சனி, 29 நவம்பர், 2014

இனியவை கூறல்

இனியவை கூறல்
கனிபோன்ற இன்சொற்கள் விலக்கி நச்சுக்
     காயன்ன கடுஞ்சொற்கள் மொழிவோர் மூடர்.
நுனிநாக்கில் சனிபுகுந்தால் சண்டை மூளும் ;
       நூற்றுக்கு நூறிந்த மூதுரை உண்மை.
தொனியதிலே கடுமையதைச் சற்றே குறைத்துத்
       தோழமையாய் மொழிகின்ற இனிய சொற்கள்
மனமெங்கும் மகிழ்ச்சியதைப் பூக்கச் செய்யும்;
        மனிதத்தை உச்சிக்கே கொண்டு சேர்க்கும்.

நல்லதொரு ஆபரணம் இன்சொல் ஒன்றே ;
          நகைமற்றும் முத்தெல்லாம் வெற்றுப் பொருளே!
இல்லத்தில் ஊர்களிலே தேசம் எங்கும்
          இன்சொல்லே ஒற்றுமையைப் பேணிக் காக்கும்.
கல்லெறிந்தால் உடலினிலே வடுவுண்  டாகும்;
          கடுஞ்சொல்லால் இதயமதோ வெடித்துச் சிதறும்.
சொல்லெல்லாம் அன்புதனைக் கலந்து சொன்னால்
           சொல்வோரும் கேட்பவரும் மகிழ்ந்து சிரிப்பர்.

துன்பம்தரும் வார்த்தைகளைச் செவி மடுப்போர்
             துடிதுடித்தே முகந்திரிவார்; கொடுமை யன்றோ!
இன்பம்தரும் சொற்களையே பேசிடுவோம்.
             இதயத்தை அன்பாலே நிரப் பிடுவோம்.
மன்பதையில் வாழ்கையிலும் மறைந்த பின்னும்
               மகிழ்வூட்டும் இசைபெருக்கும் இன்சொல் லன்றோ!
வன்சொற்கள் என்றென்றும் நட்பை முறிக்கும்.
               வள்ளுவரின் அடிவணங்கி இன்சொல் நவில்வோம்.
         
             
        

கருத்துகள் இல்லை: