ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து-7


  1. உருப்படாதவன் என்று யாருக்கும் அவசரப்பட்டு பட்டம் சூட்டி விடாதீர்கள். அவனுக்குள்ளும் ஏதாவது திறன் ஒளிந்து இருக்கலாம். அதைக் கண்டறிந்து அவனுக்கு முறையான பயிற்சி அளித்தால், அவன் உயர்நிலைக்கு வருவான். சற்று காலம் பிடித்தாலும் முயற்சியைக் கைவிடாது தொடர்ந்து உழைத்தால்  வெற்றி நிச்சயம்.
  2. அடித்தாலும், இடித்தாலும், ஏளனம் செய்தாலும், எள்ளி நகையாடினாலும், வாய்க்கு வந்தபடி வசைமாரி பொழிந்தாலும் கொண்ட கொள்கையிலிருந்து  பிறழாமல் உண்மை வழியில் நடப்பதன் பெயர்தான் காந்தியம். 
  3. நம்மால் செயல்படுத்த முடியவில்லை என்பதற்காக நீதி நெறிகளை கேலி செய்தல் என்பது அறிவுடைமை அல்ல. நம்மை அளவீடாகக் கொண்டு நாமே உலகத்தை அளத்தல் ஒப்புக்கொள்ளத் தக்கதல்ல.
  4. வெளியே தெரியாமல் மரத்திற்காக நீர் சேகரிக்கிறது வேர். வேர் போன்று சில நல்லவர்கள் அமைதியாக, விளம்பரமில்லாமல் சமுதாயத்திற்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சில அற்பப் பதர்கள் மட்டுமே சிறிய சிறிய விசயங்களுக்காக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்; தற்பெருமை  பேசுகிறார்கள்; ஆர்ப்பரித்து, அமர்க்களம் செய்கிறார்கள்.
  5. கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே என்று பகவத் கீதை வகுப்பு  நடத்துபவர்கள், தாங்கள் ஆற்றும் பணிக்கு வெகுமதி இல்லையே, விளம்பரம்  இல்லையே, யாரும் பாராட்டவில்லையே என்று அங்கலாய்க்கிறார்கள்;   அவதிப் படுகிறார்கள்; விரக்தி அடைகிறார்கள்.
  6. இடிப்பதாலோ, அடிப்பதாலோ யாரும் உண்மையில் திருந்துவதில்லை. தாமே தாம் செய்வது தவறு என உணரும் பொழுது மட்டுமே ஒருவரால் உண்மையில்  திருந்த முடியும். ஆக, திருத்தம் என்பது உள்ளிருந்து முளைவிட வேண்டும்.
  7. ஒரு உணவகத்திற்குச் சென்று நூறு, இருநூறு உரூபா செலவழித்து உணவு அருந்துகிறோம். ஆனால், நம்மில் பலர் உணவு பரிமாறியவருக்கு இரண்டு உரூபா கூடக் கொடுப்பதில்லை. பணமிருந்தும் கொடுக்க மனம் இருப்பது  இல்லை. ஒருவேளை அந்தத் தோழர் பகுதி நேரக் கல்லுரி மாணவராகக் கூட இருக்கலாம். தயவு செய்து அவருக்கு உதவுங்கள்.
  8. அரசு மருத்துவ மனை வளாகத்தில் எச்சில் துப்புகிறோம். புகைக்கிறோம்.     இரைச்சல் போடுகிறோம். நோயாளிகளை நாம் சற்றும் நினைத்துக் கூட    பார்ப்பதில்லை. நாமே சுகாதார சீர்கேட்டை உண்டாக்கலாமா? மருத்துவ    மனைகள் தூய்மையாக இருக்க நாம் உதவ வேண்டும்.
  9. கிராமத்தில் பேருந்தில் ஏறியதும் வெற்றிலை, பாக்கு, புகையிலை போடும்  சிலரை கவனியுங்கள்.பயணம் முழுதும் வாயில் போட்டு குதப்பி விட்டு நகரில் வந்து இறங்கியதும் அழகான சாலையில் சிவப்பான தாம்பூலத்தை அனுபவித்துத் துப்புவார்கள். நம் நகரின் அழகையும், சுகாதாரத்தையும் நாமே பாழாக்குவது எவ்வகையில் நியாயம்? 
  10. நடைபாதை நாகரிகம் என்று ஒன்று உள்ளது.நடைபாதையில் நின்ற வண்ணம் ஊர்க் கதைகள் பேசிக்கொண்டு மற்றவர்கள் நடந்து செல்ல  இடையூறாக இருக்கக் கூடாது.



கருத்துகள் இல்லை: