புதன், 19 செப்டம்பர், 2012

வெண்பாக்கள்

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகள்,எழுபதுகளில் இலக்கிய இதழ்களில் வெண்பாப் போட்டிகள் நடைபெற்றன.குறிப்பாக கண்ணதாசனின் தென்றல் இதழில் வெளிவந்த வெண்பாக்கள் தரம் வாய்ந்தவை.தமிழக அரசின் தமிழரசு மாத இதழில் வரும் வெண்பாப் போட்டியில் நானும் என் நண்பர் சண்முகசுந்தரம் அவர்களும் கலந்து கொள்வது உண்டு.ஒன்றிரண்டு தடவை எங்கள் பாக்கள் வெளியிடப்பட்டு,நாங்கள் பரவசப்பட்டதுண்டு.
                         ஒரு தடவை கனிச்சோலை என்ற இதழில் வெண்பாப் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.'மன்னிப்பே இல்லை உனக்கு' என்ற ஈற்றடிக்கு வெண்பா எழுத வேண்டும்.வழக்கம்போல்நானும் நண்பரும் எழுதி அனுப்பினோம்.அடுத்த இதழில் பத்து வெண்பாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நடுப்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தன.நண்பரின் வெண்பா வெளியிடப்பட்டிருந்தது.ஆனால் என் வெண்பாவைக் காணோம்.சிறிது ஏமாற்றமாக இருந்தது.மெல்ல புத்தகத்தைப் புரட்டினேன்.என்ன ஆச்சரியம்!நடுப்  பக்கத்தில் என் வெண்பா முத்திரைக் கவிதையாக ஒரு இலக்கிய அணிந்துரையுடன் இடம் பெற்றிருந்தது.
                          பல ஆண்டுகளுக்கு முந்தைய 'தமிழரசு' இதழ் ஒன்றை ஞாபகார்த்தமாக பாதுகாத்து வருகின்றேன்.சில நாட்களுக்கு முன்னால் அதில் இருந்த வெண்பாக்களை பார்வையிட்டேன்.அந்த வெண்பாக்களில் ஒன்று இன்று கவிப்பேரரசர் என்று உலகெங்கும் அறியப்படும் அன்றைய வைரமுத்து அவர்களால் எழுதப்பட்டிருந்தது.மகிழ்ச்சியாக இருந்தது.
                           நான் எழுதிய மூன்று வெண்பாக்கள் பின்வருமாறு:

                  பதியில்லை;கைம்பெண்நான்;பாழும் உலகில்
                  விதியென்று நானிருந்தேன்; ஆனால் --சதிநிலவே
                   இன்னுமெனை நீவேறு வாட்டிநின்றால்,உண்மையாய்
                   மன்னிப்பே யில்லை யுனக்கு.
                                                               [கனிச்சோலை---ஜூலை 1970]
                    பொட்டில்லை;பூச்சூடச் சுற்றத்தார் ஒப்பவில்லை;
                     கட்டினேன் காரிகைக்குப் பொற்றாலி -சுட்டெடுத்த
                     ஆணிப்பொன் பூமுகத்தில் ஆனந்தப் புன்முறுவல்
                      காணக் குளிர்ந்ததே கண்.
                                                                [தமிழரசு ....நவம்பர் 1970]
                       எல்லா நலத்துடனும் ஏற்றம் பலவுற்று
                        வல்லார் மிகச்சிலரே வாழ்கின்றார் - பல்லோர்
                        தலைக்கெண்நெய் இல்லாது தாழ்கின்றார்;இந்த
                        நிலையை ஒழிக்க நினை.
                                                                 [தமிழரசு 16.08.1971]

                

கருத்துகள் இல்லை: