராட்டு என்பது பரிசாக இருக்கலாம். சான்றிதழாக இருக்கலாம். ஒரு கவிதையாக இருக்கலாம். ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளாக இருக்கலாம். ஒரு கைகுலுக்கல் கூட பாராட்டே. ஒரு சிறு முறுவலும் கூட.
  4. விதை உறக்க காலத்தில், முளைப்புக்காகத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்கிறது. இப்படி வாழ்க்கையை எதிர்கொள்ள நாம் நம்மை தயார்ப் படுத்திக் கொள்கிறோமா?
  5. மரங்களும் அவற்றில் அடையும் பறவைகளும் எவ்வளவு அழகாய் உள்ளன!காற்றில் இலைகள் சலசலக்கும் ஓசையும் காலை நேரத்தில் பறவைகளின் கலகலப்பான ஒலியும் கேட்பதற்கு எவ்வளவு ரம்மியமாக உள்ளது!
  6. சலசலத்து ஓடுகிறது ஆறு. ஆற்று நீரில் துள்ளிப் பாயும் வாழை மீன்கள். கரையில் செழித்து வளர்ந்த செடிகள். செடிகளின் பூக்களில் தேன் உறிஞ்சும் வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள். ஓ, இயற்கைத் தாயே, நின் வரங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.
  7. சில செயல்களை யோசித்துச் செய்ய வேண்டும். சிலவற்றை உடனடியாகச் செய்ய வேண்டும். சில செயல்களை துணிவோடு செய்ய வேண்டும். சில செயல்களைச் செய்வதற்கு அச்சப்பட வேண்டும்.
  8. கோபப்படும் பொழுது முகம் தன் அழகை இழக்கிறது. அகம் அறிவை இழக்கிறது. பேச்சும் மூச்சும் தடுமாறுகின்றன. இரத்தம் கொதிக்கிறது. மூச்சு நின்று விடுவதும் உண்டு. கோபத்தைத் தவிர்க்கலாமே! நெடுநாட்கள் வையத்தில் வாழலாமே!
  9. குழந்தையின் சிரிப்புக்குத் தான் எவ்வளவு வலிமை! அந்தச் சிரிப்பு நமக்கே தெரியாமல் நமக்குள் புகுந்து நம் முகத்தையும் அகத்தையும் மலர வைத்து மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
  10. முடிந்ததைச் செய்யுங்கள். இயன்றதைக் கொடுங்கள். அறிந்ததைக் கற்றுத் தாருங்கள். அறியாததை அறிய முயற்சி செய்யுங்கள். எப்போதும் எல்லோரையும் நேசியுங்கள். வாழ்க்கை இனியது.


 



கருத்துகள் இல்லை: