வெள்ளி, 20 ஜூலை, 2012

கோபம் ....கோபம்.....கோபம்

கோபங்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் விதவிதம்.

கண்ணகியின் கோபம்
மதுரையை எரித்தது ;
கூடலனை கூடாக்கியது.
துரோபதையின் கோபம்
குருசேத்திரம் நிகழ்த்தியது.
சிவனின் ரௌத்திரம்
திரிபுரம் எரித்தது;
தக்கனின் யாகத்தை
தவிடு பொடியாக்கியது.

சிலரது கோபம்
வெற்று வெடி போல.
ஏழையின் கோபம்
சபிப்பதோடு முடிவுறும்.

சிலர் கோபத்திலும்
அழகாக இருப்பார்கள்.

மீசை துடிப்பது
ஒரு வகைக் கோபம்.
கண்கள் சிவப்பது
பிறிதொரு வகையாம்.

கோபத்தின் உச்சத்தில்
சிலருக்கு பேச்சு வராது.
சில சமயம்
மூச்சு நின்று விடுதல்
நிகழ்தலும் உண்டு.

சினிமாக் கோபக்காரர்களின்
கண்கள் பிதுங்கும்;
பற்கள் நற  நறக்கும்;
கழுத்து நரம்புகளில்
மின்னல் தெறிக்கும்;

கோபம் இருக்குமிடத்தில்
குணமிருக்கும் என்பது பழமொழி.
பணக்காரனின் கோபம்
சற்றே வலியது தான்.
எது எப்படியாயினும்
சிரித்தபடி கோபப்படுபவன்
சந்தேகமின்றி ஆபத்தானவனே

மனிதனுக்கே கோபமெனில்
படைத்த இயற்கைக்கு
இல்லாமலிருக்குமா
பொல்லாத கோபம்?
கடலின் கோபம் வெள்ளம்.
காற்றின் கோபம் புயல்.
பூமியின் கோபம் நடுக்கம்.

சேர்ந்தாரைக் கொல்லி என்றான்
சினந் தன்னை வள்ளுவன்.
சினப்பதற்கு முன்,மனிதா ,
சற்றிதை நீ சிந்தித்தல் நலமே!  .

கருத்துகள் இல்லை: