வியாழன், 14 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து-6


  1. எடுத்தேன்;கவிழ்த்தேன் என்று செயல்படுதல் சர்வாதிகாரம்; நடைமுறைக்கு  ஒத்து வராத நாகரிகமற்ற ஆட்சி முறை.
  2. ஆசிரியர்களே! ஒரு குழந்தை வீட்டு வேலை செய்து வராவிட்டால் வானம் இடிந்து, விழுந்து  விடப் போவதில்லை. தண்டனைகள் மூலம் இளந்தளிர்களைக் கருக்கி விடாதீர்கள். அன்பு மூலம் மட்டுமே ஒரு குழந்தையை நம் வழிக்குக் கொண்டுவர இயலும்.
  3. மனிதப் பிறவி மிக உயர்ந்தது. ஆடு,மாடுகளைப் போல சாலையிலே அடிபட்டுச் சாவதற்காக நாம் இம்மண்ணில் பிறக்கவில்லை. செயற்கரிய செய்யும்பொருட்டு பிறந்திருக்கிறோம். எனவே எச்சரிக்கையோடும், பாதுகாப்பாகவும் இருங்கள். உங்கள் குழந்தைகளையும் அவ்வாறு வாழக் கற்றுக்கொடுங்கள். உங்களை நம்பி உங்கள் குடும்பத்தில் பல பேர்கள் கனவுகளோடு காத்திருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
  4. நீ என்னவாக வேண்டுமானாலும் ஆவது உனது விருப்பம்; உனது உரிமை. பொறியாளர், மருத்துவர், வியாபாரி, விஞ்ஞானி, தொழிலதிபர், தொழிலாளி, ஓட்டுனர் இவற்றில் எது என்றாலும் சரியே. தேர்ந்து எடுத்த துறையில் திறமைசாலியாக இரு. அது தான் முக்கியம்.மற்றபடி, செய்யும் தொழிலில் கீழானது, மேலானது என்று எந்த வேற்றுமையும் இல்லை.
  5. எதிர்மறையாக எதைச் சொன்னாலும் அதைச் செய்து பார்க்க முனைவது குழந்தைகளின் இயல்பு. எனவே முடிந்தவரை குழந்தைகளிடம் எதிர்மறையாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.
  6. குழந்தைகள் அப்பா,அம்மாவை உயர்வாகக் கருதுகிறார்கள். எனவே அவர்களுக்கு முன்னால் பெற்றோர்கள் எந்தத் தவறும் செய்யக் கூடாது. குறிப்பாக,சண்டை போட்டுக் கொள்ளல் கூடாது.
  7. எப்போதும் நல்லவர்களுடன் இருங்கள். சில தற்காலிக சில்லரை லாபங்களுக்காக தீயவர் பக்கம் சாயாதீர்கள். அது, உங்களுக்கும் நல்லதல்ல; உங்களை உள்ளடக்கிய சமூகத்திற்கும் நல்லதல்ல.
  8. பணிவாக இருங்கள். பாசமாகப் பழகுங்கள். இனிமையாகப் பேசுங்கள். எல்லோரும் உங்களை நேசிப்பார்கள்.
  9. அதிகாரத்தைப் பயன்படுத்தி சில தற்காலிக வெற்றிகளை அடையலாம். அன்பினால் மட்டுமே நிரந்தர வெற்றிகளை ஈட்ட முடியும்.
  10. பெரும்பான்மையான மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள். ஆனாலும், ஒரு சில சுயநலவாதிகள் அவர்கள் மீது வன்முறையைத் திணிக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: