ஞாயிறு, 14 நவம்பர், 2004

மரமும் மனிதனும்


மரமும் மனிதனும்

அது வசந்த காலம்.
சாலையோரத்தில் ஒரு அழகான மரம்.
பச்சை இலைகளோடும்,சிவப்புப் பூக்களோடும்
பார்ப்போரின் விழிகளுக்கு விருந்தாகிக் கொண்டிருந்தது.
கோடை வந்தது. வறட்சியின் வன்முறை தொடங்கியது.
நீர் பற்றாக்குறையால் மரம் வாடியது; வதங்கியது.
தேடித் தேடி வேர் கொண்டுவந்த கொஞ்சம் நீரை,
இலைகள் ஆவியாக்கி விடுமோ என்ற அச்சத்தில்,
அவற்றை உதிர்த்து விட்டு, உயிரை தக்க வைத்துக் கொண்டது.
அடுத்து வந்த மழைக் காலத்தில் மரம் தன் வனப்பை
மீட்டுக்கொண்டது.

சாலையின் மறுபுறத்தில் அழகான மாளிகை ஒன்று
அமைந்திருந்தது . ஒரு ஆலை அதிபர் தன் அழகான
மனைவியோடும், கல்லூரியில் படிக்கும் மகன் மற்றும்
மகளோடும் அங்கு வசித்து வந்தார்.
ஏராளமான செல்வம்; தாராளமான செலவு;
ஆடம்பரம் அங்கு கொடிகட்டிப் பறந்தது.
விருந்து, விழா என்று பணம் தண்ணீராகச் செலவழிந்தது.
ஆலையில் பேரிழப்பு ஏற்பட்ட பின்னரும் கூட,
ஆடம்பரம் நின்றபாடில்லை. கடன் வாங்கியாவது
அது தொடர்ந்தது. கடன் சுமை அழுத்த, ஒரு நாள்
ஒட்டு மொத்தக் குடும்பமும் நஞ்சருந்தி மாண்டது.

உயிர் பிழைக்க, இலைகள் கூட ஆடம்பரம் எனக் கருதி ,
அவற்றை தியாகம் செய்யும் மரத்திடமிருந்து,
கடன் வாங்கியாவது ஆடம்பரமாக
வாழ நினைக்கும் மனிதன்,
நல்ல பாடம் படிக்கலாமே !

கருத்துகள் இல்லை: