திங்கள், 26 ஜனவரி, 2015

அன்பென்ற மொழியாலே

வார்த்தைகளால் யாரையுமே பழிக்காதே
வசவுகளால் இதயங்களைக் கிழிக்காதே
நல்லுறவை வன்முறையால் இழக்காதே
நட்புறவை இழிமொழியால் துளைக்காதே

அன்பென்ற மொழியாலே அகிலத்தை இணைக்கலாம்
அறிவிலாப் போர்ப்பூசல் நிகழாமல் தடுக்கலாம்
எல்லோரும் ஓரினமாய் எப்போதும் கூடலாம்
ஏழைபணக் காரரென்ற பேதத்தை ஒழிக்கலாம்

பழிக்குப்பழி என்பதெல்லாம் நல்ல வழியில்லை
பகையுணர்வு கொண்டுவரும் மாளாத தொல்லை
மறக்காதே என்றைக்கும் வள்ளுவனின் சொல்லை
மனிதர்தமை நேசிக்க இல்லையொரு எல்லை

ஏழைக்கு என்றென்றும் நேசம் காட்டு
எதிரிக்கும் நட்புடனே கரத்தை நீட்டு
எவ்வுயிரும் இன்பமுற அன்பை மீட்டு
என்றுமே அன்புவெல்லும் எனும் தமிழ்பாட்டு

சலித்தாலும் சபித்தாலும் துயரங்கள் தீராது
சன்மானம் கொடுப்பதனால் தரித்திரமும் போகாது
எதிர்நின்று போராடி வாழ்க்கையிலே வெல்லலாம்
எண்ணற்ற வெற்றிகளை உழைப்பாலே அள்ளலாம்

முன்னேறத் துடிப்பார்க்கு வேண்டும்நல் முயற்சி
முதுமையிலும் நலமாக தேவையுடற் பயிற்சி
உழைப்போர்க்கு என்றுமுண்டு வாழ்விலே உயர்ச்சி
உண்மையே உரைப்பார்க்கு ஏதிங்கு தாழ்ச்சி?
(வசந்த வாசல் கவிதைச் சிறகுகள்-2015)


  

கருத்துகள் இல்லை: