புதன், 6 மார்ச், 2013

சிந்தனை பத்து - 16


  1. ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல செயலையாவது செய்ய வேண்டும். எவ்வளவு சிறிய செயலாயினும் பரவாயில்லை. எதிரே வரும் மனிதனைப் பார்த்து ஒரு புன்முறுவல், ஒரு குழந்தையை நோக்கி கையசைப்பு, ஒரு பார்வை இழந்த மனிதருக்கு சாலையைக் கடக்க உதவுதல், ஒரு மூதாட்டிக்கு தலைச் சுமை இறக்க கரம் நீட்டுதல், பிளாஸ்டிக் பொருளை குப்பைத் தொட்டியில் போடுதல் என எவ்வளவோ செயல்களைச் சொல்லலாம்.
  2. காலம் நம் கட்டளைக்கு அடி பணியாது. நம் ஆளுகைக்கு அடங்காது. எனவே செய்ய நினைப்பதை இன்றே செய்து விடு. நாளைக்குச் செய்யலாம் என எதையும் ஒத்திப் போடாதே.
  3. நேற்றைய தலைமுறையில் உண்மைக்கும், கண்ணியத்திற்கும், நீதிக்கும், நியாயத்திற்கும் சற்று மதிப்பிருந்தது. தீயன செய்ய அச்சமிருந்தது. ஊரார் என்ன சொல்வார்களோ என்ற தயக்கமும், கூச்சமும் இருந்தது. இன்று எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. கண்ணியம் காலாவதியாகி விட்டது; அச்சம், கூச்சம், தயக்கம் எல்லாம் அந்நியமாகிப் போயின. பலர் பணம் ஈட்டுவதில் முனைப்பாக இறங்கிவிட்டார்கள். பொது வாழ்க்கையில் தூய்மை என்பது கனவாகி காணாமல் போய் விட்டது. நாளைய தலைமுறை என்னவாகுமோ? அச்சமாக இருக்கிறது நினைத்துப் பார்க்க.
  4. எளிமையாகப் புரிய வைப்பதற்கு புதுப்புது வழிகளைக் கண்டுபிடிப்பவரே உண்மையான ஆசிரியராவார்.
  5. மாணவர்க்கு நண்பனாக இருந்து கற்பிக்கும் ஆசிரியரே நல்லதொரு சாதனையாளராகப் போற்றப்படுவார்.
  6. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உண்மையான அரசியலைப் போதித்தால் மட்டுமே தேசம் உருப்படும்.
  7. ஒரு ஆசிரியர் ஒரு மாணவனைக் குறை கூறுவதாக இருந்தால், தனியாக அழைத்துக் கண்டிக்க வேண்டும். பாராட்டுவதாக இருந்தால், பலர் நடுவே பாராட்ட வேண்டும்.
  8. மரங்களை வெட்டி, மழையைத் தடுத்து மண்ணைப் பாழாக்கிப் பாலையாக்கும் எவருமே தேசத் துரோகிகளே.
  9. முதியவர்களைப் புண்படுத்தும் வார்த்தைகளால் குதறாதீர்கள். சில நாட்கள் மட்டுமே வாழப் போகும் அவர்கள் நிம்மதியாய் வாழட்டும். அவர்களின் இறுதிக் காலம் இனிமையாய்க் கழியட்டும்.
  10. உங்களுக்கு முகவரி தந்த பெற்றோர்களை கடைசிக் காலத்தில் முகவரி அற்றவர்களாக்கி விடாதீர்கள்.



   

கருத்துகள் இல்லை: