புதன், 14 மார்ச், 2012

அரும்புகளுக்கு அறிவுரைகள்

சின்னஞ் சிறிய குழந்தைகளே,
தேன்மொழி பேசும் குயிலினமே,
கன்னலின் இனித்திடும் நற்சாறாய்
கவலைகள் தீர்த்திடும் மருந்தமுதே!

நல்லதை என்றும் எண்ணிடுவீர்
நற்செயல் புரிந்தே உயர்ந்திடுவீர்
அல்லதைப் புறத்தே ஒதுக்கிடுவீர்
ஆன்றோர் நல்வழி நடந்திடுவீர்

தேசம் தன்னை நேசித்தே
தினமும் கடமைகள் ஆற்றிடுவீர்
பாசத்துடனே தமிழ் மொழியை
பாங்காய் நாளும் வளர்த்திடுவீர்

கல்வியைக் கண்ணாய்ப் போற்றிடுவீர்
கணினி இயலைக் கற்றிடுவீர்
பல்மொழி ஞானம் பெறுவதனால்
பாரினில் எங்கும் சென்றிடலாம்

எல்லா உயிரும் சமமென்ற
உணர்வை நெஞ்சினில் கொள்வீரே
அல்லா ஏசு ராமபிரான்
அனைவரும் நமக்கு ஒன்றேதான்.

வேண்டாம் நமக்குள் பிரிவினைகள்
வெறுப்பின் வேர்களை அறுத்தெறிவீர்
ஆண்டவன் பேரால் நமக்குள்ளே
அடிதடி நிகழ்தலை தடுத்திடுவீர்.

சொல்லும் செயலும் ஒன்றானால்
சொர்க்கம் நம்முன் உருவாகும்
கல்லும் கூட கனியாகும்.
கனவுகள் எல்லாம் நனவாகும்.

வாழும் நாட்கள் மிகக்குறைவு
வாழ்க்கை நீண்ட கடும்பயணம்
சூழும் தடைகளைப் பொடியாக்கி
சுறுசுறுப்புடனே உழைத்திடுவீர்.

நம்பிக்கை தீபம் எரியட்டும்
நாளைய உலகம் உம்கையில்
தெம்புடன் செயல்கள் புரிந்திடுவீர்
தேசம் தன்னை உயர்த்திடுவீர்.
உடலை நன்கு போற்றுங்கள்
உணவை மென்று தின்னுங்கள்
திடமாய் காரியம் செய்திடுவீர்
துணிவால் நெஞ்சை நிரப்பிடுவீர்.

மரங்களை நட்பாய் மதித்திடுவீர்
மண்ணில் வனங்களைப் பெருக்கிடுவீர்.
விண்மழை இங்கே கொட்டட்டும்
வசந்தம் வாழ்வில் கிட்டட்டும்.

வறுமை தடைஎனல் அறிவீனம்
வாழ்க்கையில் சோம்பல் பலவீனம்
எருமையாய் சோம்பி இருக்காமல்
எருதென உழைத்தால் பிரகாசம்.

தோல்விகள் தொகையாய் படையெடுக்கும்
துவண்டு நின்றால் அடிசறுக்கும்
ஆல்போல் நிமிர்ந்து நின்றிடுவீர்
அடிக்கும் புயலை வென்றிடுவீர்.

அறிவியல் உலகை முன்னேற்றும்
ஆயுதம் முற்றிலும் விலக்கிடுவீர்
வெறிப் போருணர்வை வெறுத்திடுவோம்
வெல்வோம் உலகை அன்பாலே.

உணவைப் பெருக்கும் வழிகாண்போம்
உழைக்கும் மக்களைப் போற்றிடுவோம்
பணம்தான் எல்லாம் என்றெண்ணி
பண்புகள் தம்மை இழக்காதீர்.

புதுப்புது கலைகள் கற்றிடுவீர்
புதுமைகள் பலபல கொணர்ந்திடுவீர்
கற்றலை என்றும் தொடர்ந்திடுவீர்
கடைசி வரைக்கும் படைத்திடுவீர்

ஆயிரம் பட்டங்கள் பெற்றாலும்
அடக்கம் இல்லார் அறிவில்லார்
பணிதல் யார்க்கும் நன்றென்ற
பொய்யா மொழியை மறவாதீர்.

தோல்வியைக் கண்டு துவளாதீர்
துணிந்து நின்றால் வென்றிடலாம்.
ஆல்போல் வாழ்க்கை தழைத்திடுமே!
அகிலாய் எங்கும் மணந்திடுமே!

ஒன்றாய் சேர்ந்து வாழ்ந்திடுவீர்
ஒற்றுமை பலமென உணர்ந்திடுவீர்.
பிரிந்து நிற்றல் பலவீனம்.
பின்னப் படுதல் அறிவீனம்.

கூட்டாய் மேய்ந்த எருதுகளை
கொல்ல முடியலை சிங்கத்தால்.
பாட்டினில் படித்த பாடத்தை
பகுத் தறிவோடு சிந்திப்பீர்.

பழமையில் நல்லதை எடுத்துக்கொள்.
புதுமையை அதனில் குழைத்துக்கொள்.
செழுமையில் வாழ்வு சிறக்கட்டும்.
சாதனை செயலில் பிறக்கட்டும்.

பணவெறி என்றும் நன்றல்ல
பண்புகள் தாமே பெருஞ்செல்வம்.
குணமே என்றும் பிரதானம்.
குற்றம் களைந்து வாழ்ந்திடுவீர்.

பதவி வெறியில் மூழ்காதீர்.
பாவச் செயல்கள் புரியாதீர்..
உதவி கேட்டு வருவோரை
உதறித் தள்ள முயலாதீர்.

ஏசுவைப் போல மானுடத்தை
நேசிக்க வேண்டும் எந்நாளும்.
புத்தனைப் போல வாழ்வினிலே
போக்கிட வேண்டும் பேராசை.

முகமது நபிகள் சொன்னபடி
முயன்று நல்வழி சென்றிடுவீர்.
காந்தி காட்டிய பாதையிலே
காத்திடு வீரே சத்தியத்தை.

முன்னைப் போர்கள் இனிவேண்டாம்.
முயன்று கொணர்வோம் நல்லுறவை.
அன்னை தெரசா அடியொற்றி
அணைப்போம் அன்பால் அகிலத்தை.

முதுமையை என்றும் இகழாதீர்.
முன்னோர் சொற்களைத் தள்ளாதீர்.
அக்கறை அவர்மேல் கொண்டிடுவீர்.
அன்பாய் அவர்களைப் புரந்திடுவீர்.

வீரம் மட்டும் நெஞ்சினிலே
இருந்தால் மட்டும் போதாது.
ஈரம் அதிலே சுரக்கட்டும்.
இரக்கத்தால் அது நிரம்பட்டும்.

ஏழையர் தம்மை எந்நாளும்
அணைத்திட வேண்டும் அன்போடு.
கீழாய் எவரையும் நடத்தாதே
மானுடர் யாவரும் சரிசமமே.

வேர்வை சிந்தி பெறப்பட்ட
ஒவ்வொரு பொருளும் வைரம்தான்.
ஆர்வத்துடனே உழைப்ப தனால்
ஆயிரம் சாதனைப் பூப்பூக்கும்.

மூடப் பழக்கம் ஒழித்திடுவீர்
முட்டாள்தனத்தை மாய்த்திடுவீர்.
பகுத்து அறிவீர் என்றென்றும்;
படைப்பீர் புதிய உலகத்தை.

.

1 கருத்து:

Unknown சொன்னது…

நல்ல அறிவுரைகள் குழந்தைகளுக்கு.