வெள்ளி, 8 டிசம்பர், 2017

கவிதை

கவிதை என்பது கவிஞனின் விதைப்பு.
கவிதை என்பது உணர்ச்சிகள்  ஊர்வலம்.
காலம் கடந்தும் நிற்பது கவிதை.
ஞாலம் செழிக்க முளைக்கும் அதன் விதை.
போர் வாளாகி அநீதி அறுக்கும்.
புரட்சி விதைகளை எங்கும் தூவும்.
புதுமை மலரப் போர்க்கொடி உயர்த்தும்.
புதிய பாதை சமைக்க உதவிடும்.
காதல் துளிர்க்க கைகள் நீட்டும்
அன்பெனும் வீணையை அழகாய் மீட்டும்.
சாதிப் பேய்க்கு சவுக்கடி கொடுக்கும்
சமய வெறிக்கு சவக்குழி தோண்டும்..
கவிதைக்கு என்றும் சாவென்ப தில்லை
சரித்திரமாய் அது நின்று நிலைக்கும்.
பட்டாம் பூச்சி பறக்கும்  கவிதை.
பறையின் முழக்கம் அதிரும் கவிதை..
வானம் எழுதும் வானவில் கவிதை.
மின்னல் என்பது மறையும் கவிதை.
கொட்டும் அருவி இயற்கையின் கவிதை.
இடியின் முழக்கம் புரட்சிக் கவிதை.
நந்தி வர்மனைக் கொன்றது கவிதை.
கம்பன் மகனைக் கவிழ்த்தது கவிதை.
கீரனை எரித்தது சிவனின் கவிதை.
வேலனை ஈர்த்தது அவ்வையின் கவிதை.
சின்னக் குழந்தையின் சிரிப்பொரு கவிதை.
கன்னக் குழியின் அழகொரு கவிதை.
காவிரி நதியின் பாய்ச்சல் கவிதை.
காட்டு அருவியின் வீழ்ச்சியும் கவிதை.
மழலையின் அழுகை மாபெரும் கவிதை.
ஆண்மயில் ஆட்டம் அழைக்கும் கவிதை
குயிலின் இசையோ உருக்கும் கவிதை..
பேரூர் சிற்பம்... பேசாக் கவிதை.
ரவி  வர்மாவின் ஓவியம் கவிதை.

காதலை வளர்க்கும் கவிதை வாழ்க!
மோதல்கள் தடுக்கும் கவிதை வாழ்க!
பாதைகள் போடும்  கவிதை வாழ்க !.
மாதரைப் போற்றும் கவிதை வாழ்க !









கருத்துகள் இல்லை: