ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

நன்றாகக் கற்றுக் கொடுங்கள்

எல்லோரும் கடிதம் எழுதுகிறார்கள்.அவற்றில் பல படித்து முடித்ததும் கிழித்து வீசப்படுகின்றன.ஆனால்,சில கடிதங்கள் என்றும் சாகாத இலக்கியங்களாக சரித்திரத்தில் பதிவு செய்யப்படுகின்றன.அப்படிப்பட்ட ஒரு கடிதத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்து வாசகர்களுக்குத் தருவதில் மகிழ்வுறுகிறேன்.அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய அற்புதக் கடிதம் அது.ஆசிரியர்கள் அனைவரும் படித்துப்  பின்பற்ற வேண்டிய கற்பித்தல் தத்துவம்.

"எல்லா மனிதர்களும் நியாயவான்கள் அல்ல;எல்லா மனிதர்களும் வாய்மையாளர்கள் அல்ல என்பதை அவன் கற்றுக் கொள்ளட்டும் .

சுயநலமே உருவான ஒரு அரசியல்வாதிக்குக் கூட அர்ப்பணிப்பு உணர்வுள்ள தலைவன் இருக்கக் கூடும் என்பதையும் ஒரு கயவனுக்குக் கூட கதாநாயகன் இருக்கக் கூடும் என்பதையும்,அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

ஒவ்வொரு பகைவனுக்கும் ஒரு நண்பன்  இருக்கிறான் என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

தானாகக் கிடைக்கும் ஐந்து டாலர்களைக் காட்டிலும் உழைத்துப் பெறப்படும் ஒரு டாலர் அதிக மதிப்புள்ளது என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

இழப்பதற்கு அவன் கற்றுக் கொள்ளட்டும்.அதே  சமயத்தில் வெற்றிகொள்வதில் உள்ள மகிழ்ச்சியை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளட்டும்.

பொறாமைத் தீயிலிருந்து அவனை நெடுந்தொலைவு தள்ளிச் செல்லுங்கள்.அமைதியான சிரிப்பு என்னும் ரகசியத்தை அவனுக்குப் புகட்டுங்கள்.

அடக்கியாள்பவன் வெகு சுலபமாக அடிமையாகி விடுவான் என்பதை அவனுக்குத் தொடக்கத்திலேயே கற்றுக் கொடுங்கள்

புத்தகங்களின் அற்புதத்தை அவனுக்குக் காட்டுங்கள்.அதே சமயத்தில்,வானில் பறக்கும் பறவைகள்,சூரிய ஒளியில் நனையும் தேன் ஈ க்கள்,மலையோரத்துப் பூக்கள் ஆகியன பற்றிய முடிவற்ற ரகசியங்களைச் சிந்திப்பதற்கு நேரத்தை ஒதுக்குங்கள்.

ஏமாற்றிப் பிழைத்தலை விட தோல்வியுறுதல் பெருமைக்கு உரியது என்பதைப் பள்ளியில் அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

தன்னுடைய கருத்துக்களில் முழு நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள் ----எல்லோரும் ஒட்டு மொத்தமாக அவை தவறு எனக் குற்றம் சாட்டினாலும் கூட

ஒரு பெரும் கூட்டத்தை கண்மூடித்தனமாகப் பின்பற்றிச் செல்லாதிருப் பதற்கான வல்லமையை அவனுள் ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள்.

எவர் சொல்வதையும் செவிமடுக்கக் கற்றுக்  கொடுங்கள்..ஆனால்கேட்டவற்றை உண்மை எனும் திரையில் வடித்தெடுக்கவும் கூடவே கற்றுக் கொடுங்கள்

துயரமான பொழுதுகளில்  சிரிப்பதற்கு அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.கண்ணீர் வடிப்பதில் அவமானம் ஏதுமில்லை என்பதையும் தெரியப்படுத்துங்கள்.

எதிலும் எப்பொழுதும் குறை காண்பவர்களைப் பரிகசித்து ஒதுக்கவும் அளவுக்கு மீறி இனிப்பாகப் பேசுவோரிடம் எச்சரிக்கையாக இருக்கவும் கற்றுக் கொடுங்கள்.

அதிக விலை நிர்ணயிப்போருக்கே உடல் வலிமையையும் மூளையையும் விற்க வேண்டும் என அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள்.அதே சமயத்தில் அவனுடைய இதயத்திற்கும் ஆத்மாவிற்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்துங்கள்.

வெறுமனே ஊளையிடும் கூட்டத்தின் முன் காதுகளை இறுக மூடிக் கொள்ளவும் சரியான ஒன்றுக்காக துணிவோடு போராடவும் அவனுக்கு வழிகாட்டுங்கள்.

மென்மையாகச் சொல்லிக் கொடுங்கள்.அதற்காக அவனை ஆரத் தழுவிக் கொஞ்ச வேண்டும் என்பது அவசியமில்லை.ஏனென்றால் நெருப்புச் சோதனையில் தான் அருமையான இரும்பு உருவாக முடியும்.

விரைந்து செயல்படுவதற்கான துணிவை அவன் பெறட்டும்.அதே சமயத்தில் துணிவாக இருப்பதற்கான பொறுமையையும் சேர்த்தே அவன் பெறட்டும்.

எப்பொழுதும் தன் மீது உயர்ந்த நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்---அப்பொழுது தான் அவனால் மானுடத்தின் மேல் அபார நம்பிக்கை வைக்க முடியும்.
.
.

 .

.

   

கருத்துகள் இல்லை: