சனி, 28 ஜூலை, 2012

மலரட்டும் சமத்துவம்

மனிதனை மனிதன் நேசிக்கும்
மகத்துவம் மண்ணில் நிகழட்டும்.
புனிதன் காந்தி வழியினிலே
புதிய உலகம் அமையட்டும்.
இனிமை எங்கும் நிலவட்டும் .
இன்னாச் செயல்கள் ஒழியட்டும்.
கனியாய் வாழ்க்கை எல்லோர்க்கும்
காலம் முழுதும் இனிக்கட்டும்.


பெரியவர் சிறியவர் பேதமில்லை.
பிறவியில் அனைவரும் சரிசமமே.
அரியும் சிவனும் நமக்கொன்றே.
அல்லா ஏசு அது போன்றே.
மரியும் மாரியும் இரண்டல்ல.
மனிதர் தனித்தனி கூறல்ல.
சரிநிகர் சமமாய் வாழ்ந்திடுவோம்
சமத்துவம் எங்கும் மலர்ந்திடவே!

ஆறாம் அறிவைப் பெற்றிருந்தும்
அறிவிலி யாய்சிலர் வாழ்கின்றார்.
தேராச் செயல்கள் புரிகின்றார்.
தேய்ந்து வாழ்வில் உழல்கின்றார்.
மாறா எவர்க்கும் வெற்றியில்லை.
மருந்துக்குக் கூட வளர்ச்சியில்லை.
கூராய் அறிவைத் துணைகொண்டே
குறியாய்ப் பாரில் உயர்ந்திடுவோம்.

எத்தனை செல்வம் குவித்தாலும்
என்றும் பணிவு நன்றாகும்.
நித்திரை நீங்கி செயல்பட்டால்
நிம்மதி நாட்டில் பூப்பூக்கும்.
இத்தரை முழுதும் இனிதாகும்;
இன்மை என்பது அரிதாகும்.
பத்தரை மாற்றுப் பொன்னாக
பாரினில் தேசம் ஒளிர்ந்திடுமே!

கடந்தது போகட்டும் விட்டுவிடு.
கண்ணீர் வடித்து என்னபயன்?
நடப்பது நன்றாய் அமையட்டும்.
நாசங்கள் அடியோடு  ஒழியட்டும்.
அடக்கமா யிருப்பதில் தவறில்லை.
அடிமையா யிருப்பதே அவமானம் .
ஒடித்திடு தடைகளைக் காலத்தே.
உயர்ந்திடு உலகில் எப்போதும்!
 


கருத்துகள் இல்லை: