திங்கள், 11 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து-4


  1. உன்னிடம் இருப்பதே உனக்குப் போதும். மற்றவனோடு ஒப்பிட்டுப் பார்த்துப் பொறாமைப்பட்டால், அது மனநலக் கேட்டுக்கு இட்டுச் செல்லும்.
  2. மரம் மழை தருகிறது. நிழல் தருகிறது. மண் காக்கிறது. பறவைகளுக்கு வீடாகிறது. பயணிகளுக்கு நிழற்குடையாகிறது. நட்புணர்வோடு நம்மைப் பார்த்து புன்னகைக்கும் மரத்தை வெட்டலாமா?
  3. இலட்ச, இலட்சமாய் செலவழித்து சாலை அமைக்கிறார்கள். அது நம் சாலை. நமது வரிப் பணத்தில் அமைக்கப்பட்டது. அதில் கட்சிக் கொடிகள் நடவும் அலங்கார வளைவுகள் அமைக்கவும் குழி தோண்டி சாலையைச் சிதைக்கிறோம். இது நியாயமா?
  4. எச்சில் துப்பி, குப்பை கொட்டி பொது இடங்களை அசுத்தம் செய்பவர்களை கடுமையான சட்டங்கள் மூலம் திருத்துவதில் தவறேதுமில்லை.
  5. சொல்லித் திருந்தாத சில பிறவிகள் கடுமையான சட்டங்களுக்கும் தண்டனைகளுக்கும் மட்டுமே அச்சப்படுவார்கள்.
  6. நல்ல நண்பர்களைப் பார்க்கும்பொழுது, பேசும்பொழுது, சுக, துக்கங்களை அவர்களோடு பகிர்ந்துகொள்ளும் பொழுது நமது கவலைகள் எல்லாம் கதிரொளி பட்ட காலைப் பனி போல் ஓடி ஒளிந்து கொள்கின்றன.
  7. உண்மையான நட்பு சாதி,மத,இன வேற்றுமைகள் பார்க்காது. ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வுகள் அதற்கு இல்லை.துன்பத்திலும்,இன்பத்திலும் தொடர்ந்து வரும்.
  8. ஒவ்வொரு முறை உங்களுக்கு இலாபம் கிட்டும் பொழுதும் அதில் ஒரு சிறு பகுதியை நோயாளிகளின் மருத்துவத்திற்காகவோ, ஏழைகளின் கல்விக்காகவோ ஒதுக்குங்கள். உங்களைச் சுற்றி ஒரு நல்ல சமூகம் உருவாக அது வழிவகுக்கும்.
  9. நீங்கள் எப்பொழுதும், எதிலும் ஒரு நல்ல முன்னுதாரணமாகத் திகழ்ந்தால், உங்கள் குழந்தைகள் நல்ல குடிமக்களாக உருவாவர்.
  10. சோதனைகள் வரும் பொழுது வேதனைப்படுவது விவேகமல்ல. அவற்றிலிருந்து மீள்தல் பற்றிய வழிகளை யோசிப்பதே அறிவுடைமை.  

கருத்துகள் இல்லை: