செவ்வாய், 14 ஜூன், 2011

இளஞ்சிவப்பு உடையணிந்து...

உலக மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவர் கென்னடி. அவர் படுகொலை செய்யப்பட்டபோது உலகமே சோகத்தில் ஆழ்ந்தது. குறிப்பாக கருப்பின மக்கள் கென்னடி மூலம் தங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என நம்பிக் கொண்டிருந்தனர். கென்னடியின் மரணம் அவர்களை ஏமாற்றத்திற்கும் துயரத்திற்கும் உள்ளாக்கியது. அதன் வெளிப்பாடாக எழுந்த ஒரு அற்புதமான கவிதை தான் “இளம்சிவப்பு ஆடையணிந்து .....” என்ற தலைப்பில் டட்லி ரேண்டால் என்ற புகழ்பெற்ற கறுப்பின கவிஞனின் படைப்பாகும். இசைப் பாடலாகப் பாடப்படும் இந்தப் பாடல் வெளிப்படுத்தும் சோகம் கேட்பவரின் உள்ளங்களை கலங்கடிக்கும் இயல்புடையது. அந்தக் கவிதையின் சாராம்சம் பின்வருமாறு:
மழைநாள் ஒன்றில் மகிழ்வுந்தில் அமர்ந்து
மன்னவன் பயணம் செய்கிறான்.
அது அவனின் இறுதிப் பயணம் !
ஆமாம், அதுதான் அவனின் இறுதிப் பயணம்.
ஆளுநர் அருகே அவன் அமர்ந்திருக்கிறான்.
அரசியும் அவனுடன் பயணம் செய்கிறாள்.

“மூடிய உந்தில் செல்லலாம்” என்று ஆலோசனை சொல்கிறார் ஆளுநர்.
“திறந்த உந்தில் சென்றால் மட்டுமே
கையசைத்து நண்பர்களுடன் பேசிட முடியும்”
என்றே மன்னன் பயணம் தொடர்கிறான்.

ஆர்பரித்த மக்கள் நடுவே ஆனந்தமாக
மன்னனும் அரசியும் பயணிக்கிறார்கள்.
ஆளுநர் சொல்கிறார், “பாருங்கள் வெளியே!
சிரித்தபடி மக்கள் உமை வரவேற்பதை.”

மன்னன் ஆளுநரோட பயணம் செய்கிறான்
அருகில் அரசியும் அமர்ந்திருக்கின்றாள்.
மணமகள் சூடிய ரோஜா மலரின்
இளஞ்சிவப்பு ஆடையை உடுத்திய வண்ணம்.

இளஞ்சிவப்பு ரோஜாவாய் அரசி பவனி வருகிறாள்
எங்கிருந்தோ பாய்ந்து வருகின்றன தோட்டாக்கள்.
இறங்குகின்றன மன்னன் தலையில் இடியாக.
பீறிட்டு பாயும் ஊற்றென ரத்தம் கொப்பளித்தே.
அரசி குனிந்து அன்பனின் தலையை மடிமேல் கிடத்துகிறாள்
இளஞ்சிவப்பாடை ரத்தச்சிவப்பாய் உருமாறியதங்கே!

மன்னன் ஆளுநரோடு பயணம் செய்கிறான்
அருகில் அரசியும் அமர்ந்திருக்கின்றாள்....
அவளின் இளஞ்சிவப்பு ஆடை முழுதும்
ரத்தத்தின் அடர் சிவப்பு நிறம் ஏற்றப்பட்டு!

1 கருத்து:

Sadhu சொன்னது…

மேலும் வாசிக்க....

Do Visit

http://www.verysadhu.blogspot.com/