ஞாயிறு, 5 நவம்பர், 2017

ஈகை என்பது தமிழனின் ஒப்பற்ற பண்பாடு. கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரன் தமிழன். இரப்பவர்க்கு இல்லை என்று சொல்லாதவன். வாரி வழங்கிய வள்ளல்களைப் பற்றி தமிழ் இலக்கியம் கதை கதையாகச் சொல்லும் .
படர்வதற்கு கொழுகொம்பில்லாத முல்லைக் கொடிக்கு தேரீந்தான் பாரி வள்ளல்.
தோகை விரித்து ஆடிய மயிலுக்கு , குளிரில் நடுங்குகிறது என நினைத்து நனைந்த அதன் உடலுக்கு பொன்னாடை போர்த்தினான் பேகன்.
குருசேத்திர யுத்தத்தில் இருதரப்புப் படை வீரர்களுக்கும் பெருஞ்சோறு அளித்தான் உதியஞ் சேரலாதன் என்னும் மன்னன்.
தலையையே கொடுக்கத் துணிந்தான் குமணன்.
இப்படிக் கொடுத்து மகிழ்தலும் விருந்து புரத்தலும் அருந்தமிழ் மன்னர்களின் குணமாய் இருந்தது.
அதியமான் நெடுமானஞ்சி என்றொரு அரசன் தகடூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்தான். விருந்தினர்களை உபசரிப்பதிலே அவனை விஞ்சும் வேந்தர்கள் யாருமில்லை. புன்னகை பூத்த இன்முகத்தோடு தன்னை நாடி வரும் விருந்தினர்களை உபசரிப்பானாம். ஒருநாள் சென்றாலும் ,இருநாள் சென்றாலும், பலநாள் சென்றாலும், தனியாகச் சென்றாலும் பலரோடு சேர்ந்து சென்றாலும் முதல் நாள் எப்படி விரும்பி வரவேற்று உபசரித்தானோ அப்படி எல்லா நாட்களிலும் விருந்தினர்களை முகம் கோணாது அகமலர்ச்சியுடன் அதே விருப்பத்தோடு உபசரிப்பானாம் அதியமான் நெடுமானஞ்சி. இதை அவ்வைப் பாட்டி ஒரு அருமையான பாடலில் அழகாக விவரிக்கிறார்:
                     "ஒரு நாட் செல்லலம்; இருநாட் செல்லலம் ;
                        பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்
                       தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ!
இதுவல்லவோ விருந்து புரத்தல்!
                       

கருத்துகள் இல்லை: