திங்கள், 17 செப்டம்பர், 2012

சாதனை நாயகர் பெரியார்

இன்று செப்டம்பர் 17.மனிதர்களுக்கு முகவரி தந்த மாமேதை தந்தை பெரியார் பிறந்த நாள்.மதமும் சாதியும் மனிதர்களை அவமதித்தபொழுது அதற்கு எதிராக எரிமலையாய்க் கிளர்ந்து  எழுந்தவர் பெரியார்.கல்லூரியில் படித்துப் பட்டம் பெறாவிட்டாலும் ஒரு சமூகப் போராளியாய் அவர் புரிந்த சாதனைகள் இன்று பல பேராசிரியர்களின் ஆராய்ச்சிப் பட்ட மேற்படிப்புக்கு பாடப் பொருளாகத் திகழ்கின்றன.மூச்சடங்குகிற வரையிலும் தமிழ் மண்ணெங்கும் சூறாவளியாய் சுற்றி தன்மான முழக்கம் செய்த தந்தை பெரியாரை நினைவுகூர என்றோ எழுதிய ஒரு கவிதையை வாசகர்களுக்கு முன்னர் வைக்கிறேன்.கவிதை பின்வருமாறு:

               அறியாமைக் கருக்கிருட்டில் அமிழ்ந்திருந்த தமிழர்களை
                    அறிவென்னும் வெளிச்சத்தால் விடுவித்த ஆதவன் நீ!
                வறியாராய்க் கடுந்துயரில் வதையுண்ட ஏழையரை
                      வாழவைக்க இங்குதித்த வண்ணத்தமிழ் மன்னன் நீ!
                  பறிபோன பழந்தமிழர் பண்பாட்டு மேன்மைதனை
                       பக்குவமாய் மீட்கவந்த பைந்தமிழர் தோழன் நீ!
                  சரியாத தமிழ்மொழியை சாகின்ற கணம்வரைக்கும்
                         சலிக்காமல் ஒலித்திட்ட சாதனையின் நாயகன் நீ!

                    சாதியென்ற சவக்குழிக்குள் சரிந்திட்ட மக்கள்தமை
                         சரிசெய்து எழவைத்து சரித்திரத்தில் இடம்பெற்றாய்!
                     நாதியில்லா நடைப்பிணமாய் நலிவுற்ற பாமரர்க்கு
                          நல்லவழி காட்டுதற்கு நாளெல்லாம் பாடுபட்டாய்!
                      ஆதிமகன் வள்ளுவனின் 'பிறப்பொக்கும் உயிர்க்' கென்ற
                           அழியாத வேதத்தை எல்லோர்க்கும் போதித்தாய்!
                       'நீதிஎலாம் பொது'வென்ற நிறைமொழியின் சத்தியத்தை
                            நின்றொளிரும் தத்துவமாய் இங்கெமக்கு நீ தந்தாய்!
                                                   [தினகரன் 17.09.2003]
                     
                     

கருத்துகள் இல்லை: