வியாழன், 8 ஆகஸ்ட், 2013

சிந்தனை பத்து -19

1. எளியோரை ஏளனம் செய்தலும் வலியோர்க்கு சாமரம் வீசலும்            அறிவுடையோர் செயல் அல்ல.
2. நா காத்தல் இரு வகைப்படும். தீய சொற்களைப் பேசாதிருத்தல் ஒரு வகை.    அளவுக்கு மிஞ்சி உணவுண்ணாமல் நாவைக் கட்டுப்படுத்தல் இரண்டாவது  வகை.
3. இருட்டை விரட்டுகின்றன கதிரோனின் ஒளிக் கதிர்கள். அறியாமையை  நீக்குகிறது கல்வி.
4. அரசை எதிர்த்து தீவிரமாக முழங்கிக் கொண்டிருப்பவர்கள் திடீரென்று  மௌனிகளாகி விட்டால் என்ன பொருள்? பயமுறுத்தப்பட்டிருப்பார்கள்  அல்லது விலை போயிருப்பார்கள்.
5. நம் பகுதிக்கு வருகை தரும் பறவைகளை வரவேற்போம். அப் பறவைகள்  நம்முடைய விருந்தாளிகள். ஓசைகள் எழுப்பி அவற்றை பயமுறுத்த  வேண்டாம். நிம்மதியாகத் தங்கி விட்டுச் செல்லட்டும்.
6. அறிவாளி ஒருவனின் சுதந்திரத்தைப் பறிக்கும் எந்த ஒரு தேசமும்  உயர்ந்ததாக வரலாறு இல்லை.
7. எதை எதிர்பார்த்து மழை பொழிகிறது? மண் எதை எதிர்பார்த்து  விளைச்சலைக் கொடுக்கிறது? காற்று எதை எதிர்பார்த்துக் குளுமையாக  வீசுகிறது? மழை, மண், காற்று போல நாமும் எந்தக் குறியெதிர்ப்பும்  இல்லாமல் பிறர்க்கு உதவி செய்தல் வேண்டும்.
8. தண்ணீர்ப் பற்றாக்குறையின் பொழுது இலைகளை உதிர்த்து விடுகின்றன  மரங்கள். அது போல, வருமானம் குறையும்பொழுது, நாம் தேவையற்ற  ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
9. பலருடைய மன அழுத்தங்களுக்குக் காரணம் அவர்கள் தங்களின்  பிரச்சனைகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளாததே. வாய்விட்டுப்  பேசினால் மனம் லேசாகும். அழுத்தம் அகலும்.
10. நீதி மன்றங்கள் துணிவாகவும், தெளிவாகவும் தீர்ப்புக்கள் வழங்கும்  ஒவ்வொரு முறையும் மக்களாட்சியின் மீது நமக்கு நம்பிக்கை மலர்கிறது.  ஒருவித பாதுகாப்பு உணர்வும் மனதில் விரிகிறது.       

கருத்துகள் இல்லை: