புதன், 27 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து- 11


  1. எவ்வளவுதான் மனதிற்குக் கடிவாளமிட்டாலும், சிலரைப் பார்க்கும்பொழுது வெறுப்புணர்வு பெருக்கெடுக்க ஆரம்பிக்கிறது. தவறு எனத் தெரிகிறது. ஆனால் தடுக்க முடியாமல் தத்தளிக்கிறோம். இன்னமும் நம் மனங்கள் பக்குவப்படவில்லை. இன்னும் நாம் நம் மனங்களை அதிகப்படியான அன்பால் நிரப்பிக் கொள்ள வேண்டியுள்ளது.
  2. யோகா பயில்கிறார்கள்; தியானம் செய்கிறார்கள்; நீதி நூல்கள் படிக்கிறார்கள்; உபதேசம் கேட்கிறார்கள். ஆனாலும் அவர்களால் சினத்தை அடக்குவதற்கு முடியவில்லை. பெற்ற பயிற்சியால் பயன் என்ன?
  3. எதிலும் குறை காண்பதும், எதையும் எதிர்மறையாய் அணுகுவதும் நல்ல உறவுக்கு வழி வகுக்காது.
  4. உறவுச் சிதைவுக்குக் காரணம் அதிக எதிர்பார்ப்புகள், புரிதல் இல்லாமை, விட்டுக் கொடுக்காமை மற்றும் மனம் விட்டுப் பேசாமை.
  5. படித்தால் மட்டும் போதாது; படித்ததைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுதலும், அதன்படி நடத்தலும் மிக மிக முக்கியம்.
  6. சண்டை போட்டுக் கொள்வது மிகவும் சுலபம். சமாதானமாக வாழ்தல் கடினம். அசாத்தியமான பொறுமையும், மனப் பக்குவமும் இருந்தால் மட்டுமே பின்னது சாத்தியமாகும்.
  7. தோண்டினால் பூமி பொறுத்துக் கொள்கிறது. மாறாக, நீர் தருகிறது; கனி வளங்களை வாரி வழங்குகிறது. பூமியிடமிருந்து நாம் நிரம்பக் கற்றுக் கொள்ள வேண்டும்.
  8. மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாதவன் வாழ்வில் ஏமாற்றங்களே மிஞ்சும்.
  9. சிறியது என்று எதையும் இகழாதே. சிறியதிலும் சிறந்தது இருக்கக் கூடும்.
  10. ' இல்லையே' என ஏங்காதீர். உம்மிலும் ' இல்லாரை' எண்ணிப் பார்த்தால், உங்கள் ஏக்கம் விலகும்.

  

கருத்துகள் இல்லை: