வெள்ளி, 11 செப்டம்பர், 2009

கிரேண்ட் கேன்யன்


கிரேண்ட் கேன்யன்,
நீரும் வளியும்
குளிரும் வெப்பமும்
கல்லையும் மண்ணையும்
கடைந்தும் கரைத்தும்
எழுதிய அற்புதம்!
உலக மகா அதிசயம்!
இயற்கை படைத்த
எழில் மிகு காவியம்!

வெறி பிடித்த
கொலராடோவின்
திமிர் பிடித்த வெள்ளம்
வடித்தெடுத்த
வண்ணக்காட்சிதான்
கிரேண்ட் கேன்யன்!

செம்மாந்து நிற்கும்
செங்குத்துப் பாறைகள் நடுவில்
ஆழ ஆழமாய்
பள்ளத்தாக்கு........
அதற்குள்ளே
நீலப் பெரும்பாம்பாய்
வளைந்து வளைந்து
விரைந்து ஓடும்
கொலராடோ நதி!

எத்தனை விதமாய்
பாறைகள்.
காலங்காலமாய்
இயற்கையின்
இடைவிடாத செதுக்கலில்
எத்தனை விதமாய்
வடிவங்கள்!
வடிவத்திற்கு ஏற்ப
வைக்கப்பட்ட பெயர்கள்!
அமெரிக்கப் பாறைகளில்
இந்தியக் கடவுளரை
செதுக்கியுள்ள
இயற்கையின் விளையாட்டை
என்னென்று நாம் சொல்ல!
குளிர் காலம்
பாறை உச்சிகளில்
பனிப் பூக்களால்
முடி சூட்டி மகிழும்!

உதயத்தின் பொழுதும்
மறையும் பொழுதும்
கிரணக் கற்றைகளை
கிரேண்ட் கேன்யனில் தெளித்து
பாறை முகடுகளில்
சூரியன் செய்யும்
வர்ண ஜாலங்களை
வார்த்தைகள் கொண்டு
வர்ணிக்க முடியாது.
இருண்ட அதன் ரகசியங்களை
கொஞ்சம் கொஞ்சமாக
வெளிக் கொணரும்
காலைக் கதிரவனின்
கலை விளையாட்டை
ரசிப்பதற்கென்று
வெவ்வேறு நாடுகளிலிருந்து
வித விதமாய் மனிதர்கள்!

வானமும் வளியும்
ஞயிற்றின் ஒளியும்
மண்ணும் காலமும்
மழை நீர் பெருக்கும்
ஒன்றிணைந்த
பேரானந்தப் பெருவெளி தான்
கிரேண்ட் கேன்யன்!

மனிதன் அமைத்ததல்ல-
மயன் சமைத்ததல்ல-
யாருடைய ஆணைக்கும்
அடங்காமல்
எவ்விதத் திட்டமும்
இல்லாமல்
யுக யுகங்களாக
இயற்கை பாடிய
இணையற்ற காவியமே
கிரேண்ட் கேன்யன்!

ஆறு மில்லியன் ஆண்டுகள்
வரலாறு கொண்ட
கிரேண்ட் கேன்யனின்
ததும்பி வழியும் அழகையும்
தன்னில் ஒளித்து வைத்திருக்கும்
இரகசியங்களையும்
ஒரு நாளில் பார்த்து
சொல்லவும் முடியாது......
ஒரு பக்கத்தில் எழுதி
புரிய வைக்கவும் முடியாது!

[ 2004 அக்டோபர் 29 மாலையிலும் 30 காலையிலும்
மனைவி, மகன், மருமகள் ஆகியோருடன்
கிரேண்ட் கேன்யனை ரசித்த பொழுது மனதில்
கிளர்ந்த உண்ர்வுகளின் பதிவுகளே
மேற் கண்ட வரிகள் ]

கருத்துகள் இல்லை: