சனி, 23 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து-8


  1. திறந்து வைக்கப்பட்டுள்ள சாக்கடைகளில் பிளாஸ்டிக் காகிதங்கள், பைகள் போன்ற வேண்டாத பொருள்களைப் போடுபவர்கள் சமூகக் குற்றவாளிகள்.  மழைக் காலங்களில் சாக்கடைகள் அடைபடுவதால் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு அவர்களே காரணம்.
  2. சாதாரணமாகச் சொன்னாலோ அல்லது வேண்டிக் கொண்டாலோ யாரும்  எதையும் காதில் வாங்கிக் கொள்வதில்லை. அதனால் தான் கண்ணதாசன்  "ஜனநாயகத்தை விடுத்து, சற்றே கையில் சவுக்கு எடுப்போம்" என்று பாடிச் சென்றார்.
  3. தேர்தல் முடிந்ததும் வெற்றி பெற்றவர்களை தோல்வியுற்றவர்கள் வாழ்த்த வேண்டும். வெற்றியாளர்கள் அடக்கத்தோடு எல்லோரையும் பாகுபாடின்றி  நடத்த வேண்டும். கட்சி வேறுபாடுகளைத் தாண்டி ஒருவர்க்கொருவர்  பிறந்த நாள் வாழ்த்துக் கூற வேண்டும். எல்லோரும் எல்லோர் வீட்டு  விழாக்களிலும் கலந்து கொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் வருமா அந்த  நயத்தக்க நாகரிகம்?
  4. பரிணாம வளர்ச்சியில் மனிதன் என்ன தான் புறத் தோற்றத்தில் விலங்குகளிடமிருந்து மாறுபட்டிருந்தாலும், அவனின் உள் மனதில் இன்னும் விலங்கு உணர்வுகளே நிரம்பியுள்ளன.
  5. ஆசை போட்டியை ஏற்படுத்துகிறது; பொறாமையை வளர்க்கிறது; வெறுப்பை  உருவாக்குகிறது; மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. முடிவில் மன அமைதி  வெளியேறுகிறது; உடல் நலம் கெடுகிறது; வாழும் நாட்கள் குறைகின்றன. அதனால் தான் அன்றே புத்தன் சொன்னான், 'ஆசையை ஒழி' என்று.
  6. நேர்மறையாக எண்ணுங்கள். மனிதர்கள் யாவரும் நல்லவர்கள்.    இனியவர்கள். உங்கள் தோழர்கள். ஐயக் கண்ணால் யாரையும் பார்க்காதீர். யாவரையும் அன்போடு அணுகுங்கள். சூழ்நிலைத் தவறுகளை பெரிய  மனதோடு மன்னியுங்கள். புல், பூண்டு முதல் மனிதர் வரை எல்லோரையும்  நேசியுங்கள். உலகம் மகிழ்ச்சியாக இருக்கும்; வாழ்க்கை வசந்தமாய்  சிரிக்கும்.
  7. மழையைக் கண்டு மகிழாதவன் நெஞ்சில் ஈரமில்லாதவன்.
  8. நாள் முழுதும் உண்மையாக உழைப்பவன் மட்டுமே உண்ணவும் உறங்கவும்  தகுதி உடையவன்.
  9. தவறு செய்வது மனித இயல்பு. அதே தவறைத் திரும்பத் திரும்பச் செய்வது அறிவுடைமை அல்ல.
  10. மழைக்காக உழவன் இறைவனை வேண்டுகிறான். மண்பானை செய்பவனோ மழை பெய்யக் கூடாது என இறைஞ்சுகிறான். என்ன செய்வான் இறைவன், பாவம்!

 
    

கருத்துகள் இல்லை: