சனி, 5 செப்டம்பர், 2009

காதலின் தத்துவம்

ஊற்றுகள்
நதிகளோடு
சங்கமிக்கின்றன.
நதிகள்
கடலோடு
ஐக்கியமாகின்றன.
வானத்திலுள்ள
வாயுக்கள் அனைத்தும்
இனிமையான
உணர்ச்சிப் பெருக்கில்
என்றென்றும்
ஒன்றோடொன்று
கலக்கின்றன.
உலகத்தில்
தனித்ததென
ஒன்றுமேயில்லை.
எல்லாப் பொருள்களும்
ஒரு புனித விதியின் கீழ்
ஒன்றையொன்று
சந்தித்து
ஒன்றாகக் கலக்கின்றன.
நான் மட்டும்
ஏன்
உன்னோடு
கலத்தல் கூடாது?
நன்றாகப் பார்,
அந்த மலைகள்
வான் முகட்டை
முத்தமிடுவதையும்
இந்தக் கடலலைகள்
ஒன்றோடொன்று
பின்னிப் பிணைவதையும்.
மன்னிக்கப் படுவதேயில்லை
எந்தப் பூவும்
சகப் பூவை
வெறுக்கும் பட்சத்தில்.
பூமியை
இறுகப் பற்றுகிறது
ஞாயிற்றின் ஒளி வீச்சு.
கடலை
முத்தமிடுகிறது
சந்திரனின்
கிரணக் கற்றை.
இனிய இந்த
வேலைகளுக்கெல்லாம்
என்ன மதிப்பு,
என்னை
நீ
முத்தமிடாவிட்டால்?

ஆங்கில மூலம்:ஷெல்லி
தமிழில் பெயர்ப்பு:ஜகன்

கருத்துகள் இல்லை: