திங்கள், 17 செப்டம்பர், 2012

காஞ்சி வேந்தே!வாழி!வாழி!

செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்.அவர் தலை சிறந்த பேச்சாளர்;ஈடு இணையற்ற எழுத்தாளர்.தமிழ்,ஆங்கிலம் இரண்டிலும் முத்திரை பதித்தவர்.இறுதி வரை படித்துக் கொண்டே இருந்தவர். .பத்திரிக்கையாளர்.நாடக நடிகர்.அரசியலாளர்.பன்முகம் கொண்ட அந்த மனிதாபிமானி இன்று நம்மிடையே இல்லை.எனக்குள் தமிழின் பால் சாகாத காதலை தோற்றுவித்த அந்த மாமனிதனை நினைவுகூர என்றோநான் எழுதிய ஒரு கவிதையை இங்கு சமர்ப்பிக்கிறேன்.கவிதை பின்வருமாறு:

                நூலென்றால் தமிழர்க்குக் குறளாம்;அமுத
                     மொழியென்றால் உயர்தமிழே முன்னே நிற்கும்!
                 பாலென்றால் பசும்பாலே சிறப் புடைத்து!
                      பழமென்றால் இனிக்கின்ற மாவீன் கனியே!
                  ஆறென்றால் காவிரிதான் பாய்ந்து வரும்!
                       அன்பென்றால் அண்ணாவின் அன்பே அன்பு!
                   ஊரென்றால் காஞ்சியைத்தான் ஒப்புக் கொள்வோம்!
                        உறவென்றால் அண்ணாதான் உயர்ந்து நிற்பார்!

                 ஏர்பிடித்து உழுகின்ற உழவர் மக்கள்,
                        ஏற்றமிகு தொழிலாளர்,புலமை மிக்கார்,
                   பார்வியக்கும் தமிழகத்து இளைஞர் கூட்டம்,
                         பைந்தமிழின் நல்லழகுப் பெண்டி ரெல்லாம்
                   கார்ஒக்கும் கலைவல்லார் காஞ்சி வேந்தை
                          கவின்தமிழாள் பெற்றெடுத்த ஆணிப் பொன்னை
                    ஆர்க்கின்ற அன்புடனே வாழ்த்து கின்றார்!
                          அறிஞர்புகழ் தொல்லுலகில் வாழி!வாழி!
                                                         [மாலைமுரசு 15.09.1970]

                  

கருத்துகள் இல்லை: